Skip to main content

அரசுப் பள்ளியில் பாதிப்புக்கு ஆளான 13 மாணவிகள்! -மறைக்கப்பட்ட விவகாரம்!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நடுவப்பட்டியில் உள்ளது திரு ராமமூர்த்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி.  அந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள், 13 மாணவிகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள்.  இந்தக் கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர், தொலைபேசி மூலம் உதவும் அமைப்பான குழந்தைகள் உதவி மையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். விசாரணை நடந்தது. ஆனால்,  நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகள்,  பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு, வெவ்வேறு கல்லூரிகளில் போய்ச் சேர்ந்துவிட்டனர். நடவடிக்கைக்கு ஆளாகாத அந்த 2 ஆசிரியர்களும், அடுத்து எதுவும் பண்ணி விடுவார்களோ என்ற கவலை, அங்கு படிக்கின்ற 341 மாணவ, மாணவியரின் பெற்றோரை வாட்டி வதைக்கிறது.

 

 13 students affected in government school -The hidden affair!

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நடுவப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இப்படி ஒரு தகவலைச் சொன்னார், பெயர் வெளிவர விரும்பாத அந்த ஊர்க்காரர்.  

குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராமரிடம் பேசினோம்.
 

“என்ன நடந்துச்சுன்னா.. 27 நாள் ஸ்டடி வச்சோம். அப்ப எச்.எம்.கூட ஸ்கூல்ல இருந்தாங்க. பதிமூணு பிள்ளைங்கன்னா சொல்லுறாங்க? சைல்ட் ஹெல்ப் லைன்ல இருந்து ஸ்கூலுக்கு வந்து விசாரிச்சாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலகூட சம்பந்தப்பட்ட பெற்றோரைப் பார்த்து நான் பேசினேன். இப்ப யாரு இந்த விவகாரத்தை உங்ககிட்ட கொண்டு வந்தாங்கன்னு தெரியல. ஏதோ ஒரு வழியில் நான் பழிவாங்கப்படுகிறேன். நான் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். பிரச்சனை பண்ணுனதுக்குக் காரணம் அதுதான். என்னைப் பிடிக்காத ஆசிரியர்கள்தான் மாணவிகளைத் தூண்டிவிட்டாங்க.

 

 13 students affected in government school -The hidden affair!

 

குறிப்பாக ஒரு ஆசிரியை. அவங்க பெயரைச் சொல்ல நான் விரும்பல. யார்கிட்டயாச்சும் நன்கொடை கேட்டு,  ஸ்டடிக்கு வர்ற பசங்களுக்கு புரோட்டா, வடை, சாப்பாடுன்னு வாங்கிக்கொடுத்து படிக்க வைப்பேன். அதனால கொஞ்சம் உரிமை எடுத்துக் கண்டிப்பேன். அன்னைக்கு சாயங்காலம்.. இருட்டிருச்சு.. மணி 6-50 இருக்கும். கிளாஸ் ரூம்ல ரெண்டு கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் ஒரு பையனோடு ஒண்ணா படுத்திருத்தாங்க. அவன், ஒரு கேர்ள் ஸ்டூடண்ட் காலைப் பிடித்து இழுத்துக்கிட்டிருந்தான். நான் பார்த்துட்டேன். சத்தம் போட்டேன். இந்த விஷயத்தை எச்.எம்.கிட்டயும் சொன்னேன். பிரச்சனை இப்படித்தான் ஆரம்பிச்சுச்சு. நான் தவறு பண்ணியிருந்தால்.. மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்.” என்றார். 

 13 students affected in government school -The hidden affair!

 

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்புச்செல்வி நம்மிடம் “நாங்க மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலை பார்க்கிறவங்க. ராமர் சார் அவரு பாடம் உண்டு.. அவரு உண்டுன்னு இருக்கிறவர். எல்லாத்தயும் விசாரிச்சிட்டு,   சைல்ட் ஹெல்ப் லைன்காரங்க அந்த ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டாங்க. திரும்பவும் நீங்க விசாரிக்கிறீங்க. அந்த இன்னொரு வாத்தியார் பேரு பாரத்குமார். அவரு வந்து டிராயிங் சார்.

 

 13 students affected in government school -The hidden affair!

 

ஸ்டூடண்ட்ஸை அடிக்கிறப்ப படக்கூடாத இடத்துல ஸ்கேல் பட்டுச்சுன்னு சொன்னாங்க. மத்தபடி எதுவும் நடக்கல. அப்பவே, அவரை வார்ன் பண்ணிட்டேன். கிளாஸ் ரூம்ல ஸ்டூடண்ட்ஸ் படுத்திருந்ததை உடனே என்கிட்ட வந்து ராமர் சார் சொன்னாரு. நடந்ததை பேரண்ட்ஸ்கிட்ட நானும் சொன்னேன்.  ராமர் சார் கறாரா இருப்பாரு. அது சில டீச்சர்ஸுக்கு பிடிக்கல. அவ்வளவுதான். இனிமே பிரச்சனை வராம பார்த்துக்குவேன்.” என்றார். 

மாணவிகள் இருவரின் பெற்றோரைத் தொடர்புகொண்டோம். “அதுவந்து..” என்ற வார்த்தைக்குப் பிறகு எதுவும் பேசவில்லை. மகள்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தால் அவர்கள் பேச முன்வரவில்லை. அந்தப் பள்ளியில்  விசாரணை நடத்தியது குறித்து சைல்ட் ஹெல்ப் லைனிடம்  கேட்டோம். அவர்களிடமிருந்தும் சரியான பதில் இல்லை.   

தங்களுக்குப் பிடிக்காதவர் என்பதால், சில ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு, அந்த ஆசிரியரை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்க முடியுமா? வகுப்பறையில் தவறாக நடந்ததைப் பார்த்துக் கண்டித்த ஆசிரியரை, மாணவிகளே திட்டமிட்டு, பழியை அவர் பக்கம் திருப்ப முடியுமா? பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது; மாணவிகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு, நடந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா? என கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.

 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.