தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

கட்சி தலைமைகள் ஒருபுறம் அரசியலில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அடிமட்ட தொண்டர்களும் தங்களுடைய களப்பணிகளை தொடங்கியுள்ளனர். அண்மையில் விஜய்யின் தவெகவிற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னத்தை கொண்டு செல்லும் வகையில் விசில் சின்னம் கொண்ட கவர் படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வைத்த விஜய், மேடையில் விடில் ஊதி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

Advertisment

பல இடங்களிலும் தவெகவினர் சிலர் கட்டுப்பாடின்றி விசில் ஊதி வருகின்றனர். இது பல்வேறு தரப்பில் எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. தூங்கும் நபர்களிடம், வயதானவர்களிடம் விசில் ஊதி தொந்தரவு செய்யக்கூடாது என அக்கட்சியின் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் அளவிற்கு இந்த விசில் விவகாரம் போய் இருக்கிறது.

இந்நிலையில் சிவகங்கையில் திமுக கவுன்சிலர் ஒருவர் தூய்மைப் பணியாளர்கள் என் வார்டில் இனி விசில் ஊதக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தோடு புதிய வழிமுறையை கொண்டுவந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

சிவகங்கை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள 21 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் அயூப்கான், என் வார்டில் இனி விசில் அடித்து குப்பைகளை சேகரிக்க கூடாது என வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார். அதில் பேசும் திமுக கவுன்சிலர் அயூப்கான்,''அதிகாலையில் சூரியன் உதித்தவுடன் நமது தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வருகிறார்கள். மக்களிடம் இருந்து குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு வீடாக வந்து விசில் ஊதுகிறார்கள். இனி இந்த வார்டில் இந்த ஊதி சத்தம் வேண்டாம் என்று அதற்கு பதிலாக குப்பைகளை சேகரிப்பது குறித்த பாடல்களை கொண்ட ஒலிப்பான் கருவியை கொடுத்துள்ளோம். இனிமேல் நம்ம வார்டில் இந்த சத்தம் தான் கேட்க வேண்டும். விசில் சத்தம் கேட்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.

மேலும் தூய்மைப் பணியாளர் கையில் இருந்த விசிலை வாங்கி குப்பையில் போட்டார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.