Mysteries surrounding the Chinese president and What is the danger for India?
சீனாவின் அதிபரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஷி ஜின்பிங், கடந்த இரு வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் தோன்றாதது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 21 முதல் ஜூன் 5, வரை, அவரது புகைப்படங்கள், உரைகள், அல்லது பொது தோற்றங்கள் எதுவும் இல்லை. இது சீன ஊடகங்களில் அவரது தினசரி செய்திகளுக்கு மாறாக உள்ளது. மேலும், பிரேசிலில் ஜூலை 6ஆம் தேதியன்று பிரேசிலில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. இது அவரது 12 ஆண்டு ஆட்சியில் முதல் முறையாகும். இந்த மர்மமான மறைவு, சீனாவில் உள்நாட்டு அரசியல் குழப்பம், ஆட்சிக் கவிழ்ப்பு வதந்திகள், மற்றும் இந்தியாவுக்கு எதிராக எழக்கூடிய புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஷி ஜின்பிங் கடைசியாக இந்த ஆண்டு மே 7 முதல் 10 தேதிகளில் ரஷ்யாவிற்கு சென்றிருந்தார். அதன்பின், மே 21 முதல் ஜூன் 5 வரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 4 அன்று பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுடன் நடந்த சந்திப்பு மற்றும் ஜூன் 24 அன்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான சந்திப்பு ஆகியவற்றின் வீடியோக்கள் மட்டுமே வெளியாகின. சீனாவின் முக்கிய ஊடகமான ‘பீப்பிள் டெய்லி’ (People’s Daily) இல் ஜூன் 2 முதல் 24 வரை ஷியின் பெயர் முதல் பக்கத்தில் இடம்பெறவில்லை. இது அவரது தினசரி செய்தி ஆதிக்கத்திற்கு மாறானது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், பிரதமர் லி கியாங் மற்றும் துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர், வெளிநாட்டு தலைவர்களுடனான முக்கிய சந்திப்புகளை கவனித்து வருகின்றனர். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டிற்கு லி கியாங் அனுப்பப்பட்டது, ‘அட்டவணை முரண்பாடு’ என்ற காரணத்தை சீனா முன்வைத்தாலும், இது உலக அளவில் ஊகங்களைத் தூண்டியுள்ளது.
சீனாவில் முக்கிய இராணுவத் தலைவர்களின் பதவி நீக்கம் மற்றும் மறைவு ஆகியவை, ஷியின் அதிகாரத்திற்கு எதிராக உள்நாட்டு சவால்கள் இருப்பதாக சந்தேகத்தை எழுப்புகிறது. கடந்த ஜூன் 29 தேதியன்று, மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஹி வெய்டாங், கடற்படை தளபதி லி ஹன்ஜுன், மற்றும் தேசிய அணு ஆணையத்தின் துணைத் தலைமைப் பொறியாளர் லியு ஷிபெங் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் பதவி நீக்கப்பட்டனர். இவர்கள் ஷி ஜின்பிங்க்க்கு விசுவாசமானவர்களாகக் கருதப்பட்டவர்கள். மேலும், மத்திய இராணுவ ஆணையத்தின் முதல் துணைத் தலைவர் ஜாங் யூஷியா, முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோவின் ஆதரவுடன், இராணுவத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாகவும், ஷி ஜின்பிங்கின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP)-யின் 20வது தேசிய மாநாட்டில், முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோ பொது மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, ஷி ஜின்பிங்கின் அதிகார வலிமையை வெளிப்படுத்தியது. ஆனால், தற்போது ஹூவின் ஆதரவாளர்கள் மீண்டும் செல்வாக்கு பெறுவதாகவும், சீர்திருத்தவாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான வாங் யாங், ஷி ஜின்பிங்கின் அடுத்த வாரிசாக பரிசீலிக்கப்படுவதாகவும் வதந்திகள் பரவுகின்றன. சீனாவில் ஷி ஜின்பிங் சிந்தனை (Xi Jinping Thought) என்ற கருத்தியல், பாடப்புத்தகங்களில் இருந்து படிப்படியாக அகற்றப்படுவதாகவும், இது ஷி ஜின்பிங்கின் செல்வாக்கு குறைவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 4ஆம் தேதியன்று, CCP-யின் பொலிட்பீரோ ஒரு புதிய ‘மத்தியக் குழு முடிவெடுக்கும் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு’ உருவாக்கப்பட்டதாக அறிவித்தது. இது ஷியின் தனிப்பட்ட அதிகாரத்தை குறைக்கும் முயற்சியாகவும் விளக்கப்படுகிறது.
ஷி ஜின்பிங்கின் திடீர் தலைமறைவு மற்றும் சீனாவில் உள்ள அரசியல் குழப்பம், இந்தியாவுக்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வரலாற்று ரீதியாக, சீனாவில் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள், எல்லைப் பகுதிகளில் மோதல்களாக வெளிப்பட்டுள்ளன. 2012 இல் போ ஷிலாய் அரசியல் நெருக்கடியின்போது, தென் சீனக் கடலில் பதற்றங்கள் உயர்ந்தன. 2020 இல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உள்நாட்டு இராணுவ மாற்றங்களின் போது, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நிகழ்ந்தது, இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தற்போது, சீனாவின் பொருளாதார சவால்கள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள் ஆகியவை உள்நாட்டு அழுத்தத்தை அதிகரித்துள்ளன. இதனால், இந்திய-சீன எல்லையில் குறிப்பாக அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமின் சிக்கன்ஸ் நெக் பகுதிகளில் பதற்றங்களை உருவாக்குவதற்கு சீனா முயலலாம் என யூகிக்கப்படுகிறது. மேலும், சீனாவின் ‘திரிசூல நீதி’ (Trishul Niti) மூலம் நேபாளம், பூட்டான், மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து வடகிழக்கு இந்தியாவை மிரட்டும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அறிக்கைகள் உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள், இந்த மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.
இருப்பினும், ஷியின் அதிகாரம் குறைந்தால், சீனாவின் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கைகள், குறிப்பாக இந்திய - சீன எல்லைப் பிரச்சனைகள் மற்றும் தென் சீனக் கடல் தற்காலிகமாக தணியலாம். ஆனால், புதிய தலைவர் ஒருவர், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, இந்தியாவை இராணுவ ரீதியாகவோ அல்லது இராஜதந்திர ரீதியாகவோ சோதிக்கலாம். ஷி ஜின்பிங்கின் ஆட்சி முடிவுக்கு வந்தால், பின்வருபவர்கள் அடுத்த சீன அதிபராக பரிசீலிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஷி ஜின்பிங்கின் தலைமறைவு, உடல்நலக் காரணங்களாக இருக்கலாம். ஆனால் CCP-யின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள், இராணுவ புரட்சி, மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு வதந்திகள் ஆகியவை உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா, சீனாவின் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், குறிப்பாக எல்லைப் பகுதிகளில். சீனாவின் உள்நாட்டு நெருக்கடிகள், பொருளாதார சவால்கள், மற்றும் புவிசார் அரசியல் உத்திகள் இந்தியாவுக்கு புதிய சவால்களை உருவாக்கலாம். இந்திய அரசு, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை வலுப்படுத்தி, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
-அழகு முத்து ஈஸ்வரன்
Follow Us