மனுதர்மமும், ஆகமங்களும், சாஸ்திரங்களும், ஆலயப் புனரமைப்பு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் நடத்துவது உத்தமம் என்று கூறுகின்றன. இந்த ஆகம ஆச்சாரங்களின் அடிப்படையில் தான் கோயில்களில் மகா கும்பாபிஷேகங்கள் மரபுப்படி நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம், மரபு முறையைத் தாண்டி, 15 ஆண்டுகளுக்குப் பின்னர், தடைகள் தகர்க்கப்பட்டு, தற்போது ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் 07-07-2025 அன்று காலை 6:00 முதல் 6:47 மணி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆலயத்தின் பல்வேறு புனரமைப்புப் பணிகளும், சீர்திருத்தங்களும் வேகமெடுத்தன. இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ஆர். சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் 07-07-2025 அன்று காலை 6:00 முதல் 6:47 மணி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக, 07-07-2025 அன்று மதியம் 12:05 முதல் 12:47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளதாகவும், எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம் என்று உத்தரவிட்டது. மேலும், இனி வரும் காலங்களில் திருச்செந்தூர் கோயில் நிகழ்வுகள் நடைபெறும்போது, கோயில் விதாகரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கும்பாபிஷேக நேரம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஆர். சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதியரசர்களான மனோஜ் மிஸ்ரா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் கோயில் விதாகர் மட்டுமே நேரத்தைக் குறிக்க வேண்டும் என்றும், ஆனால் உயர் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து அதன் அடிப்படையில் நேரம் குறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், சாஸ்திரப்படி கும்பாபிஷேகம் நண்பகலில் நடத்தப்பட வேண்டும் எனவும், எனவே வரும் 07-07-2025 அன்று கோயில் விதாகர் பரிந்துரைக்கும் மதியம் 12:05 முதல் 12:45 மணி வரையிலான நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறியதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு நிர்வகித்து வந்தாலும், குடமுழுக்கு போன்ற விவகாரங்களில் கோயில் விதாகரே நேரத்தைக் குறிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் கமிட்டி அமைத்து கும்பாபிஷேக நேரத்தைக் குறிக்க முடியாது என்றும் வாதிட்டார். குறிப்பாக, கோயில் ஆகம விதிகளில் தலையிட மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஏனெனில் இது மத ரீதியான விவகாரம் என்றும் அவர் கூறினார்.
மனுதாரரின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அப்படிச் செய்யும் பட்சத்தில் அது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை ஆய்வு செய்ய நாங்கள் ஒன்றும் நிபுணர்கள் கிடையாது. மேலும் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கும் உங்களுக்கும் இருக்கும் பிரச்சினையை நீங்கள் வழக்காக தொடுத்துள்ளீர்கள். குழுத்தரப்பில், குறித்துக் கொடுத்த நேரங்களில் ஒன்றைத்தான் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் தலையிட்டு நீங்கள் தான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். அத்துடன் தற்போது கும்பாபிஷேக தேதி மற்றும் நேரம் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனை எவ்வாறு மாற்ற முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.
இவ்வாறாக, திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விவகாரம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று அடுத்துடுத்து எடுத்து செல்லப்பட்ட நிலையில், இறுதியில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் ஆலயத்தின் கும்பாபிஷேகம் பற்றிய பெரும் எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, கும்பாபிஷேகப் பணிகள் வேகமெடுக்க, ஜூலை 1ஆம் தேதி 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு, தொடர்ந்து 6 நாட்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அண்மைக் காலங்களில், திருச்செந்தூர் செந்திலாண்டவரைத் தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அன்றாடம் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறது.
குறிப்பாக, குடமுழுக்கு நாளன்று காலையில் பக்தர்களின் கூட்டம் கடலலைக்கு நிகராக, சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் வரை திரண்டிருந்தனர்.குடமுழுக்கு நாளன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, உள்ளே மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, மரபுப்படி வாசனை மற்றும் தானிய திருக்குட நன்னீராட்டு ஆகியவை நடைபெற்றன. காலை 6:22 மணிக்கு, கோயிலின் ராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு, தந்திரிகள், போத்திமார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. குடமுழுக்கின்போது, ஓதுவார்கள் தமிழில் வேதங்களை ஓதினர். இந்தக் காட்சியைத் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். குடமுழுக்கு முடிந்தவுடன், புனித நீர் ட்ரோன்கள் மூலம் ஆங்காங்கே திரண்டிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதற்காக 20 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. காவல்துறையின் திட்டமிட்ட முன்னேற்பாடுகளால் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
நம்மிடம் பேசிய நகரின் முக்கியமானவர்களில் ஒருவரான ஜெயந்திநாதன், குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாகவே செய்திருந்தார்கள். பக்தர்களுக்கான அத்தியாவசியப் பணிகளையும் முறையாகவே செய்திருந்தார்கள். மகா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. இங்கு, மற்ற பகுதிகளைப் போலல்லாமல், மூலவர் கோபுரமும் ராஜகோபுரமும் தனித்தனியாக உள்ளன. ஆனால், மூலவர் கோபுரத்துக்கு மட்டும் தங்கக் கலசம் அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற கோபுரக் கலசங்கள் சாதாரணமானவை. திருக்கோயிலுக்கு வருமானம் நன்றாகவே கிடைத்து வருகிறது. அதைக் கொண்டு ராஜகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களின் கலசங்களையும் தங்கத்தால் அமைக்க வேண்டுமென நீண்ட நாள்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அறநிலையத் துறையும் அரசும் இதனைப் பரிசீலித்து, தங்கக் கலசங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார்.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் 143 திருக்கோயில்களில் 809 திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். குறிப்பாக, திருச்செந்தூர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 400 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளுடன் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தடைகள் தகர்க்கப்பட்டு நடைபெற்ற தென் மண்டலத்தின் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேகம், தமிழ்நாட்டையும் தாண்டி பேசுபொருளாக மாறியுள்ளது.