Great sorrow at the Karbala memorial - a prayer hall Photograph: (pak)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொழுகையின் போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக இதுவரை 169 பேர் காயமடைந்ததாகவும், அதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்து சிதைந்த தனது அன்பிற்குரிய குடும்ப உறுப்பினர்களின் உடல்கள், துண்டிக்கப்பட்ட கை, கால்கள் என உள்ளூர்வாசிகள் தேடும் மனதை உலுக்கும் கொடூர காட்சிகள் கொண்ட காணொளிகள் வைரலாக பரவி வருகிறது.
இன்று (06/02/2026) வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம்பர்காவில் தொழுகைக்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என்பது தெரியவந்திருப்பதாக கூறப்பட்டுக்கிட்டது. இமாம்பர்கா அல்லது இமாம்படா என்பது ஷியா முஸ்லிம்கள் கர்பலா துயரத்தை நினைவுகூரும் ஒரு துக்க இடமாகும்.
கர்பலா துயரம் என்பது ஈராக்கின் கர்பலாவில், நபிகள் நாயகத்தின் பேரர் இமாம் ஹுசைன் யஸீதின் படைகளால் குடும்பம் மற்றும் தோழர்களுடன் படுகொலை செய்யப்பட்ட துயரச் சம்பவமாகும். இமாம் ஹுசைன் ஆற்றிய இந்த உச்சக்கட்டத் தியாகம் இன்றும் கர்பலா துயரம் என பல்வேறு இடங்களில் நினைவு கூறப்படுகிறது. அப்படி துயரத்தை அனுசரிக்கும் ஒரு இடத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குண்டுவெடிப்பு நடந்த உடனேயே மருத்துவம் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தலைநகரில் ஆறு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது பெரிய வெடிப்பாகும். கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கார் வெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகாரிகள் அந்த நிகழ்வையும் தற்கொலைத் தாக்குதல் என்று வகைப்படுத்தினர்.
கடந்த ஆண்டு மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானைக் குற்றம் சாட்டி, நாடு "போர் நிலையில்" இருப்பதாக அறிவித்திருந்தார்.
"நாம் ஒரு போர் நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலோ அல்லது பலுசிஸ்தானிலோ மட்டுமே இதை எதிர்த்துப் போராடுகிறது என்று நினைப்பவர்கள் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த தற்கொலைத் தாக்குதலை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது முழு பாகிஸ்தானுக்கும் ஒரு போர், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இராணுவம் தினசரி தியாகங்களைச் செய்து வருகிறது," என்று ஆசிப் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தான் இன்னொரு தற்கொலை படை தாக்குதலை சந்தித்திருக்கிறது இஸ்லாமாபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us