விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில், 123 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மக்களுக்கு தர்மமாக கருங்கற்களால் ஆன தண்ணீர்க் கிணறு அமைத்துக் கொடுத்த தகவல் சொல்லும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மல்லாங்கிணரில் இருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவிடம் அருகில் கருங்கற்களால் சதுர வடிவில் கட்டப்பட்ட கிணற்றின் மேல் விளிம்பில் ஒரு கல்வெட்டு இருப்பதை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, நூர்சாகிபுரம் சு. சிவகுமார் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: பழங்காலம் முதல் மன்னர்கள், வணிகர்கள், ஜமீன்தார்கள், கிராம ஆட்சியாளர்கள், மக்கள் எனப் பலரும் தானம் செய்து அதைக் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் பதிவு செய்துள்ளனர். இதில் தண்ணீர் தானம் மிகப் புண்ணியமாகக் கருதப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/11/5-2025-11-11-17-51-46.jpg)
கிணற்றின் விளிம்பில் இரண்டு வரியில் உள்ள கல்வெட்டு, கலியுகம் 5002, பிலவ ஆண்டு மாசி மாதம், இங்கிலிஸ் வருடம் 1902-ல் மல்லாங்கிணர் க. நாகம நாயக்கர் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர் ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக தர்மமாக கருங்கற்களால் ஆன இக்கிணற்றை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதில் கலி, தமிழ், ஆங்கில ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் 1904-ல் நாகமநாயக்கர் இவ்வூர் சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மடப்பள்ளி ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார் என அக்கோயில் கல்வெட்டில் உள்ளது. அக்காலகட்டத்தில் இக்கிராமத்தின் ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்திருக்கலாம்.
கி.பி. 13-ம் நூற்றாண்டில், குலசேகரப்பாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பாட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனூரில் தோண்டப்பட்டுள்ளது. இம்மாவட்டம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் இத்தகைய கிணறு, குளங்களைத் தனி நபர்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர். நரிக்குடியில் உலகப்பன் சேருவைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பணக்குடும்பன் குளங்களையும், சோலைசேரியில் பெத்தநல்லுநாயக்கர் எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாகச் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Follow Us