Congress asks for 39 plus? - DMK shows its resolve Photograph: (dmk alliance)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்து வருகிறது. அந்தவகையில் இன்று திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்களும் வெளியாகி வந்தன. பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் 85 நாட்களுக்கு பிறகு இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிரீஸ் சோடங்கர் தலைமையில் குழுவினர் உள்ளே சென்றுள்ளனர்.
முதற்கட்டமாக காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் 39 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை எம்பி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளைத் தாண்டி புதிதாக 7 கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்டவை திமுக கூட்டணிக்கு புதிய வரவாக உள்ளன. அதனடிப்படையில் அந்த கட்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் திமுக தரப்பில் காங்கிரசுக்கு 25 பிளஸ் 1 அளவில் சீட்டுகள் ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்றைய தினமே தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகளை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
Follow Us