America – Israel – Iran conflict: History… Religion… Power struggle? Photograph: (war)
“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீய்ய்…”
இப்படித்தான் நக்கீரன் இணையதள வாசக நண்பர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டு தனது மனக்கசப்பை வெளிப்படுத்தினார். “டிவியை ஆன் பண்ணினா அமெரிக்கா… இஸ்ரேல்… ஈரான்… இவங்களுக்குள்ள நடக்கிற போர் பற்றிதான் செய்தி. நியூஸ் பேப்பரை புரட்டினாலும் அதே ஹெட்லைன்ஸ். இந்த செய்திகளை எல்லாம் மக்கள் கவனமாக பார்ப்பாங்க, வாசிப்பாங்க… ஆனா அடுத்த நிமிஷமே கடந்து போயிடுறாங்க. ஆனா உண்மையிலேயே யார் தவறு பண்ணுறாங்க? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? இல்லைன்னா இரண்டு தரப்பிலும் குற்றம் இருக்கிறதா? இந்த மாதிரி போர்கள் எல்லாம் தேவைதானா? இவங்களுக்கு யார் இதையெல்லாம் சொல்லுறது?” என்று அவர் ரொம்பவே வேதனையோடு பேசினார்.
ஒரு வாசகரின் இந்தக் கேள்வி சாதாரண புலம்பலாக இருக்கலாம். ஆனாலும் அதற்குள் ஒரு பெரிய உண்மை மறைந்து கிடக்கிறது. அந்த ஒரு கேள்வியே நம்மை வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கத் தூண்டியது.
மத்திய கிழக்கின் எரியும் அரசியல்: அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் மோதல் எப்படி உருவானது?
இன்றைய உலக அரசியலில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே இருக்கும் பதற்றம். வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. சில நேரங்களில் ஈரானுடன் தொடர்புடைய ஆயுத அமைப்புகள் அந்தப் பகுதிகளை ட்ரோன் அல்லது ஏவுகணைகளால் தாக்க முயற்சிக்கின்றன என்ற செய்திகள் வெளிவருகின்றன.
America – Israel – Iran conflict: History… Religion… Power struggle? Photograph: (war)
இந்த பிரச்சனையின் மூலக்காரணம் என்ன?
இது மதப் பிரச்சனையா? எண்ணெய் வளங்களுக்கான போட்டியா? அல்லது உலக அரசியல் ஆதிக்கத்துக்கான போட்டியா? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வரலாற்றை நீண்ட தூரம் பின்னோக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்: மூன்று மதங்களின் மரபு முன்னோர் ஆபிரகாம்
war Photograph: (tension)
மத்திய கிழக்கு மத வரலாற்றைப் பற்றி பேசும்போது ஆபிரகாம் (இஸ்லாமிய மரபில் இப்ராஹீம்) என்ற பெயரைத் தவிர்க்க முடியாது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் அவரை ஒரு முக்கிய முன்னோராக மதிக்கின்றன. பல தெய்வங்களை வழிபட்ட காலத்தில் “ஒரே கடவுள்” என்ற எண்ணத்தை வலியுறுத்தியவர் ஆபிரகாம் என்று மத வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
மத மரபுகளின் படி அவருக்கு இரண்டு மகன்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது: ஐசக் மற்றும் இஸ்மாயில். யூத மரபில் ஐசக்கின் சந்ததியிலிருந்து இஸ்ரேல் மக்கள் உருவானார்கள் என்று கருதப்படுகிறது. அந்த யூத சமூகத்தில்தான் பின்னர் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் பின்னர் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர். இஸ்லாமிய பாரம்பரியக் குறிப்புகளின் படி, இஸ்மாயிலின் வழித்தோன்றலில் இருந்து அரபு மக்களின் ஒரு பகுதி உருவானதாகவும், அதே மரபில்தான் பின்னர் நபி முஹம்மது பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் அந்த மரபிலிருந்து வந்தவர்கள் என்று வரலாறு கூறுவதில்லை.
1948 – இஸ்ரேல் உருவாக்கம்
war Photograph: (world)
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதர்களுக்கான தனி நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. இந்த முடிவை பல அரபு நாடுகள் எதிர்த்ததால் உடனே போர் வெடித்தது. இந்தச் சம்பவம் தான் இன்று வரை நீடித்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலின் முக்கிய தொடக்கமாகக் கருதப்படுகிறது.
சுன்னி - ஷியா பிரிவு எப்படி உருவானது?
நபி முஹம்மது மறைந்த பிறகு இஸ்லாமிய உலகில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. இஸ்லாமிய சமுதாயத்தின் தலைமை யாருக்குச் செல்ல வேண்டும்? ஒரு பகுதி மக்கள் நபியின் குடும்பத்திலிருந்து ஒருவரே தலைவராக வர வேண்டும் என்று நம்பினர். இவர்கள்தான் பின்னர் ஷியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டனர். மற்றொரு பகுதி மக்கள் சமுதாயமே தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதினர். இவர்கள்தான் சுன்னி முஸ்லிம்கள். ஆரம்பத்தில் இது ஒரு கருத்து வேறுபாடாக இருந்தாலும், பின்னர் சில நாடுகளில் இது அரசியல் மற்றும் அதிகார மோதல்களாக வளர்ந்தது.
1979 - ஈரான் புரட்சி
war Photograph: (world)
1979ஆம் ஆண்டு ஈரானில் நடந்த புரட்சி மத்திய கிழக்கு (ஈரான், ஈராக், சவுதி அரேபியா, இஸ்ரேல், சிரியா போன்ற நாடுகள்) அரசியலை முற்றிலும் மாற்றிய ஒரு சம்பவமாகும். அதற்கு முன்பு ஈரான் மன்னராட்சி அமைப்பின் கீழ் இருந்தது. அந்த நாட்டின் மன்னர் மேற்கத்திய நாடுகளுடன் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவை) நெருங்கிய உறவைப் பேணி வந்தார். ஆனால் அதே காலத்தில் அரசியல் அடக்குமுறை, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வெளிநாட்டு செல்வாக்கு குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி உருவாகத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையில் மக்கள் போராட்டம் வெடித்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் மதத் தலைவர்களின் தலைமையில் ஈரான் “இஸ்லாமியக் குடியரசு” என்ற புதிய அரசியல் அமைப்பாக மாறியது.
ஈராக் - ஈரான் போர்
war Photograph: (world)
1979 புரட்சிக்குப் பிறகு மத்திய கிழக்கில் அரசியல் நிலைமை மிகவும் பதற்றமாக மாறியது. 1980ஆம் ஆண்டு ஈராக் தலைவர் சதாம் ஹுசைன் ஈரானுக்கு எதிராக போரை தொடங்கினார். எல்லை பிரச்சனைகளுடன் சேர்ந்து பிராந்திய அதிகார போட்டி உள்ளிட்ட பல காரணங்கள் இந்தப் போர் உருவாக வழிவகுத்தன. இந்த போர் சுமார் எட்டு ஆண்டுகள் நீடித்தது. இரு நாடுகளும் மிகப்பெரிய மனித மற்றும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தன.
குவைத் மீது ஈராக் தாக்குதல்
war Photograph: (world)
ஈரான் போருக்குப் பிறகு ஈராக் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. எண்ணெய் உற்பத்தி மற்றும் கடன் விவகாரங்களில் குவைத் மற்றும் ஈராக் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் 1990ஆம் ஆண்டு ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. இதற்குப் பதிலாக அமெரிக்கா தலைமையிலான பல நாடுகள் கூட்டணியாக இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டன. 1991ஆம் ஆண்டு நடந்த வளைகுடா போரில் குவைத் மீட்கப்பட்டது.
செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் (2001)
war Photograph: (world)
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் மீது விமானங்களை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி அமைப்பாக அல்கொய்தா அமைப்பு இருந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பின்னர் 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
சதாம் ஹுசைன் ஆட்சியின் முடிவு (2003–2006)
war Photograph: (world)
குவைத் போருக்குப் பிறகும் ஈராக் அரசியலில் பதற்றம் நீடித்துக் கொண்டே இருந்தது. 2003ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் ஈராக் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டன. அந்த நடவடிக்கையின் போது சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானின் அணு திட்டம்
war Photograph: (world)
2000-களில் இருந்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஈரான் தனது அணு திட்டம் மின்சாரம் உற்பத்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக மட்டுமே என்று கூறுகிறது. இந்த விவாதம் இன்னும் சர்வதேச அரசியலில் தொடர்கிறது.
அமெரிக்கா - ஈரான் பதற்றம் அதிகரித்தது
2015ஆம் ஆண்டு ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானுடன் ஒரு முக்கிய அணு ஒப்பந்தத்தை செய்தன. ஆனால் 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். இதனால் அமெரிக்கா – ஈரான் உறவில் மீண்டும் கடும் பதற்றம் உருவானது. 2020 ஜனவரி மாதம் ஈரான் புரட்சிகர காவல் படையின் முக்கிய தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மத்திய கிழக்கு அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2023 அக்டோபர் 7 தாக்குதல்
war Photograph: (world)
2023 அக்டோபர் 7 அன்று காசா பகுதியில் இருந்து ஹமாஸ் என்ற ஆயுத அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து பெரிய தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்படி சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகக் கடத்தப்பட்டனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றன.
காமேனி கொலை: மத்திய கிழக்கில் புதிய பதற்றம்
war Photograph: (world)
மத்திய கிழக்கு அரசியலில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியவர் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி. 1989ஆம் ஆண்டு முதல் ஈரானின் உயர்ந்த அதிகாரம் அவரது கைகளிலேயே இருந்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் புதிய போர் பதற்றம் உருவானது.