war Photograph: (tention)
அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
இந்நிலையில் பஹ்ரைனில் வாழ்ந்து வரும் புஷ்ப பாரதி ஸ்ரீனிவாசன் அங்கு நிலவும் சூழல்களில் எக்ஸ்க்ளூசிவ்வாக நக்கீரனிடம் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
இதற்கு முன்பு இதைப்போன்ற போர் அனுபவங்களை பார்த்துள்ளீர்களா ?
இல்லை. இது மாதிரி போர் பதற்றம் என்பது இதுதான் முதல் தடவை பார்க்கிறோம். சில மாதங்கள் முன்னாடி ஒரு தடவை இந்த மாதிரி ஆரம்பிச்சாங்க. ஆனால் எதுவும் தாக்குதல் நடத்தவில்லை. கத்தாரில் மட்டும் முதலில் நாங்க அடிப்போம் என்று சொல்லிவிட்டு செய்தார்கள். அவர்கள் தயாராக இருந்ததால். அந்த கத்தாரில் இருக்கும் நேவல் பேஸில் இருந்தும் கத்தார் டிபன்ஸில் இருந்தும் அதை இன்டர்செப்ட் செய்து முதலிலேயே முறி அடிச்சிட்டாங்க. பில்டிங் ஆகட்டும் ஆளுங்களுக்கு ஆகட்டும் எந்த சேதமும் இல்லை. அது ஒரே ஒருநாள் ஒரு தடவை நடந்த விஷயம்தான் அது. சரி ஓகே என்று எல்லாருமே கடந்து போயாச்சு. இப்போது என்ன ஆகிறது என்றால் குறிப்பாக பார்த்தால் 28ஆம் தேதி பிப்ரவரி 28ஆம் தேதி தான் இது தொடங்கியது.
இன்று காலை வாக்கிங் போயிட்டு வந்து கொண்டிருந்த போது சத்தம் கேட்டது. இங்கு யு.எஸ் நெவிக்கு கப்பல் நிறுத்தும் இடமும், சரி செய்கிற இடமும் உள்ளது. அதை இரண்டையும் நொறுக்கி விட்டார்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. எதிர்பார்க்காத சூழல். யாரோ இருவர் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு இடையே இந்த மாதிரி நாடுகள் அவஸ்தைப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் பஹ்ரைன், துபாய் எல்லாம் அமைதியான இடங்களுக்கு பெயர் போனவை. அமைதியாக இருக்கும், பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தத்தை கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டம் இது.
போர்கள் தாக்குதல்கள் குறித்து நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது சிலவை ஆர்வமாக இருக்கும் சிலவை வருத்தமாக இருக்கும். ஆனால் நேரில் அதைப் பார்க்கும் போது பதற்றமும் இருக்கும். இந்த பக்கமும் அந்த பக்கமும் சத்தங்கள் கேட்கும் போது அதுவும் வெடிகுண்டு சத்தம் கேட்கும்போது என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. சாதாரண மனிதர்களுக்கு கண்டிப்பாக போர் பதற்றம் இருக்கும். இங்கிருந்து ஊருக்கு போய்விடலாம் என நினைப்பவர்கள் கூட போக முடியாது. எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலையில் பத்தரை மணிக்கு தான் முதல் அட்டாக் நடந்தது. நேவல் பேஸில் இருந்து யாரும் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை நடந்துவிட்டது. மக்களுக்கு அலர்ட் கொடுக்கும் வகையில் சைரன் கொடுத்தார்கள். செல்போனில் அலர்ட் மெசேஜ் வந்தது. பாதுகாப்பான இடங்களில் இருங்க என்று சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே வராதீங்க, பாதுகாப்பான இடத்தில் இருங்க, சாலையில் சுத்தாதீங்க என அலர்ட் பண்றாங்க. அதில் ஒன்னும் பிரச்சனை கிடையாது. இஸ்ரேல் மாதிரியோ அல்லது வேறு நாடுகள் போன்றோ நேரடியாக எல்லா இடத்திலும் தாக்கவில்லை. அமெரிக்கன் பேசிஸ் எங்கே இருக்கோ அங்கே மட்டும் தான் தாக்குவோம் அவர்களுடைய பொருட்களைதான் நாங்க சேதப்படுத்துவோம் அப்படின்னு சொல்லி விட்டுதான் செய்றாங்க.
நேற்று முன்தினம் துபாயில் இரண்டு மூன்று கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது. அமேசானுடைய டேட்டா சென்டரை தாக்கி இருக்கிறார்கள். துபாய்ல ஒன் ஆப் தி பிக்கஸ்ட் டேட்டா சென்டர். அது இந்த கல்ப் ரீஜியனுக்கு அங்கிருந்துதான் ஆபரேட் ஆகிறது. அமேசானுடைய வெப் சர்வீஸ் எல்லாமே அங்கே இருந்து தான் போகிறது. அதை தாக்கி உள்ளார்கள். இந்த மாதிரி அமெரிக்காவுக்கு சொந்தமான தளங்கள், கட்டிடங்கள், அவர்களுடைய பொருட்கள், அவர்களுடைய ராணுவ தளவாடங்கள் இத எல்லாத்தையும் நாங்கள் தாக்குவோம் என்று சொல்லிருக்காங்க. இதுதான் நடந்தது.
இங்கு மட்டும் 19 ட்ரோன்களை முறி அடிச்சிருக்காங்க .அதில் ஒன்று ஹோட்டல் மீதும், இன்னொன்னு வந்து ஒரு ரெசிடென்சியல் டவர்ஸ் மீதும் மோதியுள்ளது. இதை தவிர்த்து பெரிய அளவில் மனுஷங்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது. அதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம். 'சரி ஓகே நமக்கு ஒன்னும் நடக்காது' என்ற ஒரு நம்பிக்கையில இருக்கலாம். அது கூட எதுவரைக்கும் போகும் தெரியாது. ஆரம்பத்தில் நல்லா தான் போயிட்டு இருக்கும். அதற்கு பிறகு போர் உச்சத்தை அடையும். பாதுகாப்பு முக்கியம் என்ற பட்சத்தில் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து பேசி எங்கயாவது ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கலாம். அரசாங்கம் தேவையான அளவுக்கு ஷெல்டர்ஸ் கொடுத்திருக்காங்க.
Follow Us