AI Summit in India-Hotel rooms sold out Photograph: (india)
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2026 ஆம் ஆண்டிற்கான முதல் 'AI தாக்க உச்சி மாநாடு' நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை கட்டணங்கள் பகீர் வேகத்தில் உயர்ந்துள்ளன. இந்த மாநாடு வரும் பிப்ரவரி 16 முதல் 20 வரை மத்திய டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள், பேச்சாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாடு, பிரான்ஸ் AI உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. இது உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய AI உச்சி மாநாடாகும்.
இந்திய அரசின் கணிப்பின்படி இந்த நிகழ்விற்கு உலகம் முழுவதிலுமிருந்து 35,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக தேவை காரணமாக, ஹோட்டல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. வழக்கமாக டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை விலை கொண்ட அறைகள் இப்போது 5 லட்சம் என்ற விலைக்கு புக் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பயணங்களை எளிது படுத்தும் வலைத்தளங்களில் இந்த மாநாடு நடைபெறும் பிப்ரவரி 19 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில், பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை விலைகள் ஒரு இரவுக்கு சில லட்ச ரூபாயைத் தொட்டுள்ளது. அதிலும் ஆடம்பர பிரிவு என்றால் ஒரு இரவுக்கு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சத்தைத் தாண்டி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயண போர்டல் இக்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் பாஜ்பாய் கூறுகையில், 'உச்சிமாநாடு காலத்தில் டெல்லி ஹோட்டல் அறைகள் வாடகை ஒரு இரவுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டிவிட்டன.
"இந்தியா AI தாக்க உச்சி மாநாடு டெல்லி ஹோட்டல் கட்டணங்களை நிச்சயமாக பாதித்துள்ளது. டெல்லியில் உள்ள பல 5 நட்சத்திர ஹோட்டல்கள் பிப்ரவரி 16-20 க்கு இடையில் ஒரு இரவுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன," என்று எக்ஸ் பதிவில் பதிவில் தெரிவித்துள்ளார்.
லீலா பேலஸ், ஐடிசி மௌரியா மற்றும் தாஜ் பேலஸ் போன்ற முன்னணி ஹோட்டல்களும் உச்சிமாநாட்டு காலத்தில் புக் செய்யப்படும் அறை கட்டணங்களை உயர்த்தியுள்ளன. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு மத்திய டெல்லியில் ஹோட்டல் அறைகள் தேவை அதிகம் உள்ளது. பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 20 வரையிலான தேதிகளில் இம்பீரியல், ஷாங்க்ரி-லா ஈரோஸ் மற்றும் தி பார்க் உள்ளிட்ட ஹோட்டல்களில் அறைகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதுவரை நடைபெற்ற நான்கு உலகளாவிய AI உச்சிமாநாடுகளில், இந்திய AI தாக்க உச்சிமாநாடு மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இதில் 15 முதல் 20 அரசாங்கத் தலைவர்கள், 50 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட உலகளாவிய AI சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து சுமார் 500 முன்னணி நபர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us