ஜெயலலிதா 1991-ல் முதல் முறை தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஜெயலலிதா மட்டும் அல்லாமல் அவரின் நிழலாக அறியப்படும் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை வாங்கி குவிப்பதில் மும்முரமாக இறங்கினர். இந்த காலகட்டத்தில் தான் தஞ்சையில் பிரபலமாக உள்ள வினோதகன் மருத்துவமனை சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனால் வாங்கப்பட்டது. அப்போதைய சூழலில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த மருத்துவமனை வாங்கப்பட்டதன் பின்னணி குறித்து 30.04.1992 தேதியிட்ட நக்கீரனில் செய்தி வெளியானது.

Sasikala Brother's Hospital Background

ஜெயலலிதாவின் நிழல் மற்றும் தோழி சசிகலாவின் சகோதரர்களில் ஒருவர் டாக்டர் வினோதகன். தற்போது தஞ்சையில் உள்ள பல பில்டிங் முதலாளிகளையும் சில உரிமையாளர்களையும் மிரட்டி வருகிறார். காரணம், நடராசன் குடும்ப வகையறாக்களுக்கும் சசிகலாவின் குடும்ப வகையறாக்களுக்கும் முற்றி வரும் சொத்து சேர்க்கும் போட்டிதான்.

Advertisment

நடராஜனின் உறவு வகைகள் இந்த விசயத்தில் தற்காலிகமாக சோடையாகியுள்ளது. சசிகலாவின் சகோதரர்கள்தான் புகுந்து விளையாடுகின்றனர். அதனால்தான் தஞ்சை நகரை சுற்றியுள்ள பல கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தி தங்கள் பெயருக்கு கிரயமாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் டாக்டர் வினோதகன் பெருமுயற்சி செய்து சமீபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய சொத்து ‘‘தஞ்சை மெடிக்கல் சென்டர்’’ என்கிற மிகப் பெரிய மருத்துவமனை ஆகும். இதை வினோதகன் வாங்கி விட்டார் என்பதுதான் பல பேருக்கு தெரியும். ஆனால், இது எப்படி வாங்கப்பட்டது, யார் யார் பார்ட்னர்கள்! பணம் வந்த முறை ஆகியவை பெரும் கதை.

அதிராம்பட்டினம் முஸ்லிம் பெரியவர் ஒருவருக்கு சொந்தமானது இந்த மருத்துவமனை. அந்த பெரியவர் சமீபத்தில்தான் கார் டிரைவரால் கொலை செய்யப்பட்டு விட்டாராம். பெரியவரின் வாரிசுகளை டாக்டர் வினோதகன் அணுகி கட்டாயப்படுத்தி மருத்துவமனையை விலை பேசியுள்ளார். ஒருகோடி ரூபாய்க்கு கட்டிடம் மற்றும் மருத்துவக் கருவிகளை விலைபேசி முடித்த வினோதகன் தஞ்சை ராஜா மிராசுதார், மற்றும் மருத்துவக் கல்லூரி டாக்டர்களை அணுகி மெடிக்கல் சென்டரை நான் வாங்கப் போகிறேன். நீங்கள் ஆளுக்கு மூன்றரை லட்சம் பணம் கொடுங்கள். பாக்கி தொகையைஇந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் மூலம் ஏற்பாடு செய்கிறேன்’’ என்று கேட்டிருக்கிறார். பெரிய இடத்து விவகாரமாச்சே! என பல டாக்டர்கள் பயந்து ஒதுங்கி விட்டனர். பதிமூன்று டாக்டர்கள் துணிந்து வினோதகனிடம், ‘‘நாங்கள் கொடுக்கும் பணத்துக்கு டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் செய்யும்போது எங்களையும் பார்ட்னராகச் சேர்த்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த, உடனே வினோதகன், நீங்கள் எல்லாம் அரசு டாக்டர்கள் சட்டப்படி பார்ட்னராக முடியாது என விளக்க எங்கள் மனைவிமார்கள், உறவினர்கள் பெயரில் ரிஜிஸ்டர் செய்யலாமே’’ என டாக்டர்கள் புத்திசாலித்தனமாக கூறியுள்ளனர்.

Advertisment

Sasikala Brother's Hospital Background

உடனே வினோதகன் தன் சகோதரி சசிகலா மூலம் போயஸ் தோட்டத்து உதவியோடு வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை அணுகினார். அடுத்த நிமிடமே அறுபது லட்சம் ரூபாய் லோன் ‘சேங்சன்’ ஆனது. டாக்டர்களின் உறவினர்களின் பெயரிலும் வினோதகன் பெயரிலும் டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் ஆகி விட்டது. இதில் மருத்துவக் கல்லூரி டாக்டர் வாஞ்சிலிங்கம்தான் முக்கியமான நபர். அவர் மனைவி டாக்டர் வள்ளிநாயகியும் ஒரு பார்ட்னர் ஆவார். டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், அழகரசன், சேகர் ராமையா, நடராசன் மற்றும் சில டாக்டர்களும் பார்டனர்களாக சேர்ந்து உள்ளவர்கள்.இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் தடாவில் கைதான வீரசேகரனின் தம்பி டாக்டர் தமிழ்மணியும் ஒரு பார்ட்னர் ஆவார்.

இப்படி அனைத்து மட்டங்களில் உள்ளவர்களை அரவணைத்து வாங்கிய மருத்துவமனைக்கு ‘’பிரகதீஸ்வரர் மருத்துவமனை’’ எனப் பெயரிடச் சொன்னதே போயஸ் தோட்டத்து ஆலோசனையின் பேரில்தான். வினோதகனின் பார்ட்னராகி விட்டதால் அரசு சம்பளம் பெறும் டாக்டர்கள் மருத்துவக் கல்லூரியில் அக்கறை காட்டுவதைக் குறைத்துக் கொண்டு பிரகதீஸ்வரர் மருத்துவமனையே கதி என உள்ளனர். வினோதகனே எங்கள் பாஸ். எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். ஆக மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்களையே தன் கைக்குள் போட்டுக் கொண்டு தன் சொந்த மருத்துவமனையை பராமரிக்க செய்துவிட்டார் வினோதகன்.

இலவச வைத்தியம் செய்து கொள்ள வரும் மக்கள் பாடுதான் திண்டாட்டம். திண்டாட்டம் தரும் எழுச்சியால் அவர்கள் கோபமடைய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. அந்தக் கோபக்கனலை எவனாலும் அசைக்க முடியாது.