நக்கீரனின் முதல் இதழ் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் வெளியானதிலிருந்தே அதில் வெளியான உண்மைகளுக்காகவும், ஊழல் அரசுகளுக்கு எதிரான கட்டுரைகளுக்காகவும் பல அடக்குமுறைகளையும், மிரட்டல்களையும் சந்தித்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றிய பல்வேறு உண்மைகள் நக்கீரனால் வெளிச்சத்திற்கு வந்தது. அதனை ஒடுக்குவதற்கு ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பத்திரிகைகள் எரிக்கப்படுவதில் துவங்கி, அலுவலகம் மீது தாக்குதல், நிருபர்கள் கைது, நக்கீரன் ஆசிரியர் கைது என, ஜெயலலிதாவின் அடக்குமுறை உச்சம் தொட்டது. இந்நிலையில், 1992 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ்நாட்டில் நக்கீரன் மற்றும் பிற பத்திரிகைகள் மீது நடத்தப்பட்டும் அடக்குமுறை தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஜெயலலிதாவிற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் விவரங்கள் 08.02.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.
தமிழக அரசுக்குக் கண்டனம்
புதுடெல்லியில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கான தேசிய மையமும், ஜெனீவாவில் இடம் பெற்றுள்ள சித்திரவதைக்கு எதிரான உலக ஸ்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மனித உரிமை மாநாடு 1992 ஜனவரி 3 முதல் 8 வரை புது டெல்லியில் நடைபெற்றது. சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், பி.என் பகவதி, அட்வகேட் சார்குண்டே, உச்சநீதிமன்ற நீதிபதி ரஜ்ஜிந்தர் சச்சார், அட்வகேட் கோவிந்த் முக்கோட்டி, மத்திய பிரதேச அரசின் மாஜி ஜனதாதள கல்வி அமைச்சர் கலாம் அக்னிவேஸ், அட்வகேட் வெங்கட்ரமணி, ஸ்ரீ லதா சுவாமிநாதன், பத்திரிகையாளர் ரவி நய்யார், ஜோஷ்பு வர்க்கீஸ் உள்ளிட்ட இந்திய வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.
பங்களாதேஷில் இருந்து ஃபாதர் டிமாண்ட் டெனிஸ் வெய்டு, ஜெர்மனியின் மார்க்ஸ் கேரின், ஜெனீவாவின் இர்க்ஸ் சாட்டோஸ், மிஸ்.காட்போ போன்ற வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பல விசயங்களை ஆய்வு செய்த மாநாட்டில் நக்கீரன் விவகாரம், தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு நக்கீரனுக்கு கொடுத்து வரும் தொல்லைகளைப் பற்றியும் விவாதித்தனர். தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகளாய் கலந்து கொண்டவர்களில் திலீபன் மன்றத் தலைவர் தோழர் தியாகுவும் ஒருவர்.
தமிழகத்தில் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு மனித உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்ற தலைப்பில் அறிக்கையளித்து தியாகு பேசும் போது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதற்கு சான்றாக நக்கீரனுக்கு தமிழக அரசு கொடுத்து வரும் தொல்லைகளைக் குறிப்பிட்டார். தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொள்ளவிருந்த செல்வி அஜிதா (மக்கள் உரிமைக் கழகம்) மாநாட்டுக்குப் போக இயலாமல் போனாலும் அவர் எழுதி அனுப்பிய கட்டுரை பிரதிநிதிகளிடையே விநியோகிக்கப்பட்டது. அதில் அவர் நக்கீரனுக்கு தமிழக அரசு கொடுத்து வரும் தொல்லைகளைக் குறிப்பிட்டிருந்தார்.
இவை தவிர நக்கீரன் ஏட்டின் சார்பாக மாநாட்டுக்கு விரிவான அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. மாநாட்டு அமைப்புக் குழுவினரே அந்த அறிக்கையைப் பிரதி எடுத்து பிரதிநிதிகளிடையில் விநியோகித்தனர். ஆதாரத்துடன் கூடிய அறிக்கையைப் படித்த பிரதிநிதிகள் தமிழகத்தில் நடைபெறுவது நவீன ஹிட்லர் ஆட்சியா! என ஆதங்கத்தோடு பேசிக் கொண்டது மட்டுமல்லாமல் தங்கள் அதிர்ச்சியையும் தெரிவித்தார்கள்.
7.1.92 அன்று மாலை மாநாட்டில் ஒருமனதாக கீழ்க்கண்ட தீர்மானத்தை இயற்றினர். தமிழகத்தில் கருத்துரிமையும் பத்திரிகை சுதந்திரமும் பறிக்கப்படுவதைக் கண்டித்தும் நக்கீரன் மீது தமிழக அரசு தொடுத்து வரும் ஜனநாயக விரோத, சட்டவிரோத தாக்குதலை கைவிடக் கோரிய தீர்மானம் பலத்த கரகோஷங்களுக்கிடையே நிறைவேறியது. தீர்மான நகலும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நாட்டின் பேரறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் மனித உரிமைச் செயல் வீரர்களும் மட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த மனித உரிமை மாநாடு தெரிவித்துள்ள கண்டனமாவது தமிழக அரசுக்கு உறைக்குமா? தன்னைத் திருத்திக் கொள்ளுமா?