கொள்ளையர்களின் கஜானாவாக மாறிய மத்தியச் சிறை! ஆயுள் கைதியின் அட்டகாசம்!

Prisoner hoards gold at Madurai Central Jail

இப்படியும் நடக்குமா என ஆச்சரியப்படும் வகையில்எண்ணற்றகுற்றங்களும், கொள்ளை சம்பவங்களும் தினம்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அப்படி நம்பமுடியாத பலகுற்றங்களைச்சிறைக்குள் இருந்துகொண்டே நடத்திய ஒருவனின் சுவாரசியமான ரகசியங்கள் 03.12.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

Prisoner hoards gold at Madurai Central Jail

மதுரை மத்திய சிறையிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் தோண்டி எடுத்து கடத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்து தமிழக அரசே,காவல்துறையே நடவடிக்கை எடு! – மத்திய சிறைவாசிகள்.

மேற்காணப்படும் வாசகங்களுடன் மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் நம் கவனத்தை ஈர்த்தன. இதன் பின்னணியில் பல ரகசியங்கள் புதைந்திருக்கும் என்ற சந்தேகத்துடன் மதுரை மத்திய சிறைச்சாலைக்குள்ளேயே விசாரணையில் ஈடுபட்டோம். கிடைத்த தகவல்கள் நம்மை திடுக்கிட வைத்தன.

மூன்று வாரங்களுக்கு முன் சாத்தூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் இரவு ரெய்டு போனபோது பாரத், சுடலைமுத்து மற்றும் இரண்டு பேர் திருட்டு வழக்கில் சிக்கினர். போலீசார் பாரத் கோஷ்டியை ‘அன்பாய்’ கவனிக்க ஆரம்பித்தபோது அவர்களே அதிர்ந்து போகும்படியான பல செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.

சபாநாயகர் முத்தையாவின் வீட்டில் 11௦ பவுன் நகையும், சில கோயில்களிலும் நகைகளைக் கொள்ளையடித்தோம். அதில் பாரத் தாயாரிடம் நாப்பது பவுன் நகையும், உசிலம்பட்டி அடகுக் கடையில் முப்பது பவுன் நகையும்வைத்துள்ளோம் என்று உண்மைகளை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தது திருட்டுக் கும்பல்.

சபாநாயகர் வீட்டில் திருட்டா?

செய்தி வெளிவரவில்லையே! என சந்தேகித்த போலீசாருக்கு, ‘ஜெ’ வுக்கு பயந்து, நகை திருடுபோன விஷயத்தை போலீசாரிடம் கூறிய சபா சேடபட்டி செய்தி வெளியே வந்துவிடக் கூடாது என்ற பயத்தில், எப்.ஐ.ஆர்.போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் கிடைத்தது.

இதைவிட அதிர்ச்சி தரும் மற்றொரு உண்மையையும் அதன்பின் வெளியிட்டது அந்தக் கொள்ளைக் கும்பல். 11௦ பவுன் நகைகளை மதுரை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் முத்துராஜாவிடம் பாதுகாப்பாகக் கொடுத்துவைத்துள்ளோம்! என்று கூறியதும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர் சாத்தூர் போலீசார்.

ஒரு மஞ்சள் நிறத் துணிப்பையில் ஜெயிலுக்குள் நகைகளைக் கடத்திக்கொண்டு போனதாகக் கூறப்பட்ட ‘கைதிகளுக்கு முடிவெட்டும் சுதந்திரத்தை’ கைது செய்து, தங்கள் பாணியில் விசாரித்தனர் போலீசார். சுதந்திரத்தின் வாக்குமூலமும், ஆயுள்கைதி முத்துராஜாவிடம் திருட்டு நகைகள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியது. உடனடியாய் மதுரை விரைந்த உதவி ஜெயிலர் தமிழ்ச்செல்வனை சந்தித்த சாத்தூர் போலீசார் முத்துராஜாவை விசாரணைக்கென தங்கள் கஸ்டடிக்கு கேட்டார்கள்.

சிறைச்சாலை விதிப்படி அவனை உங்களிடம் கொடுக்க முடியாது. ஆனா நகைகளைப் பதுக்கி வச்சுருக்காங்களானு கண்டுபிடிச்சு அந்த தகவல உங்களுக்கு தர்றோம்.அது வரைக்கும் விசயத்தை வெளிய விட்டுறாதீங்கப்ளீஸ்’’ என கெஞ்சியிருக்கிறார். அதன்பின் ஜெயிலர் செல்வராஜ், கண்காணிப்பாளர் தங்கவேல், தமிழ்ச் செல்வன் ஆகியோர் கூடி ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படியே 8.1௦.92. அன்று மாலை வீடியோ மூலம் ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ படம் கைதிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. கைதிகள் வீடியோ முன் கூடியிருந்த நேரம் உதவிஜெயிலர் தங்கராசு, ஏட்டு பிச்சை, வீரபத்திரன் ஆகியோர் முத்துராஜா இருந்த ஐந்தாம் எண் பிளாக்குக்கு சென்று சோதனை போட்டனர். அப்போது ஒரு வாலிபால் பந்துக்குள் சாமிக்கு மாட்டக்கூடிய இரண்டு கைக் காப்புகள், செயின், டாலர், வெள்ளிவிளக்கு ஆகியவை மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

சிறைச்சாலை அறையை திருட்டு நகைகளின் பாதுகாப்புப் பெட்டகமாக மாற்றிய ஆயுள் கைதி முத்துராஜா பற்றிய சில தகவல்கள்; முத்துராஜா மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகளின் செல்லப்பிள்ளை. அதிகாரிகள் இந்த ஆயுள் கைதிக்கு அளித்த சில சலுகைகள், சத்தமில்லாமல் சட்ட விரோத காரியங்களில் இவனை ஈடுபட உதவியாயிற்று.

முத்துராஜாவுக்கு தெரியாத கிரிமினல்களே மதுரை பிராந்தியத்தில் கிடையாது. இந்தக் குற்றவாளிகள் ஜெயிலுக்குள் வரும்போது முத்துராஜாவிடம் ஐடியா பெற்று அதன்படிதான் வெளியே கொலை, கொள்ளை போன்ற கொடூரசெயல்களில் ஈடுபடுவார்களாம். அதேபோல் வெளியே கொள்ளையடிக்கப்படும் நகைகளை பத்திரப்படுத்த முடியாத கிரிமினல்கள் பார்பர் சுதந்திரத்தின் மூலமாக பிரியாணி பொட்டலம், புரோட்டா பொட்டலம் இவற்றினுள் நகைகளை மறைத்து வைத்து முத்துராஜாவிடம் அனுப்பி வைத்து விடுவது வாடிக்கையாம்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் சீப் வார்டன் அடைக்கன் இரவுப் பணியில் இருக்கும் நாட்களில் மட்டுமே நடந்துள்ளது. மறுநாள் சிறை அதிகாரிகள் முத்துராஜாவிடம் விசாரணை நடத்தியபோது, ‘‘ஜெயிலர் மகள் கல்யாணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தேனே, உள்ளே இருக்கிற என்னால எப்படி கொடுக்க முடியும்? இது மாதிரி வர்ற திருட்டு நகைகளை வித்துதான் உங்களுக்கெல்லாம் மாசாமாசம் பணம் கொடுத்தேன். என்னை மாட்டிவிட நெனைச்சீங்கன்னா நீங்களும் மாட்டவேண்டியிருக்கும்.’’ என மிரட்டியுள்ளான்.

அவன் மிரட்டலிலிருந்து மட்டுமல்ல, ஜெயிலுக்குள் திருட்டு நகை தஞ்சம் புகுந்ததிலிருந்து முத்துராஜாவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சில சிறை அதிகாரிகள் சாதகமாக நடந்து கொண்டுள்ளனர் என்பது புலனாகிறது.முத்துராஜா அடைக்கப்பட்டிருந்த அறைக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட நகைகளில் பதினெட்டு பவுன் நகைகள் மட்டுமே கைப்பற்றி இருப்பதாக சாத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மீதியை சிறை அதிகாரிகளே பங்குபோட்டுக் கொண்டதாக ஒரு ஆயுள் தண்டனைக் கைதி நம்மிடம் ரகசியமாகத் தெரிவித்தார்.

குற்றங்கள் தடுக்கப்பட, குற்றவாளி திருந்த அவனைச் சிறையில் அடைத்தால் உள்ளேயிருந்தபடியே குற்றங்களுக்குத் தலைமைதாங்க அவனுக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக ஒன்று செய்யலாம். குற்றவாளிகளோடு அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோகும் சிறைத்துறை அதிகாரிகளையும் உள்ளே தள்ளி பூட்ட வேண்டும். இல்லையெனில்...தமிழக எல்லையில் கால் வைக்கக் கூட நீதி தேவதை அஞ்சி நடுங்கிடும் நிலை தோன்றி விடும்.

மதுரை மத்தியச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அல்ல. முதலில் திருத்தப்பட வேண்டிய அல்லது தண்டிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளே! சிறையிலுள்ள மூவாயிரம் குற்றவாளிகளுக்கான ரேசனில் பாதியளவு கொள்ளையடிக்கப்பட்டு மீதியே குற்றவாளிகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் பதினைந்து லட்சம் வரை அதிகாரிகள் பாக்கெட்களுக்கு செல்கிறது. நாற்பது கைதிகளுக்கு ஒரு செய்தித்தாள், ஐம்பது கைதிகளுக்கு ஒரு வார இதழ் எனப் போடப்பட வேண்டும். ஆனால், அவை அதிகாரிகள் வீடுகளுக்குப் போய் சேர்ந்து விடுகின்றன.

ஜெயிலர் செல்வராஜுக்கு அ.தி.மு.க. நகர் மாவ.செயலாளர் செல்லப்பாவின் பரிபூரண ஆசீர்வாதம் உள்ளது. செல்வராஜின் இளைய மகன் அலெக்ஸ் திருமங்கலம் லட்சாதிபதி கொலை வழக்கில் மாட்டினான். அப்போது அவனைக் காப்பாற்ற பெருந்தொகை கொடுத்து உதவியது யார் தெரியுமா? சாட்சாத் ஆயுள் கைதி முத்துராஜாதான்!

App exclusive CENTRAL JAIL madurai
இதையும் படியுங்கள்
Subscribe