ரோஜா பழுத்தால் அந்தப் பழம் எவ்வாறு இருக்கும், சரக்கொன்றை, ஒவ்வொரு கொத்தும் ஒவ்வொரு வண்ணமாயிருந்தால் எப்படி இருக்கும், பாலத்து அரச மரத்து மோகினிப் பிசாசு வீடு வரைக்கும் உடன் வருவாளாமே, ஏன் ஒருநாள் கூடப் பேசுவதில்லை போன்ற கேள்விகளால் நான் நிரம்பி இருந்த பருவம் அது. மதியம் உணவுக்கடுத்த வகுப்பு. பேராசிரியர் இன்னும் வந்து சேரவில்லை. எங்களுக்கடுத்த, இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்த மேசை மேல் சாய்ந்து, கனகமணி தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தாள். அப்படியான பாவனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்த பாவனை, சண்முகத் துக்குக் கலக உணர்வைத் தோற்றுவித்துவிட்டது.
"கனகமணி, சைவ சித்தாந்தமா படிக்கிறாய்?'' என்றான்.
தலையில் பல்லி விழுந்தாற்போலத் திடுக்கிட்டுத் தன் ஆடையைச் சரி பண்ணிக்கொண்டு, புத்தகத்துக்குள் ஆழ்ந்தாள். அது அவனை மேலும் உசுப்பி விட்டது.
"சித்தாந்தம் படிக்கிற வயதா உனக்கு? எதை எதையோ படிக்கிறாய், என்னை ஏன் படிக்க மறுக்கிறாய்''
அவள் திரும்பி தன் மூன்றாம் விழியால் நோக்கினாள்.
"கலிங்கத்துப் பரணியை எடு, கண்ணே. அதில் கடை திறப்பு படி.''
இந்த நாடகத்துக்குள் நான் எந்தப் பாத்திரமும் வகிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, நான் கலிங்கத்துப் பரணியில் பேய்கள் சமையல் செய்யும் பகுதியில் இருந்தேன். சடாரென என் புத்தகத்தைப் பிடுங்கி, அவள் முன் வைத்த சண்முகம், "சிதறிக் கிடக்கும் எழுத்துக்களைக் கூட்டி வெளியே எறியாதே. அவை எழுத்துக்கள் அல்ல, என்இதய நொறுங்கல்கள்'' என்றவன், அத்தோடு நிறுத்திக் கொண் டிருந்தால் பரவாயில்லை. எதுகை மோனை ரசாயனத் தில் கிளறப்பட்டு, "என் ரத்தினமே'' என்றும் சேர்த் துக் கொண்டான்.
கனகமணி, அந்த என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு முதல்வர் அறைக்கு, ஏறக் குறைய ஓடினாள். அதில் முதல் பக்கத்தில் என் பெயர் இருந்தது.
கிஷ்டன் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். திடுமென பூமி பிளந்து வந்தவள் போல என் முன் நின்றாள் வசந்தி. "எத்தனை நாள் சஸ்பென்ட்?'' என் றாள். "ஒருவாரம் என்றேன்''. அவள் சிரித்தாள். அந்த மாதிரி ஓட்டை உடைசல் டீக்கடையில் டீ குடிப் பாளா என்று எண்ணியபடி, "டீ சாப்பிடறீங்களா?'' என்றேன். ஆச்சரியம். 'உம்' என்றாள். அவளுக்கு 'ஸ்பெஷல்' டீயாகப் போட்டுக் கொடுத்தான் கிஷ்டன். அதுபோல ரம்யமான டீயை அவன் கடையில் நான் சாப்பிட்டதில்லை.
யானை கட்டித் தெருவில் இருந்த அவள் விடுதிக்கு சேர்ந்து நடந்தோம். முதல் அனுபவம். என் கால்கள் தரையிலிருந்து ஒரு அடி உயர்ந்து நடந்தன.
"கனகமணி, இதை பிரின்ஸ்பல் வரைக்கும் கொண்டு சென்றிருக்க வேண்டியதில்லை. நான் அவளிடம் சொன்னேன். சம்பந்தமில்லாமல் நீங்கள் வேறு மாட்டிக் கொண்டீர்கள்''.
போதும். அது போதுமானதாக இருந்தது...
வசந்தியின் நாள் அலுவல் எனக்கு அத்துபடி. ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமல் எழல். ஆறு வரையும் அறைக்குள் பாட்டுப் பயிற்சி. ஆறு முதல் எட்டு வரைக்கும் மொட்டை மாடியில் நடந்து கொண்டு வாசித்தல். (சரியாக ஆறுக்கும் ஆறரைக்கும் இடையே நான் அந்தத் தெரு வழியாக ஆற்றுக்கு நடப்பேன்...) அப்புறம் குளியல், புறப்பாடு. ஒன்பது இருபதுக்கு ராமையர் கிளப்பைக் கடத்தல்... இத்யாதி. எனக்குப் பூரணி பிடித்திருந்தாள். அப்போது நான் அரவிந்தன். அப்புறம் யமுனா. நான்தான் பாபு. அவ்வப்போது கனவில் வந்து, படகோட்டிக் கொண்டே 'முல்லை மலர் மேலே' பாடும் பத்மினி. எல்லாரின் கூட்டுக் கலவையென வசந்தி. அப்போது நினைவில் என் பிம்பம் ராஜேந்திரசோழன். அப்பா ராஜராஜனைப் பகைத்துக் கொண்டு தனியாக வேறு ஊரையே நிறுவி, தனியாகப் பெரிய கோயிலைத் தோற்கடிக்கும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் கட்டும் கோபக்கார இளவரசன். என் அப்பாவின் மேல் அந்தக் காலத்தில் எனக்கிருந்த கோபத்துக்கு இந்த பிம்பமும், அப்பா அறியாத என் பட்டமகிஷித் தேர்வும் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தந்தது.