politics behind ramadoss fasting in 1991

1991 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் திமுக கூட்டணி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், அப்போதைய சூழலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த பாமக ஒரு தொகுதியைக் கைப்பற்றியிருந்தது. ஆட்சியமைப்பிற்குப் பின் 03.07.1991 அன்று கூடிய முதல் சட்டமன்றத்தில் தன் கன்னி உரையின் போது முதல்வர் ஜெயலலிதா ’’சபையின் கண்ணியம் காப்போம், கரும் புள்ளிகளை அகற்றுவோம்’’ என்று பேசினார். மறுநாள் 04.07.1991 அன்று காலை, மீண்டும் சபை கூடியது. அப்போது, ஆளுநர் உரைக்கு முன் ‘’ஆளுநரே தேவையில்லை’’ என்ற கருத்தை முன் வைத்துப் பேசினார் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனி பண்ருட்டி ராமச்சந்திரனைத் தாக்கினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், அதிமுகவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததோடு, ராமதாஸ் கைதும் செய்யப்பட்டார். 90களின் தொடக்கத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து அப்போதைய நக்கீரனில் வெளியான கட்டுரை பின்வருமாறு...

Advertisment

பா.ம.க.ராமதாஸ் கைது. ஜெயலலிதா ஆட்சியின் இரத்த வெறியாட்டம்.!வெடிக்கும் பா.ம.க.போராட்டங்கள்.

Advertisment

நான் பெரியவனா? நீ பெரியவனா? என அரசியல் அரங்கில் இமேஜ் சண்டையிட்டுக் கொண்டிருந்த கருணாநிதியும் ராமதாசும் ரோட்டு பிளாட்பார்மில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்புக்கு வித்திட்டவரான பண்ருட்டியாருக்கு சட்டசபையில் விழுந்த அடி, இதைத் தொடர்ந்து ராமதாசின் சாகும்வரை உண்ணாவிரதம், கைது கலவரம்; ஜெயலலிதாவின் முரண்பாடுகள் ஆகியவை அரசியலையே ஒரு கலக்கு கலக்கியுள்ளது. இதற்கெல்லாம் பின்னணி என்னவென்று அறிய அரசியல் பிரமுகர்களின் ஊடே நாம் ஊடுருவியபோது திடுக்கிடும் பலதகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

கடந்த 3-7-91 ஆம் தேதி அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. திடீரென நடந்த இக்கூட்டத்தில் சொற்ப எம்.எல்.ஏக்களே வந்திருந்தனர். கூட்டத்தில் நாளை நடைபெறப்போகும் கவர்னர் உரையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வாதங்கள் நடைபெற்றன. இறுதியாகப் பேசிய அ.தி.மு.க. கொறடாவான பட்டாபிராமன், ‘‘நாளை சட்டசபையில் வீணாகப் பிரச்னைகளைக் கிளப்ப திட்டமிட்டுள்ளார் திருநாவுக்கரசு. அவர் எதுவும் பேசக்கூடாது. பேசவும் விடக்கூடாது. அவரின் ‘கை’ அம்மாவை நோக்கி நீண்டால் கூட பிரச்னையைச் சமாளிக்கும் விதத்தில் நாம் தயாராய் இருக்க வேண்டும்’’ எனப் பேசியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவை நாலாம் தேதி கூடியது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆசனத்தில் வந்து அமர்ந்தார்.

கவர்னர் பீஷ்மநாராயணசிங் உரையாற்றத் தொடங்கினார்.

உடனே எழ முயன்ற திருநாவுக்கரசின் தொடையில் தட்டிய பண்ருட்டியார் விருட்டென்று எழுந்தார். ‘‘ஆட்டுக்கு தாடி எதற்கு?நாட்டுக்கு கவர்னர் எதற்கு?’’ என்ற அண்ணாவின் பழைய பேச்சைப் பேசத்தொடங்க சபை டென்ஷன் ஆனது.

ஜெயலலிதா புருவத்தை உயர்த்தி அப்படியும் இப்படியும் பார்த்தார். ஒன்றும் புரியாமல் கவர்னர் விழிக்க சபையில் சலசலப்பு.

டேய்! உட்காருடா! குள்ளநரி உட்காரு! செருப்பு பிய்யப்போகுது! என்ற தடித்த வார்த்தைகள் அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே எழுந்தது.

கணநேரத்தில் முஷ்டியை மடக்கிக்கொண்டு எழுந்த தாமரைக்கனி கண்கள் சிவக்க பண்ருட்டியாரை நோக்கி ஓட, அதே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தணிகைபாபுவும் ஆளும்கட்சி வரிசையிலிருந்து ஓடிவர பாபுவை முந்திக் கொண்டார் தாமரைக்கனி.

பண்ருட்டியாரின் முதுகில் ஓங்கி ஓங்கிக் குத்தியபடியே ‘‘உட்காருடா ஃபூல்’’ எனக் கத்தினார் தாமரைக்கனி. பண்ருட்டியாரின் அருகில் இருந்த திருநாவுக்கரசு, குமாரதாஸ் போன்றவர்கள் திக்பிரமை பிடித்துப்போய் பார்க்க, அப்பொழுதும் தொடர்ந்து பேசியபடி இருந்தார் பண்ருட்டியார்.

பண்ருட்டியார் கீழே உட்கார்ந்த அடுத்த நிமிடமே திருநாவுக்கரசு எழுந்து பேச ஆரம்பித்தார். தலைவி சபையில் உள்ளதைக் கூட பொருட்படுத்தாத அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மோசமான சொற்களில் வசைபாடினர். திருநாவுக்கரசுவின் பேச்சு கடைசிவரை யாருடைய காதுக்கும் எட்டவேயில்லை.

விஷயம் அறிந்த ராமதாஸ் உடனே திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு பறந்தோடி வந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

சேப்பாக்கம் கெஸ்ட்ஹவுசில் மந்திரிகள் தங்கியிருப்பதால் உண்ணாவிரத இடத்தை பனகல்பார்க் அருகில் மாற்றினர் போலீசார். பனகல்பார்க்கை நோக்கி ராமதாசின் கார் பறந்தது. காரில் உடன்சென்ற திருநாவுக்கரசு ‘‘கலைஞர் உங்களை வந்து பார்த்தால் நன்றாக இருக்கும், நான் வேண்டுமானால் ஏற்பாடு செய்யட்டுமா?’’எனக் கேட்டிருக்கிறார்.

உடனே பதறியபடி ராமதாஸ் ‘‘அதெல்லாம் வேண்டாம், அவர் வந்தால் பாலிடிக்ஸே மாறிவிடும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’என்றிருக்கிறார். ராமதாஸ் உண்ணாவிரதத்தில் மயக்கமாயிருக்க பா.ம.க.வின் இதர தலைவர்கள் கருணாநிதியின் வருகையை விரும்பினார்கள். உடன் பண்ருட்டியாரே கலைஞருடன் தொடர்பு கொண்டார்.

இருவரும் பனகல்பார்க் பிளாட்பார்மில் சந்தித்துக் கொண்டார்கள்.

கைதாகி அரசு மருத்துவமனையில் உள்ள ராமதாஸ் அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இதன் விளைவு!

தென்னாற்காடு,வட ஆற்காடு,பாண்டிச்சேரி எனத் தொடர் கலவரம்.பஸ்கள் எரிக்கப்படுகின்றன. வீடுகள் சூறையாடப்படுகின்றன. ரயில்பாதையில் சேதம்! டிரான்ஸ்பார்மர்கள் எரிகின்றன! காட்டுத்தீ போல பாட்டாளி மக்கள் கட்சியினரின் போராட்டங்கள் பரவிக் கொண்டிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் ஆறாவதுநாளாக உண்ணாவிரதம் இருந்தார். உடல் தளர்ந்து எழக்கூட இயலாமல் மயக்கமடைந்து விழுந்தார்.

இதனால் ராமதாசை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்தித்து,‘‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும், உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களுக்கு தண்டனை அளிப்போம்’’ என்று வலியுறுத்தி வந்தனர்.அரசு பொதுமருத்துவமனையில் இருந்த ராமதாஸ் ஒன்பதாம் தேதி காலையே உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கு சம்மதித்தார். இச்செய்தி ரகசிய போலீசார் மூலம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

விஷயம் அறிந்த ஜெயலலிதாவின் அரசியல்வட்ட ஆலோசகர்களின் மூளைகளில் உடனே சமயோசித ஐடியாவும் உருவானது.இதைத் தொடர்ந்து ராமதாஸ் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார் என்று தெரிந்ததும், ‘‘ராமதாஸ் உண்ணாவிரதத்தைக் கை விடவில்லையென்றால் கடும்விளைவுகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். போராட்டங்களை அடக்குவோம்’’ என துணிச்சலாக சவால்விட்டு சபையில் பேசினார் ஜெயலலலிதா. இந்த பாலிட்டிக்சை கணகச்சிதமாக நடத்தி முடித்துப் பெயரைத் தட்டிக்கொண்டார் ஜெயலலிதா.

ஜெவின் இப்பேச்சால் கொதித்துப்போன பா.ம.க.வின் அடுத்தகட்டத் தலைவர்கள் உடனே கூடினர்.பா.ம.க,வின் அடுத்தகட்டத் தலைவர்களான தீரன், சா.சுப்பிரமணியன், ஏழுமலை, பு.தா.இளங்கோ, அருள்மொழி போன்றவர்கள் ரகசியக்கூட்டம் ஒன்றைக்கூட்டி போராட்டங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள்.

பதினாலாம் தேதி முதல் இருபத்தி ஒன்றாம் தேதிவரை தமிழகம் முழுக்க ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்துவது... ஜெயலலிதா மன்னிப்புக் கோராவிட்டால் திருச்சி சென்னை நெடுஞ்சாலைகள் வெட்டப்பட இருக்கின்றன. மரங்களைவெட்டி சாலைப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் அண்டர்-கிரவுண்ட் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

அடுத்து அ.தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வீடுகளை முற்றுகையிடுவது. எம்.எல்.ஏ.குடும்பத்தார் யாருமே வெளியில் வரவிடாமல் தடுப்பது. வாட்டர் கனெக்சன், பால்சப்ளை, மின்விநியோகம் போன்றவற்றைக்கூட சப்ளை செய்ய அனுமதிப்பதில்லை. இப்படி ஆரம்பமாகும் போராட்டத்தில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பா.ம.க.தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டால் அதைக் கவனிக்கும் விதத்தில் கவனிப்பது. இப்படியான திட்டங்கள் தீட்டப்பட்டு அதைச்செயலாக்குவதற்கான பொறுப்பை இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் கொறடாவால் ஏற்கெனவே பேசப்பட்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட சபைக்கலவரத்துக்கு முதல்வர் பொறுப்பை வகிக்கும் ஜெயலலிதா பொறுப்பேற்காமல் பிரச்சனையை திசைதிருப்பும் விஷயத்தில்தான் கவனமாக உள்ளார்.

சபையில் கலவரம் நடந்த உடனேயே அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தைக் கூட்டிய ஜெயலலிதா, ‘‘தாமரைக்கனி பண்ருட்டியாரை அடித்தது தவறு’’ என்றார் வாய்மொழியில். 6.7.91. அன்று தாமரைக்கனி பண்ருட்டியாரின் தோள் மீதுதான் தட்டினார் என எழுத்து வடிவில் அறிக்கைவிட்டார்.

இறுதியாக, ‘‘பண்ருட்டி, ராமதாஸ், மற்றும் தன்காலில் விழுந்துகெஞ்சிய தாமரைக்கனி மூவரும் கூட்டுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி இந்தக்கலவரத்தை வேண்டுமென்றே உருவாக்கினார்கள். நாலாம்தேதிக்கு முன்பே ரகசியப் போலீசார் இந்தத்தகவலை எனக்குத் தெரிவித்தார்கள்’’ எனக் கூறுகிறார். ‘‘கேழ்வரகில் நெய் வடிகிற கதையாய்’’ முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தந்து முதல்வர் பதவி ஏற்றதிலிருந்து முதல் சறுக்கலைச் சறுக்கியுள்ளார் ஜெயலலிதா. பண்ருட்டியாரை மிரட்டும்தொனியில் நடக்கமுயன்ற ஜெயலலிதா ‘’குழவிக் கூட்டில் கை வைத்து’’ வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க,நீங்கள் தேவையில்லை எனப் பேசிய பண்ருட்டியாரை தாமரைக்கனி அடித்தாரா? தட்டினாரா? இல்லை ஒன்றுமே செய்யவில்லையா? சபையில் சட்டம் ஒழுங்கு கெட்டதா ? கெடவில்லையா? என்ற கேள்விகளை நடந்தவைகளை நடுநிலைமையோடு பார்த்துக் கொண்டிருந்த கவர்னர் பீஷ்ம நாராயண சிங்கை சந்தித்து கேட்க பத்திரிகையாளர்கள் விரும்பினார்கள். இதுவரை பிடி கொடுக்காமல் தப்பித்துக் கொண்டேயுள்ளார் கவர்னர்.

ராமதாஸ் கைது. - ஸ்பாட் ரிப்போர்ட்

டாக்டர் ராமதாசின் உடல்நிலை கொஞ்சம்கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. மயக்க நிலை.பனகல் பார்க்கைச் சுற்றி போக்குவரத்துத் தடை மத்திய ரிசர்வ் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

சிறப்பு மருத்துவர் குழு ராமதாசின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு கவலை தெரிவித்தனர். ரத்தஅழுத்தம் நாடித்துடிப்பு ஆகியவை பலவீனமாகி வருவதைக் குறித்து விளக்கினர். குடும்பத்தினரும் சிலஅரசியல்கட்சி தலைவர்கள் கவலையோடு அலோசனை செய்து கொண்டிருந்தனர்.உயர் போலீஸ்அதிகாரிகள் கமிஷனர் துரைராஜ் தலைமையில் அலோசனை. ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டது.

தி.நகர் உதவிக் கமிஷனர் மகுடபதிக்கு உயரதிகாரிகள் ஏதோ இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து ஏதோசொல்ல பேச்சு வார்த்தைகள் பலமுறை நீடித்தது.ஏதோ நடக்கப்போவதை அறிந்த தொண்டர்கள் கோஷமிட்டார்கள். கூட்டத்தில் சலசலப்பு. பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களிடம் பேசி எது நடந்தாலும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ள, தொண்டர்கள் அமைதியடைந்தனர்.

உதவி கமிஷனர் ராமாதாசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப் போவதாகக் கூறினார்.கைது வேண்டுமானால் செய்யுங்கள் மருத்துவப்பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அனுமதியோம் என்றனர் தொண்டர்கள்.

செக்சன் 3௦9 IPC தற்கொலை முயற்சியின் கீழ் கைது செய்கிறேன் என்று பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார் மகுடபதி.

சுயநினைவற்ற நிலையில் ஸ்ட்ரெக்சரில் ராமதாசை படுக்கவைத்து ஆம்புலன்சில் தூக்கிச் சென்றனர்."தாமரைக்கனியை கைதுசெய். டாக்டர் ராமதாசைக் கைதுசெய்யாதே" என்ற கோஷங்கள்.சிலகற்கள் எங்கிருந்தோ ஆம்புலன்ஸ் மேல் வந்து விழுந்தன.

அடுத்தநொடி! எச்சரிக்கை எதுவுமின்றி போலீஸ் தடியடி தொடங்கியது. தொண்டர்களும் பொதுமக்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஏற்கெனவே திட்டமிட்டது போல போலீசார் சுற்றிவளைத்து யாரும் வெளியேறிவிடாமல் துரத்தி துரத்தி லத்திசார்ஜ் செய்தனர். நம்அருகில் நடந்த தடியடியைத் தடுத்த போது, ‘‘உங்களை அடிக்கலைனு நெனைச்சுப் பேசாமப்போங்க சார்’’ என்றார் ஒரு போலீஸ்காரர். நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை.ஓடித் தடுக்கி விழுந்தவர்களை ஏழெட்டு போலீசார் சுற்றி நின்று அடித்தனர்.

ஓடறாம்பாரு... அவனை விடாதே!இந்தக் கெழவனைப் போடு... நீ ஏண்டா வந்த...வசனம் பேசியவாறு ஓடி ஓடித் தேடித்தேடி அடித்தனர் போலீசார்.இப்படி ஒரு வெறித்தாக்குதலை எதிர்பார்க்காதவர்கள் பனகல்பார்க் காம்பவுண்ட் சுவர்தாண்டிக் குதித்தனர்.டாக்டர் ராமதாசை வண்டியில் ஏற்ற உதவியவர்களையும் விட்டு வைக்கவில்லை போலீசார். ராமதாசின் மெய்க்காப்பாளர் இடையில் நுழைந்து தடுக்காமல் இருந்திருந்தால் ராமதாஸ் மீதே லத்தியடி விழுந்திருக்கும்.

டாக்டர் ராமதாசின் காரை குறிவைத்து அடித்த போலீசை வண்டியின் டிரைவரும் ராமதாசின் மகன் அன்புவும் இது டாக்டர் கார்..அடிக்காதீங்க..என்று தடுக்க அவர்களுக்கும் தடியடி விழுந்தது. கார்க் கண்ணாடிகள் நொறுங்கின.

பத்திரிகையாளர்கள் போட்டோகிராபர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். டெபுடி கமிஷனர் ராமராஜனே ஒரு போட்டோகிராபரின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினார்.

ஹிந்து பத்திரிக்கை போட்டோகிராபருக்கு ரத்தக்காயம். இந்தியன் எக்ஸ்பிரஸ் போட்டோ கிராபருக்கு பலமான தாக்குதல்.

பண்ருட்டியார், நெடுமாறன் ஆகியோர் கடுமையாக எச்சரித்த பின்னரே தடியடி நிறுத்தப்பட்டது.தடியடியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் போக்குவரத்துப் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.காயம் இல்லாமலே போலீசார் பலபேர் தயாராக வந்த மருத்துவக் குழுவினரிடம் கட்டுப் போட்டுக்கொண்டனர்.

காயம்பட்ட பத்திரிகையாளர்கள், டெபுடி கமிசனர் ராமராஜனிடம் நீதி கேட்டபோது, ‘‘உங்கள் நாக்கை அடக்கிப் பேசுங்கள்..உங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை...உங்களால் என்ன செய்து கொள்ள முடியுமோ செய்துகொள்ளுங்கள்...என்று எரிச்சலுடனும் மீண்டும் அடித்து விடுவேன் என்பது மாதிரியுமான தொனியில் மிரட்டினார்.

கமிஷனர் துரைராஜ் பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.சாய்ந்து கிடக்கிற மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், சிதறிக் கிடக்கிற செருப்புக்கள், முறிந்துகிடக்கிற லத்திகள், ரத்தக்கறைகள் என நரிபுகுந்த ஆட்டுப்பட்டி போல மயான அமைதியோடு வெறுமையாகக் காட்சியளித்தது பனகல் பார்க்.

தலைவர்கள் கருத்து;

எஸ்.எஸ்.தியாகராஜன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்;

சட்டசபையில் நடந்த அராஜகம் குறித்தும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் உண்ணாவிரதம் குறித்தும் அரசு தக்க தீர்வு காண வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட தேசிய முன்னணி மற்றும் இடதுசாரிக் காட்சிகள் கோரியிருந்தன.

அரசு நிதானமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக டாக்டர்.ராமதாஸ் அவர்களைக் கைது செய்ததும் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது அவசியமற்ற தடியடிசெய்து தாக்கியதும் பிரச்னையை மேலும் கடினப்படுத்தவே செய்தது. விரும்பத்தகாத பலவிளைவுகளுக்கு அரசின் தொடர்நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிட்டது. ஒரு புதியஅரசு அனைத்துத் தரப்பினருடைய நல்லாதரவைப் பெற்றுச் செயல்படுவதற்கு மாறாக ஆணவமாகச் செயல்படுவதாகவே தோன்றுகிறது.

தாமரைக்கனி செய்தது அநாகரீகம். - வாழப்பாடி ராமமூர்த்தி;

சட்டசபையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கப்பட்டது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மத்திய இணைஅமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி,’’சட்டசபையில் பண்ருட்டி ராமச்சந்திரன் மீது தாமரைக்கனி தாக்கிய நிகழ்ச்சி வருந்தத்தக்கது. கவர்னர் பேசும்போது எல்லைதாண்டாமல் எதிர்ப்புத் தெரிவிப்பது சகஜம். ஜனாதிபதி பேசும்போதுகூட எதிர்ப்புத் தெரிவிப்பது வழக்கம்.

சட்டசபை நடவடிக்கைகளில் குறுக்கிடுவதையும் ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரைத் தாக்குவதையும் ஒரேநிலையில் வைத்துப் பார்க்க முடியாது.தாமரைக்கனி சட்டசபையில் இதேபோன்று பலமுறை செய்திருக்கிறார். ஒரு உறுப்பினர் தொடர்ந்து இதேபோல் செயல்படுவது நல்ல ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. தாமரைக்கனி செய்தது அநாகரீகமானது.இந்தநிலை நீடித்தால் மைக்டைசன், தாராசிங் போன்றவர்கள்தான் சட்டசபைக்கு செல்ல முடியும்.

ஜெயலலிதாவின் பெருந்தன்மை.– பீட்டர் அல்போன்ஸ்;

சட்டமன்றத்தில் தாமரைக்கனி நடந்து கொண்டது நிச்சயமாகத் தப்புதான்.அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால்,பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கவர்னர் உரையின்போது இடையூறுசெய்த காரணத்தினால்தான். மேலும் இந்த சட்டசபைத் தாக்குதலுக்கு ஜெயலலிதாதான் பொறுப்பு என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பண்ருட்டியை மீண்டும் சட்டசபைக்கு அழைத்தது ஜெயலலிதாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. சட்டசபையில் தாமரைக்கனி செய்தது எவ்வளவு பெரிய தவறோ அதே தவறை பண்ருட்டி சட்டசபைக்கு வெளியே செய்துகொண்டிருக்கிறார். பண்ருட்டியின் குற்றச்சாட்டுக்கு சட்டசபைக்கு உள்ளேயே தீர்வு கிடைக்கும்போது, வெளியில் சென்று பஸ்ஸை எரித்து, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் அது எப்படி தீர்வைத் தரும்?

கழகங்கள் தொடங்கி வைத்த கலகங்கள் – ப.நெடுமாறன்;

சட்டசபையில் இப்படியொரு கலாச்சாரம் எப்போது வந்தது என்று இப்போது பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

1958 –ல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் ஆளுங்கட்சியாக சட்டசபையில் இருந்தது.பிரகாசம், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர், முகம்மது இஸ்மாயில் சாஹிப், விருதுநகர் வி.வி.இராமசாமி, பி.டி.ராஜன் போன்ற தமிழகம் நன்கறிந்த தலைவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து காரசாரமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் எந்த அடிதடியும் நடந்ததில்லை.

1957–ல் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆளும்கட்சியாகவும் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் இருந்தது. அப்போதும் அசம்பாவிதங்கள் நடந்ததில்லை.1962-ல் அதன்பின் மீண்டும் காமராஜ் தலைமை நாவலர் தலைமையில் தி.மு.க. எதிர்க்கட்சி,1967 - ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி. காங்கிரஸ் எதிர்க்கட்சி. ஒன்றும் தகராறுகள் நடந்ததில்லை.

1972-ல் தி.மு.க. ஆட்சி. கருணாநிதி முதல்வர். எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி வரிசையில். அப்போதைய சபாநாயகர் மதியழகன். மதியழகனின் துணையோடு தி.மு.க.வுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற இருக்கிறது என்று தெரிந்தவுடன் தி.மு.க.வினர் துணைசபாநாயகர் பெ.சீனிவாசனை சபாநாயகராக உட்கார வைத்தார்கள். முதல்முறையாக இரண்டு சபாநாயகர்கள் அங்கம்வகித்து சபையில் தகராறும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. இதுதான் முதல் அமளி. அன்று தொடங்கி ஏறத்தாழ இன்றுவரை அடிதடி முதல் செருப்புவீசுவது வரையிலான அநாகரீகத்தை இரு கழகங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன.

கழகங்கள் தொடங்கி வைத்த வன்முறைக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் டாக்டர் ராமதாஸ் அமைதியான முறையில் தன்னை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். அவரைக் கைதுசெய்து காரில் ஏற்றிச்செல்லும்போது நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொண்டர்கள் அமைதியாகவே இருந்தார்கள். இருந்த போதிலும் அவர்கள்மீதும் பொதுமக்கள்மீதும் பத்திரிகையாளர்கள் மீதும்கூட முன்னறிவிப்பில்லாமல் கடுமையான தடியடி நடத்தப்பட்டது. சிதறியோடியவர்களை வளைத்துவளைத்து விரட்டிவிரட்டி உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்தும் போலீஸ் அடித்தது. டாக்டரின் வாகனம்கூட சேதப்படுத்தப்பட்டது.

இது போலீசாரின் திட்டமிட்ட நோக்கத்தையே காட்டுகிறது. வெளியூர்களில்கூட ஏராளமான தொண்டர்களை வீடுபுகுந்து தாக்கி இருக்கிறது போலீஸ். குடும்பப் பெண்களைத் தாக்கியும் வீட்டுப் பொருட்களைச் சேதப்படுத்தியும் அராஜகம் செய்திருக்கிறது.தமிழ் நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க கொண்டுவரப்பட்ட மத்திய ரிசர்வ்போலீஸ் முதல்வர்ஜெயலலிதாவின் ஈகோவைத் திருப்தி செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எவ்வளவோ வெளிப்பூச்சுக்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மீறி ஜெயலலிதாவின் உண்மைசொரூபம் அம்பலமாகியிருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி;

கலவரம் செய்தவர்களை அடக்குவதற்காகத்தான் தடியடி நடத்தியதாகச் சொல்லப்படுகிறதே?

வெள்ளைஉடை அணிந்த போலீசார்தான் கல்லெறிந்தனர். உதாரணத்துக்கு டாக்டர் ராமதாஸ் அவர்களை ஏற்றிய வேன் கண்ணாடி மீது படாமல் மேலே தூக்கி கல்வீசும் தனிசாமர்த்தியம் காவலர்களுக்கு மட்டுமே இருந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்களே இதைச்செய்துவிட்டு முன்னறிவிப்பில்லாமல் அத்து மீறிய தடியடிப் பிரயோகத்தை மேற்கொண்டார்கள். தீரன், சக்தியம்மா போன்ற தலைவர்களும் பத்திரிகையாளர்களும் கூடக் காயமடைந்தனர். இதன் பின் முப்பதுக்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் நாலைந்து பேர் காயமடைந்ததாகவும் சொல்கிறார்கள். உயிருக்கு தப்பி ஓடியவர்கள் எங்கே சிகிச்சை பெறுகிறார்கள் என்றே தெரியவில்லை. காவல்துறை தருகிற காயம்பட்டவர்களின் கணக்கு கூடத் தவறானது.

சட்டசபை கலவரத்தின் போது – கருணாநிதி எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தது கூட தவறில்லை என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா?

உண்மைதான். எனக்கு விழுந்ததுபோல அடியை அவர் உடம்பு எப்படித் தாங்கும்?அப்படியானால் அவர் மேற்கொண்ட முடிவை நீங்களும் எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?இல்லை. எதையும் தாங்கும் இதயத்தை மட்டுமல்ல, எதையும் தாங்கும் உடம்பும் எனக்கு இருக்கிறது.

சட்டசபைக்கு செல்வதற்கு என்ன தீர்வை எதிர்பார்க்கிறீர்கள்?

டாக்டருடைய கோரிக்கைதான் என்னுடைய கோரிக்கை. முதல்வர் ஜெயலலிதா மன்னிப்புக்கேட்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகவிரோதி என்று உங்களால் சொல்லப்படுகிற தாமரைக்கனி ஒரு தொகுதி மக்களிடம் வாக்குப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார். மறுபுறம் சட்டமன்றத்தில் உங்கள் கருத்துகளைச் சொல்லமுடியாத சூழல். இந்த நிலையில் இந்த சட்டமன்ற அமைப்புகளின் மீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா?

சேற்றில் மோதிரம் விழுந்து விட்டால் அதில் இறங்கித்தான் எடுக்க வேண்டும். அழுக்குப் படுகிறதே என்று ஒதுங்கிப் போகமுடியுமா? அதேபோல் சீர்குலைவு என்றாலும் அதில் இருந்துதான் திருத்த வேண்டும்.