nakkheeran

நக்கீரனின் முதல் இதழ் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் வெளியானதிலிருந்தே அதில் வெளியான உண்மைகளுக்காகவும், ஊழல் அரசுகளுக்கு எதிரான கட்டுரைகளுக்காகவும் பல அடக்குமுறைகளையும், மிரட்டல்களையும் சந்தித்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றிய பல்வேறு உண்மைகள் நக்கீரனால் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வகையில் ஜெ.ஆட்சியில் டெலிபோன்கள் அனுமதியின்றி ஒட்டுக்கேட்கப்பட்டது, வாட்டர்கேட் ஊழல் என்ற அட்டைப்படக் கட்டுரை போன்றவை வெளியானது. அதனைத் தொடர்ந்து நக்கீரனுக்கு பல்வேறு வகையிலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்தவகையில், நக்கீரனின் அடுத்தடுத்த இதழ்களை முடக்க நினைத்த ஆதிக்க சக்திகளின் வெடிகுண்டு மிரட்டலும், அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் 14.09.1991 ஆம் தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

Advertisment

நக்கீரன் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!

Advertisment

2.9.91. மதியம் சரியாக 1.35. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் இண்டெலிஜென்ஸ் செக்சன் சுறுசுறுப்பானது.

அங்கிருந்த அதிகாரி ஒருவர் பரபரப்புடன் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

‘‘என்னய்யா தேடுற’’ என்று சக அதிகாரி ஒருவர் அவரிடம் கேட்க, ‘‘யோவ் நக்கீரன் ஆபீஸ் அட்ரஸ்தான் தேடுறேன்.உனக்குத் தெரியுமா?’’என்றார்.

‘‘இங்கதான் லெட்ஜர்ல எங்காவது இருக்கும் பாருங்க’’ சொல்லி விட்டு நகர்ந்தார் அந்த அதிகாரி.

உடனே சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் பறந்தது.

அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவசரமாக இண்டெலிஜென்ஸ் செக்சனுக்கு வரவழைக்கப்பட்டார்.

‘‘சீக்கிரம் நாலு மெட்டல் டிடெக்டர் ரெடி பண்ணுங்கய்யா! நம்ம ஆளுங்க பத்துபேரைக் கூட்டிட்டு தயாரா இருக்கச் சொல்லுங்க’’ என்ற அந்த ஐ.எஸ்.அதிகாரி உத்தரவிட்டதோடு அவரும் தயாராகவே இருந்தார். இடையில் சுமார் இரண்டு மணிநேரம் உயரதிகாரிகள் மூலம் தங்களுக்கு வந்த ஆணையின்படி, ஒரு டிஸ்கஷனை தங்களுக்குள்ளேயே நடத்திக் கொண்டு அடுத்து எடுக்கப்படவிருக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாரானார்கள்.

சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் இருந்து ‘ஜீப்’ புறப்பட்டு கமிஷனர் அலுவலகம் சென்று அங்கு தயாராக இருந்த ஐ.எஸ்.அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு பறந்தது. மாலை 2.15 க்கெல்லாம் அந்தக்குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று அலைஓசை நாளிதழுக்கும், மற்றொன்று நமது நக்கீரன் அலுவலகத்துக்கும் வந்து சேர்ந்தது.

மதியம் 2.3௦. வழக்கம்போல் நமது அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தவார இதழுக்கான செய்திகள் சேகரிக்கப்பட்டு பிரிண்டிங் செய்வதற்கு அனுப்பும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

உணவு இடைவேளை நேரமாதலால் ஆசிரியர், நிர்வாகஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவினர் ஆகியோர் உணவருந்தச் சென்றிருந்தனர்.

அதனால் அந்தசமயத்தில் அலுவலகத்தில் மிக முக்கியமானவர்கள் யாரும் இல்லை. டிசைனர் செக்சன் மற்றும் கலெக்சன் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த சகாக்கள்தான் இருந்தார்கள்.

மணி 2.4௦...சர்ரென ஒரு போலீஸ் ஜீப் நம் அலுவலக வாசலில் வந்து நின்றது. பின்னாலேயே டி.வி.எஸ். மொபெட்டில் இருவர். ‘சில்வர் ப்ளஸ்’ மோட்டார் பைக்கில் இருவர் மெட்டல் டிடெக்டர்களைக் கைகளில் ஏந்தியபடி வந்து இறங்கினர்.

ஜீப்பில் இருந்து இறங்கிய போலீசார் நேராக நம் அலுவலக செக்யூரிட்டியிடம் சென்று அலுவலகத்தைச் சோதனை செய்யவேண்டும் என்று கூற அவர்களை அப்படியே தடுத்து நிறுத்திவிட்டு ‘இண்டர்காம்’ மூலம் தகவலைத் தெரியப்படுத்தினார் செக்யூரிட்டி.

ரிசப்சனில் இருந்த நமது சகா ஆறுமுகம் வாசலுக்கு சென்று, ’’என்ன விஷயமாக வந்தீர்கள்? எதற்காக எங்கள் அலுவலகத்தைச் சோதனையிட வேண்டும்?’’ என்று கேட்க ‘‘உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஆபீசுக்கு போன் வந்திருக்கிறது, அதனால்தான் சோதனையிட வந்துள்ளோம்’’ என்றார் போலீஸ்படைக்கு தலைமை தாங்கி வந்திருந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் மாசிலாமணி.

‘‘சரி சிறிது பொறுங்கள் எங்கள் அலுவலக இன்சார்ஜை அழைக்கிறேன்’’ என்ற ஆறுமுகம் சர்க்குலேசன் மேனேஜர் சுரேஷை இன்டர்காமில் தொடர்பு கொண்டு விசயத்தைக் கூறவும் சுரேஷ் வாசலுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க, ‘‘வெடிகுண்டு இருப்பதாக போன் வந்துள்ளது, உங்கள் நன்மைக்குத்தான் இந்த சோதனை’’ என்றிருக்கிறார் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி.

‘‘சரி வாருங்கள்’’ என்றபடி உள்ளே நுழைய அனுமதித்தார் சுரேஷ்.

போலீசார் உள்ளே நுழைந்தவுடன் சர்சர்ரென்று நாலைந்து சைக்கிள்களில் மஃப்டி போலீசார் வந்திறங்கி அலுவலகவாசலில் காவலுக்கு நின்று கொண்டனர்.

அலுவலகத்துக்குள் நுழைந்த போலீசார் ரிசப்சனைத் தாண்டி நுழைய முயலும்போது ரிசப்சனிஸ்ட் அவர்களைப் பார்த்து ‘‘கொஞ்சம் நில்லுங்கள்’’ என்று கூற, கடுப்பாகிப்போன போலீசார் சடாரெனத் திரும்ப- ‘‘அலுவலகத்துக்குள் யாரும் காலணிகளோடு நாங்கள் அனுமதிப்பதில்லை, உங்கள் காலணிகளை இங்கயே விட்டுச் செல்லுங்கள்’’ எனக்கூறவும் மண்டைகாய்ந்து போன போலீசார் சடசடவென தங்கள் ஷூக்களைக் கழட்டிப்போட்டுவிட்டு உள்ளே நுழைந்தனர்.

முதல்முதலாக ஆர்வத்துடன் நக்கீரன் அலுவலகம் வந்திருந்த அப்பாவிகளான புது விசிட்டர்களைச் சோதனையிட்டனர். பின் அவர்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர்.

பின்னர் அலுவலகத்தின் உள்ளே சோதனை ஆரம்பமாகியது.

உடனே சர்க்குலேசன் மானேஜர் சுரேஷ் போலீசாரைப் பார்த்து, ‘‘சார் நீங்கள் அலுவலகத்துக்குள் எங்கே சென்றாலும் எங்கள் ஊழியர் ஒருவர் உங்களுடனேயே வருவார். மெட்டல் டிடெக்டரைக் கொண்டு சோதனை செய்வதோடு உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள். எங்கள் அலுவலகக் கோப்புகளைப் பார்ப்பதற்கோ, அல்லது ஒரு பிட் பேப்பரைக் கூட வெளியில் எடுத்துச் செல்வதற்கோ கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம்’’ என்று கறாராகக் கூறியதுடன் ஒவ்வொரு போலீசாரையும் வாட்ச் செய்வதற்கென்றே ஒரு ஊழியரை நியமித்தார்.

வெடிகுண்டைத் தேடும் படலம் துவங்கியது. டேபிள், சேர், பீரோ, கப்போர்டு என்று அனைத்து இடங்களும் மெட்டல் டிடெக்டரால் அலசப்பட்டன. டிசைனர் ரூமுக்குள் நுழைந்த ஐ.எஸ்.போலீசார் இருவரில் ஒரு மஞ்சள் கலர் சபாரிசூட் அணிந்திருந்த போலீஸ் அதிகாரி மெல்ல இந்தவார செய்தி ஒட்டப்பட்டிருந்த லே-அவுட் அட்டையை எடுத்துப் படித்துப்பார்க்க ஆரம்பித்தார்.

அவர்கள் டிசைனர் ரூமுக்குள் நுழையும்போதே அவர்களை சந்தேகப்பட்டு பின்தொடர்ந்து உள்ளே நுழைந்த சுரேஷ் அந்த போலீஸ்காரரிடம் இருந்து அந்த அட்டையைப் பிடுங்கினார். பிடுங்கிய அதேவேகத்தில், ‘‘நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம் எதையும் டச் பண்ணக் கூட உங்களுக்கு அனுமதியில்லைனு, அப்படியிருக்க நீங்கள் எங்க செய்தியை எதுக்கு எடுத்துப் படிச்சுப் பார்க்கறீங்க. நீங்க உண்மையிலேயே வெடிகுண்டு சோதனைக்குத் தானே வந்தீங்க?’’ என்று படபடவெனப் பொரிந்து தள்ளி விட்டார்.

‘‘என்னங்க நீங்க இப்டிப்பேசுறீங்க, இதென்ன புராகிபைடட் ஏரியாவா?’’ என்றார் சபாரி.

‘‘ஆமா சார்! இது புராகிபைடட் ஏரியாதான். எங்க எடிட்டோரியல் செக்சன் ஆளுங்களே பெர்மிசன் இல்லாம உள்ள நுழைய முடியாது.’’

அதன்பின் செய்திகளை நோண்டுவதை விட்டு விட்டனர் ஐ.எஸ்.போலீசார்.

இதற்கிடையில் சர்க்குலேசன் கிளார்க் துளசிதாசிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார். மற்றொரு ஐ.எஸ்.போலீஸ் போனவாரம் புக் எப்ப ரிலீஸ் ஆச்சு?

‘‘வியாழக்கிழமை’’ என்றார் துளசிதாஸ்.

எங்க பிரிண்ட் பண்றாங்க?

‘‘தெரியாது.’’

இந்த வாரம் புக் எப்ப வரும்?

‘‘வியாழக்கிழமை தோறும் புக் வரும், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்’’ என்று சட்டென முடித்துக் கொண்டார் துளசிதாஸ்.

அடுத்து நமது அலுவலக நிர்வாகத்தைச் சேர்ந்த பிரான்சிஸ்சிடம் ஒரு அதிகாரி, ‘‘உங்க பக்கத்துல இருக்கற பீரோவைக் கொஞ்சம் ஓப்பன் பண்ணுங்க!’’ என்றார்.

‘‘அதெல்லாம் தேவையில்லாதது சார்! அதோட சாவியும் இப்ப இங்க இல்ல. சம்பந்தப்பட்ட கிளார்க் எடுத்துட்டுப் போயிருக்காரு!’’

‘‘அத நாங்க செக் பண்ண வேண்டாமா?’’

‘‘பீரோவுக்குள்ள எல்லாம் வெடிகுண்டு வைக்க முடியாது. நாங்க அந்த அளவுக்கு அலட்சியமா இருக்க மாட்டோம்’’ என்று நெத்தியடி அடிக்க விலகிச் சென்றார் அந்த அதிகாரி.

அடுத்து டிசைனர் ரூமில் இருந்த ஆறுமுகத்திடம் ஒரு அதிகாரி, ‘‘நீங்கள் எங்கு பிரிண்ட் செய்கிறீர்கள்? உங்க பிரஸ் எங்கே உள்ளது?’’ என்று கேட்க-

‘‘எங்களுக்குத் தெரியாது’’

உங்களுக்கே தெரியாதுன்னா எப்படிங்க?

‘‘எங்க பிரிண்ட்பண்றாங்க, பிரஸ் எது? இதெல்லாம் எங்க வேலையில்லை. அத தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை . வெடிகுண்டு தேட வந்தவங்களுக்கும் தேவையில்லைனு நினைக்கிறேன்’’ என்று அவர்கள் வந்த வேலையை அவர்களுக்கே நினைவுபடுத்தினார்.

சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு அப்பொழுதுதான் அவர்கள் வந்தவேலை நினைவுக்கு வந்தது போல, ‘‘இன்று யாராவது சந்தேகப்படும்படி அலுவலகத்துக்கு வந்தார்களா?’’

‘‘இல்லை’’

‘‘வேறு ஏதாவது பார்சல் எதுவும் வந்ததா?’’

‘‘இல்லை..எதுவும் வரவில்லை’’ என்றார் ஆறுமுகம்.

இதற்கிடையில் ஒருஅதிகாரி கேசியரின் கவுண்டருக்குள் நுழையப் பார்த்தார்.

தடுத்த கேசியர் சத்தியபாபு, ‘‘இங்கெல்லாம் யாரும்வந்து குண்டுவைக்க முடியாது. இந்தஇடத்தில் நான், எங்க எம்.டி.தவிர யாருக்கும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது! உங்களையும் அனுமதிக்க முடியாது’’ என்ற சத்தியபாபுவின் ஆணித்தரமான பதிலைக்கேட்டு சத்தமில்லாமல் திரும்பிச் சென்றார் அந்த அதிகாரி. நடந்த விசயங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த போட்டோகிராபர் கதிரை,‘‘என்ன சார் எங்க ஆபீசுல சந்தேகப்படுற மாதிரி யாரையும் உள்ள அனுமதிக்க மாட்டோம். வெடிகுண்டு வச்சதா சொல்லி, சோதனைனு வந்து எங்க செய்திகளைப் படிக்கறது, எங்களுக்கு வேறமாதிரி சந்தேகத்தைக் கிளப்புது’’ என்றார்.

'‘என்னங்க நீங்க இப்படிப் பேசுறீங்க? உண்மையைத்தான் சொல்றோம்.’’

‘‘என்ன சார் உண்மை! நீங்களே இப்ப இங்க வெடிகுண்ட கொண்டுவந்து வச்சுட்டு கண்டுபிடிச்சு எடுத்தாலும் எடுப்பீங்க’’ என்று நைசாக ஒரு ஊசிச் சொருகு சொருகினார் கதிரை.

‘‘சார்..அப்படியெல்லாம் நாங்க செய்யமாட்டோம். இனி உங்க கோப்புகள் எதையும் நாங்க தொடல சரிதானா?’’ என்றார் இன்ஸ்பெக்டர். இருந்தாலும் சந்தேகம் அகலாத நமது போட்டோகிராபர் மெல்ல தன் காமிராப் பையை எடுத்தார். உடனே அவரைச் சூழ்ந்துகொண்ட போலீசார், பையில் என்ன? என்று சோதனையிட்டு காமிராவைக் கைப்பற்றிக் கொண்டனர்.

‘‘போட்டோவெல்லாம் வேண்டாம்.நாங்க புறப்படற வரைக்கும் இந்தக் காமிரா எங்ககிட்டவே இருக்கட்டும்’’ என்றபடி காமிராவைத் தன் கையிலேயே வைத்துக் கொண்டார் ஒரு அதிகாரி, இருந்தும் அவர்கள் வந்த ஜீப்பை வேறு ஒரு காமிராமூலம் கிளிக் செய்து விட்டார் நமது போட்டோகிராபர் கதிரை.

இதற்கிடையில் எம்.டி. ரூமுக்குள் சோதனைசெய்த அதிகாரிகளைப் பின் தொடர்ந்தபடி சென்ற ஆர்ட்டிஸ்ட் குருசாமி எம்.டி.யின் பெர்சனல் கோப்புகள் சிலவற்றை போலீசார் எடுக்க முயற்சிப்பதைப் பார்த்து, ‘‘சார்! ஏற்கெனவே இரண்டு தடவை சொல்லிட்டோம், எதையும் அனாவசியமா தொடாதீங்க!’’ என்று கண்டிப்புடன் கூறினார்.

‘‘யோவ்! அதெல்லாம் எதுக்குய்யா தொடுற! மூணு செண்டிமீட்டர் அளவுல பாக்ஸ் டைப்புல இருக்குமய்யா அந்த பாம். அது மாதிரி இடங்கள்ல மட்டும் தேடு!’’ என்றார் ஒரு இன்ஸ்பெக்டர்.

‘‘என்னது பாக்ஸ் டைப்புல இருக்குமா?அதெப்படி சார் உங்களுக்குத் தெரியும்?’’ என்று குருசாமி மடக்க

‘‘இல்ல...அது வந்து, பொதுவா..அப்படித்தான் இருக்கும்’’என்று அசடு வழிந்தார் அந்த இன்ஸ்பெக்டர். பின்னர் நம் எம்.டி.அறையில் இருந்த நீண்ட வாள் மற்றும் அங்கங்கு இருந்த உருட்டுக்கட்டைகளையும் பார்த்த போலீசார், ‘‘என்னங்க இது ஒரே கத்தி உருட்டுக்கட்டையா இருக்குது’’ என்றனர்.

‘‘ஆமா சார்! எல்லாம் ஒரு தற்காப்புக்காகத்தான்’’ என்றார் சுரேஷ்.கப்-சிப் ஆயினர் போலீசார்.

இப்படி போலியாக வெடிகுண்டு தேடும் படலம் கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரம் நடந்தது. ஒரு வழியாக புறப்பட்ட போலீஸ் பட்டாளம், ‘‘வெடிகுண்டு எதுவும் இல்ல சார்!’’ என்ற ஒரு பயங்கர உண்மையைக் கூறினர். இன்ஸ்பெக்டர் பின்னாலேயே சுற்றிச்சுற்றி மண்டை காய்ந்துபோன நமது கலெக்சன் ஏஜெண்ட் பூமிநாதன்,‘‘அதுதான் எங்களுக்கு முன்னாலேயே தெரியுமே,நீங்க என்ன வெடிகுண்டு தேடவா வந்தீங்க?’’ என்றார் கடுகடுப்பில்.

சத்தமில்லாமல் வந்தவழியே திரும்பிச் சென்றனர் அந்தப் போலீஸ் புலிகள்.இந்த வெடிகுண்டுத் தேடலைப் பொறுத்தவரை போலீசாரின் நடவடிக்கைகள் ஒரு செட்டப் வேலையாகத்தான் தெரிகிறது. காரணம் நம் அலுவலகத்துக்கு முந்தைய தினம் வரை இருந்த போலீஸ் காவல் வாபஸ் வாங்கப்பட்டது.

அடுத்து நம் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வந்தவுடன் நமக்கும் பக்கத்து கட்டடங்களுக்கும் போலீஸ் செக்யூரிட்டி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இது அடிப்படையாக போலீஸ் செய்ய வேண்டியது. அதுவும் செய்யப்படவில்லை.

வந்திருந்த அதிகாரிகள் வெடிகுண்டு தேடுவதை விட அடுத்து வரப்போகும் நக்கீரன் இதழின் செய்திகள் மற்றும் நமது ஆசிரியர், நிர்வாக ஆசிரியர் ஆகியோரின் அறையில் இருந்த கோப்புகளை நோண்டுவதிலேயே குறியாக இருந்தனர்.

மொத்தத்தில் வந்திருந்த அதிகாரிகள் நம் செயல் வேகத்தை சிறிது தடை செய்யவும் ஊழியர்களை மிரட்டவும் செய்திகளை அறியவும் மட்டுமே வந்தது போலத்தான் தெரிகிறது.

ஆனால் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறோம்.நக்கீரன் சகாக்களை எந்த சக்தியாலும் மிரட்ட முடியாது.நக்கீரன் இதழ் வெளியாவதையும் எந்த அராஜக சக்தியாலும் நிறுத்த முடியாது.

ஜெ நடத்திய விபரீத விளையாட்டு!

நமது அலுவலகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தேடும் நாடகத்துக்குப் பின் சி.பி.சி.ஐ.டி.போலீசார் முற்றுகையிட்டது தனம் பிரிண்டர்ஸ் அச்சகத்தைத்தான்.

தனம் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கணேசன் அவர்களை எதிர்கொண்டார்.

‘‘யார் நீங்கள்? எதற்காக என் பிரஸ்ஸின் உள்ளே நுழைகிறீர்கள்’’ என்று கேட்டார்.

‘‘நாங்கள் சி.பி.சி.ஐ.டி.போலீசார். ஒரு விசாரணைக்காக உங்களைக் காண வந்தோம்’’ என்றனர்.

‘‘என்ன விசாரணை?’’

நேரடியாக விஷயத்துக்கு வந்தனர் சி.பி.சி.ஐ.டியினர்.

‘‘நக்கீரன் இதழ் இங்குதான் அச்சிடப்படுகிறதா?’’

‘‘ஆமாம்.’’

‘‘எங்கே அச்சிடுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லையே?’’

‘‘நான் அச்சடித்துத் தருவதற்கான காண்ட்ராக்டை எடுத்துள்ளேன். எங்கு வேண்டுமானாலும் அச்சடிப்பேன். அவ்வளவுதான்.’’

‘‘எங்கெங்கு பிரிண்ட் செய்கிறீர்கள்?’’

‘‘அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம். நான்தான் நக்கீரன் இதழை பிரிண்ட் செய்து தருகிறேன். அதோடு முடித்துக் கொள்ளுங்கள்’’ என்றார் கணேசன்.

‘‘அப்படியானால் எங்களுடன் வாருங்கள். எங்கள் உயரதிகாரிகள் உங்களை விசாரணை செய்துவிட்டு விட்டுவிடுவார்கள்’’ என்றனர் சி.பி.சி.ஐ.டி.யினர் நைஸாக.

டென்சனாகிப் போனார் கணேசன்.

‘‘நான் எதுக்காக சார் விசாரணைக்கு வரணும்? என்ன தப்பு செஞ்சேன்? அரெஸ்ட்வாரண்ட் வச்சுருக்கீங்களா?விசாரணைனு கூப்பிட்டுப்போய் ஏதாவது ஒரு இடத்துல இறக்கி விட்ருவீங்க. பிறகு நான் நடந்து வர்றதா? நான் உங்க கூட வர முடியாது’’ என்று தீர்மானமாகப் பதில் கூறினார் கணேசன்.

நமது பிரிண்டரிடம் தங்கள் ‘பாச்சா’ பலிக்காத சி.பி.சி.ஐ.டி.யினர் வந்த வழியே திரும்பிச் சென்றனர். அன்று அதேநேரத்தில்... நக்கீரன் இதழின் அட்டை பிரிண்ட் செய்யும் அச்சகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. திமுதிமுவென சென்றிறங்கிய சி.பி.சி.ஐ.டி.யினர் "யார் இங்க இன்சார்ஜ்?" என்று கேட்க ‘‘நான்தான் சூபர்வைசர் நீங்கள் யார்?’’ என்றார் சூப்பர்வைசர். நாங்கள் சி.பி.சி.ஐ.டி.யினர். நக்கீரன் அட்டை இங்குதானே பிரிண்ட் செய்யப்படுகிறது.

‘‘ஆமாம்.’’

‘‘ஜெ ஆட்சியின் வாட்டர்கேட் ஊழல் என்ற தலைப்பில் அட்டை இங்குதானே அச்சிடப்பட்டது?’’

‘‘ஆமா சார்.’’

‘‘ஏன்யா அப்படி அடிச்சுத் தர்றது தப்புன்னு தெரியாதா?’’

‘‘எங்களுக்குத் தேவை ரிஜிஸ்ட்ரேசன் நம்பர். நக்கீரன்ல நம்பர் எல்லாம் முறைப்படி இருக்கு. மற்றபடி அட்டைல இருக்கற தலைப்புக்கு உள்ள என்ன மேட்டர் வச்சுருக்காங்கன்னு எங்களுக்குத் தெரியாது.’’

‘‘அந்த வாட்டர்கேட் ஊழல் அச்சடிச்ச பிளேட் இருக்கா?’’

‘‘உண்மையிலேயே இல்லை சார்’’

‘‘சரிசரி உங்க ஓனர் எங்க இருக்கார். விசாரணைக்கு அழைச்சுட்டுப் போகணும்’’

‘‘தெரியல சார்’’

சரி! உங்க அட்ரஸ் எழுதிக்கொடுங்க. ஓனர் வந்ததும் வந்து எங்களை வந்து பாக்கச் சொல்லு.

பின்னர் சூபர்வைசரின் அட்ரசை எழுதி வாங்கிக் கொண்டு தாங்கள் வந்த மிரட்டல் வேலை முடிந்த திருப்தியில் புறப்பட்டனர் சி.பி.சி.ஐ.டி.யினர்.

மறுநாள் 3.9.91 அதிகாலை மூன்று மணி..

நமது செய்திகளை அச்சடிக்கும் பிரஸ் ஒன்று திடீரென அறுபதுபேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி.கூட்டத்தினரால் முற்றுகையிடப்பட்டது.

உள்ளே நுழைந்து சோதனையிட்டனர். பிரஸ் இன்சார்ஜை அழைத்தனர்.

‘‘இங்க நக்கீரன் பிரிண்ட் செய்றீங்களா?’’

‘‘இல்லை சார்.’’

‘‘பிரிண்ட் செய்றதா எங்களுக்கு தகவல் வந்தது! உங்க நல்லதுக்கு சொல்றோம். நக்கீரன் பிரிண்ட் செஞ்சீங்க’’...என்று வார்த்தையை முடிக்காமல் மிரட்டலோடு இடத்தைக் காலி செய்தனர்.

ஒட்டா?வெட்டா?

நமக்கு பலதரப்பட்ட இடைஞ்சல்கள் பலவிதங்களில் பலரூபங்களில் அரசால் தரப்பட்டது. அதில் ஒன்று. டெலிபோன் இடைஞ்சல். பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென லயன் ‘டெட்’டாகி விடும். இல்லையென்றால் சர் சர் என்று மெலிதாக டேப் செய்வது போல் சத்தம் கேட்கும். இது பல நாட்களாக நமக்கு தரப்படும் இடைஞ்சல்.

இந்நிலையில் 3.9.91. அன்று காலை 11-௦௦ மணிபோல நமது அலுவலக டெலிபோனுக்கு வரும் கனெக்சன் வயர் சென்றடையும் போஸ்ட்டின் மேல் ஒரு மனிதர் அமர்ந்து ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார். அது நமது டெலிபோனை ஒட்டுக்கேட்பதற்கு செய்த ஏற்பாடா? அல்லது நிரந்தரமாக வெட்டி விடுவதற்கு ஏற்பாடா?

புரியவில்லை.

ஒரு கிளிக் செய்து வைத்தோம்.

இப்படியான பலவித ஜெ இடைஞ்சல்கள்+அராஜகங்கள் இவை எல்லாவற்றையும் மீறிதான் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது நமது நக்கீரன் இதழ்.