"நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சொந்த கிராமத்தின் வளர்ச்சிக் காக 13 கோடி ரூபாய் வழங்கும் தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமாரை கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் வாழ்த்தி மகிழ்ந் திருக்கிறார்கள்.

dd

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கிறது பூலாம்பாடி பேரூராட்சி. இந்த பேரூராட்சி பூலாம்பாடி, கடம்பூர், அரசடிக்காடு, மேலக்குணங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பூலாம்பாடி பேரூராட்சி பின்தங்கிய கிராமம் என்பதால், இங்கு சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் கால்வாய் வசதிகள், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டே வருகின்றனர்.

பூலாம்பாடியை ஒட்டியுள்ள மலைக் கிராமமான அரசடிக்காடு பகுதிக்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்ல முடியாமல் அவதியுறுவது தொடர்கதையாகி வருகிறது. பேரூராட்சியில் போதிய நிதியில்லாததால் அடிப்படை வசதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

dd

இந்த நிலையில்தான்... அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள், மண்ணின் மைந்தரான பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் முறையிட்டனர். கிராமத்தை முழுமையாக ஆய்வு செய்த இளைஞர் பிரகதீஸ்குமார், பேரூ ராட்சி அதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத் தின்படி எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்ட அதிகாரிகள் 33 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்தனர்.

அடிப்படை வசதிகளுக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த பணிகளுக்கு பொதுமக்களின் பங்களிப்புத் தொகை மட்டும் 13 கோடி ரூபாய். அந்த 13 கோடி ரூபாயையும், தனது சேவை நிறுவனமான "ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேஷன்' மூலம் வழங்குவதாக உறுதியளித்தார் டத்தோ பிரகதீஸ்குமார். அதன்படி, முதல்கட்ட தொகை யாக 90 லட்சம் ரூபாய்க்கான டி.டி.யை பூலாம்பாடி பேரூராட்சியின் செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கியிருக்கிறார் பிரகதீஸ்குமார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, கவுன்சிலர்கள் பூங்கொடி, கலைச்செல்வி, தேவிகா, மஞ்சுளா, கண்ணகி, செல்வராணி, ராஜலட்சுமி, பர்கத்நிஷா, மாணிக்கம், ராமதாஸ், சுதாகர், ஜெயந்தி, கஸ்தூரி உள்பட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பிரகதீஸ்குமாரிடம் பேசியபோது,’"சொந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு செய்யணும்னு நினைச்சேன்... செய்திருக்கேன். இதில் எனக்கு ஒரு ஆத்ம மகிழ்ச்சி'' என்கிறார் அவர்.

Advertisment