"ஆபரேஷன் முடிந்த பிறகு நல்ல வேலைக்குப் போறேன். புல்லட் வாங்கித் தர்றியா அப்பா?'' என வாழும் கனவுடன் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்ற ஹேமச்சந்திரனை பிணமாகத் தான் பார்த்திருக்கின்றனர் பெற்றோர்.
புதுச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைச்செல்வம், சென்னை, சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் லாரி கிளீனராக பணியாற்றும் எனக்கு, ஹேமச்சந்தி ரன், ஹேமராஜன் என இரட்டை மகன்கள் உண்டு. 150 கிலோ எடையுடன் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வந்த ஹேமச்சந்திரனுக்கு யூடியூப் மூலம் அறிமுகமான சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், அறுவைச்சிகிச்சை மூலம் எடை குறைப்பு சாத்தியம் என நம்ப வைத்து, அதனடிப்படையில் 22ஆம் தேதி ஆபரேஷன் நடைபெற்ற நிலையில், ஆபரேஷன் தொடங்கிய 15 நிமிடங்களில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்துவிட்டார் என மருத்துவ மனை சார்பாக தெரிவித்தனர். எனது மகனுக்கு மருத்துவ வசதி குறைவான இடத்தில் வைத்து அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர், மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹேமச்சந்திரனின் இறப்புக் கான காரணம் குறித்து விசா ரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டுள்ளார்.
நடந்தது குறித்து ஹேமச்சந்திரனின் தந்தை கூறுகையில், "உடல் பருமனைக் குறைக்க யூட்யூபில் நிறைய வீடியோக்களை பார்த்து வந்தான். அப்போது, சென்னை குரோம் பேட்டையிலுள்ள ஒரு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர், குடல் அறுவைச் சிகிச்சை போல், ஆறே மாதத்தில் 60 கிலோ வரை குறைத்துவிடலாமென்றும், அதற்கு கேரண்டி என்றும் வீடியோவில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்து என்னுடைய மகன் அங்கே சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் எனக் கூறினான். எனக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும், மகன் கேட்டதால் 12/04/2023 அன்று குடும்பத்துடன் நாங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசித்தோம். சாதாரண ஆபரேஷன் தான். இதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை. ஆபரேஷனுக்கு ரூ.8 லட்சம் செலவாகும் என்றார். அவ்வளவு பணம் இல்லை என்பதால் அதனை ஒத்தி வைத்தோம். இருந்தாலும் மனசு கேட்கலை.
பின்னாளில், கடந்த பிப்ரவரி மாதம் நான் மட்டும் சென்னைக்கு சென்று டாக்டரை சந்தித்தேன். "இப்போதைக்கு என்னால் அவ்வளவு பணம் ரெடி செய்ய முடியாது' எனக் கூறவும், "எனக்குத் தெரிந்த மருத்துவ மனையில் வைத்து ஆபரேஷன் செய்கிறேன். ரூ.4 லட்சம் மட்டும் கொடுங்க' என பம்மலிலுள்ள மருத்துவமனைக்குக் கைகாட்டினார். அவ ருடைய பி.ஏ.வும் அடிக்கடி போன் செய்து, "நீங்க உங்க முடிவை சொல்லிட்டீங்கன்னா அந்த மருத்துவமனையில் தேதி வாங்கிடலாம். அதுபோக, டாக்டரும் சீக்கிரம் வெளிநாடு போகப்போகிறார்' என அவசரப்படுத்தி வந்தார். நாங்கள் ஆபரேஷனுக்கு சரி என்ற நிலையில், 03/04/2024 அன்று சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு வந்து அனைத்து டெஸ்ட் களையும் எடுத்தோம். ஹேமச்சந்திரனுக்கு 22/04/2024 அன்று ஆபரேஷன் செய்துகொள்ள லாம் எனத் தேதி குறிக்கப்பட்டது. நாங்களும் முதல்நாளே பம்மல் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆபரேஷன் தியேட்ட ருக்கு செல்லுமுன் என்னைக் கட்டியணைத்து முத்தம் பெற்றுக்கொண்டு, "ஆபரேஷன் முடிந்தவுடன் நல்ல வேலைக்குப் போறேன். புல்லட் வாங்கித் தர்றீயா அப்பா?'' எனக் கேட்டான். அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள் அது. எவ்வளவு நம்பிக்கை யான வார்த்தைகள்! ஆனால், ஆபரேஷன் துவங்கி 15 நிமிடத்திலேயே அந்த நம்பிக்கைக்கு உலை வைத்துவிட்டார் டாக்டர்'' எனக்கூறி அழுதார்.
ஆபரேஷன் நாளில், ஹேமச்சந்திரனுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றிருக்கின்றனர் மயக்கவியல் நிபுணர் மற்றும் டாக்டரின் உதவியாளர்கள். சுமார் 10.15 மணிக்கு ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியில் வந்த மருத்துவர், "உங்களது மகனின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் இங்கு தொடர் சிகிச்சை அளிக்க இயலாது. பழைய படியே குரோம்பேட்டை மருத்துவமனைக்கு வந்து விடுங்கள்'' எனக் கூறிவிட்டு ஆம்புலன்ஸில் ஹேமச் சந்திரனை ஏற்றிச் சென்றிருக்கின்றனர் மருத் துவமனை ஊழியர்கள். அதன்பின் ஆபரேஷனின் போது, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளார் டாக்டர். அப்படியெனில், பம்மல் மருத்துவ மனையிலேயே இறந்திருக்கின்றார். குரோம் பேட்டை மருத்துவமனைக்கு அலையவிட்டு அலைக்கழித்து இறந்ததாகத் தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம் என்பது ஹேமச்சந்திரன் உறவினர்கள் வாதம்.
மருத்துவர் ஒருவரோ, "உடல் எடை இழப்பு ஆபரேஷனின்போது, உடலெங்கும் மரத்துப்போவதற்காக மயக்க மருந்து வழங்கப்பட வேண்டும். அதுபோல் ஆபரேஷனின்போது ரத்தநாளங்கள் சிதைந்துபோகும். அதனைத் தவிர்க்கவும் திரவம் வழங்கப்படும். இதனை முறையாகக் கடைப்பிடித்திருந்தாலே உயிரிழப்பு ஏற்பட்டி ருக்காது'' என்கிறார். ஹேமச்சந்திரனின் வாழும் கனவினை சிதைத்த மருத்துவர், மருத் துவமனை மீது நடவடிக்கை பாயவேண்டு மென்பது அனைவரின் கோரிக்கை.
படங்கள்: இரா.சரவணன்