தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுவது தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த 28-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் 2,27,688 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 1 லட்சம் பேர். கொரோனா தாக்கம் துவங்கிய பிப்ரவரி-மார்ச் மாதங்களில் டெஸ்டிங்கிற்கான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் தேவையான அளவில் இல்லை என்பதால் பரிசோதனை அளவு குறைவாக இருந்தது. முடிவுகள் தெரிவதற்கும் குறைந்தபட்சம் 4 நாட்களானது. இதனால், பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் குறைவாகவே தெரிந்தன.
சிலமாதங்களாக பரிசோதனை மையங்களை (டெஸ்டிங் செண்டர்கள்) அதிகப்படுத்தியிருப்பதாலும், தேவையான மருத்துவ உபகரணங்கள் மூலம் விரைந்து முடிவுகள் கிடைப்பதாலும் தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை யும் அதிகரிக்கிறது. நாளொன்றுக்கு 40ஆயிரம் டெஸ்ட்டுகள்வரை மேற்கொள்ளப்படுவதால், பாசிட்டிவ் எண்ணிக்கை 7000 அளவுக்கு நெருங்குகிறது. டெஸ்ட்டுகளின் எண்ணிக்கையையும் டெஸ்ட் செண்டர்களையும் அதிகப்படுத்துவது ஆரோக்கியமானதுதான். ஆனால், அந்த டெஸ்டுகளின் லட்சணம் எப்படி இருக்கிறது? அதன் பின்னணியில் நடப்பது என்ன? என்பது தான் திடுக்கிட வைக்கிறது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருமதி. உஷாவேணி என்பவர் கொரோனா டெஸ்டிங்கிற்காக சென்னை மாநகராட்சியின் டெஸ்டிங் சென்டருக்குப் போயிருக்கிறார். டெஸ்டும் எடுக்கப்பட்டது. ரிசல்ட் கிடைக்க தாமதமாகும் என சொல்லப்பட்டதால் ஆர்த்தி ஸ்கேன் லேப்பில் டெஸ்ட் எடுத்திருக்கிறார். இரண்டு டெஸ்டுகளின் முடிவுகளும் வெவ்வேறாக இருந்தன. இரண்டு டெஸ்டுகளும் ஒரே லேப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பதுதான் கொடுமை.
இதுகுறித்து உஷாவேணியின் கணவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சவுண்டைய்யாவிடம் தொடர்புகொண்டு பேசிய போது, ""அவசர நிமித்தம் காரணமாக என் மனைவி வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள விரும்பினார். கடந்த 15-ந்தேதி சென்னை மாநகராட்சியின் டெஸ்டிங் சென்டருக்கு சென்றார். என் மனைவியிடம் ரத்த மாதிரிகளும் சேகரித்தனர். ரிசல்ட் கிடைக்க 2, 3 நாட்கள் ஆகும் என்றனர். அதனால் தனியார் லேப ரட்டரியில் (லேப்) டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, ஆர்த்தி ஸ்கேனில் டெஸ்ட் எடுத்தோம். இதற்கு, 3000 ரூபாய் கட்டணம்.
ஆர்த்தி ஸ்கேனில் என் மனைவி எடுத்த டெஸ்ட்டில், கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் படவில்லை என நெகட் டிவ் ரிசல்ட் வந்திருந்தது. சென்னை மாநகராட்சியின் டெஸ்டிங் சென்டரில் 15-ந் தேதி காலை 10.30க்கு எடுத்த ரிசல்ட்டின் முடிவினை 17ந்தேதி எங்களுக்கு கொடுத்தனர். அந்த ரிசல்ட்டில் என் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என இருந்தது. 15-ந்தேதி காலை 10.30க்கு மாநகராட்சி டெஸ்டிங் சென்டரில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்றும், அதே நாளில் மதியம் 12 மணி வாக்கில் தனியார் லேப்பான ஆர்த்தி ஸ்கேனில் எடுக்கப் பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்றும் ரிசல்ட் வருவது எப்படி என்பது புரியவில்லை. 2 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் குணமாகி விடுமா?
இத்தனைக்கும், நாங்கள் டெஸ்டிங் எடுத்த தனியார் லேப்பான ஆர்த்தி ஸ்கேன் சென்டருக்குத்தான், மாநகராட்சி டெஸ்டிங் சென்டரில் சேகரிக்கப்பட்ட என் மனைவியின் சேம்பிள்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நபருக்காக சேகரிக்கப்பட்ட சேம்பிள்கள், ஒரே லேப்பில் பரிசோதிக்கும் போது எப்படி இரு வேறான ரிசல்ட்கள் வரும்? இதனால், மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம்.
இதில் தெளிவு பெற வேண்டி, கார்ப்பரேசன் கமிஷனர் பிரகாஷை பல முறை தொடர்பு கொண்டும் எனது லைனை அட்டென்ட் பண்ணவே இல்லை. அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ். அவரது பி.ஏ.வை தொடர்பு கொண்டு, டெஸ்ட் பரிசோதனையில் நடந்துள்ள குளறுபடிகளை விவரித்து கமிஷனரிடம் பேச வேண்டும் என சொல்லியும் அவர் லைன் கொடுக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை போல நிறைய பேருக்கு இருந்திருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, இன்னொரு டெஸ்ட் எடுக்க வலியுறுத்தலாம். அதன் முடிவு எப்படி வருகிறது என பார்த்து வைரஸ் தாக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம் என்பதை வலியுறுத்தத்தான் கமிஷனரை தொடர்பு கொண்டேன். ஆனால், நோ ரெஸ்பான்ஸ். எனனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தில், கொரோனா பரிசோதனையில் நிறைய தவறுகள் நடப்பதாகத்தான் யூகிக்க முடிகிறது'' என்கிறார் மிக அழுத்தமாக.
வேலூரை சேர்ந்த அரசு அதிகாரியான ராஜேந்திரனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக டெஸ்டிங் சென்டரில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ""உங்களுக்கு கொரோனா கிடையாது. பயப்படாதீங்க. ஒரு பாசிட்டிவ் கேஸுக்கு 30,000 ரூபாய் மத்திய அரசிடம் க்ளைம் பண்ணுவோம். ஒரு 10 நாள் இங்கிருந்து விட்டு நீங்கள் போய்ட லாம் என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சம்மதிக்காத அந்த அரசு ஊழியர், அங்கிருந்து வெளியேறி தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகி டெஸ்ட் எடுத்துப் பார்த்த போது நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததால் வீட்டிற்கு சென்றார். இப்படி பல சம்பவங்கள் நடக்கின்றன.
கொரோனா பரிசோதனைகளில் நடப்பது என்ன? என சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதார துறையிலுள்ள அரசு டாக்டர்களிடம் ரகசியமாக விசாரித்தோம். ""அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள டெஸ்டிங் லேபாரட்டரிகள் போதுமானதாக இல்லை என்பதால் தனியார் லேப்புக்கும் டெஸ்டிங் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் (சேம்பிள்கள்) தனியார் லேப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் மத்திய அரசிடம் நிதி உதவி கோர முடியும்ங்கிறது உண்மைதான். எண்ணிக்கைக்கேற் பத்தான் மத்திய அரசும் நிதி உதவி வழங்குகிறது. அதனாலேயே பரிசோதனைகளின் எண்ணிக்கை யையும் அதற்கேற்ப பாசிட்டிவ் எண்ணிக்கையும் காட்டப்படுகிறது.
கடந்த 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் 61,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார துறை சொல்லியுள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்களும்(லேப்), 61 தனியார் ஆய்வகங்களும் கொரோனா பரிசோதனையை செய்கின்றன. தனியார் லேப்புகளில் தனி நபர் ஒருவருக்கான டெஸ்டிங்கிற்கு குறைந்தபட்சம் 3,000 வசூலிக்கப்படுகிறது. அதுவே, சென்னை மாநகராட்சி டெஸ்டிங் சென்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் சேம்பிள்களை பரிசோதிக்க அரசு தரப்பில் சம்மந்தப்பட்ட தனியார் லேப்புக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால், 50-க்கு 50 சதவீதம் என்கிற அளவில்தான் சேம்பிள்கள் டெஸ்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.
பாசிட்டிவ் என ரிசல்ட் தருமாறு அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுவிடுவதால் அதற்கேற்ப ரிசல்ட்டை தருகின்றன தனியார் ஆய்வகங்கள். அதனையே தங்கள் கைப்பட எழுதி டெஸ்ட் எடுத்தவர்களுக்கு தந்து விடுகிறார்கள் மாநகராட்சி சுகாதாரத்துறையினர். பல சமயங்களில் சேம்பிள்களை பரிசோதிக்காமலே பாசிட்டிவ் என ரிசல்ட் தருவதையும் செய்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், தனியார் ஆய்வகங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்குமிடையே எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த 28-ந்தேதி வரை தமிழகத்தில் 24,75,866 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 70 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும், 30 சதவீதம் தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதிக்கப்படுவதாக வைத்துக்கொண்டால், தனியார் ஆய்வகங்களில் மட்டும் 7 லட்சத்து 42 ஆயிரத்து 759 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக கொடுக்கப்படும் 1000 ரூபாய் கட்டணத்தில் 500 ரூபாய் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என மேல்மட்டம் வரை பாய்வதால், இதுவரை 37 கோடியே 17 லட்சம் ரூபாய் அவர்களின் கஜானாவில் சேர்ந்திருக்கிறது. இது தோராய மதிப்புதான். இத்தகைய லாப கணக்கைப் போட்டுத்தான் பரிசோதனைகளும் பாசிட்டிவ்களும் அதிகளவில் காட்டப்பட்டு வருகின்றன. பாசிட்டிவ் கேஸ்களை பிடிப்பதற்காகவே ஜூன் 1-ந்தி முதல் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் முன்கள பணி யாளர்கள் 22 ஆயிரம் பேர் களமிறக்கப்பட்டி ருக்கிறார்கள்.
அரசு டெஸ்டிங் சென்டர்களில் சேகரிக்கப்படும் சேம்பிள்கள், தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சேம்பிள்கள், அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட சேம்பிள்கள் என அனைத்தையும் முறையாக ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் பலநூறு கோடி ரூபாய் ஊழல்கள் அம்பலமாகும். கொரோனா முடிவுக்கு வருவதற்குள் சுகா தாரத்துறையில் சம்மந்தப்பட்ட பலரும் பல கோடிகளுக்கு அதிபதியாவார்கள். ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் நிலையோ அந்தோ பரிதாபம்தான்'' என்கிறார்கள் மிக இயல்பாக.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம் விளக்கம் கேட்க பல முறை முயன்றும் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.
-இரா.இளையசெல்வன்