திருச்சியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மருத்துவர் ஒருவர், தனது கண் பார்வைக் குறைபாட்டுக்காக பிரபல மருத்துவமனையில் லேசர் சிகிச்சையெடுத்ததில், தனக்கிருந்த பார்வைக் குறைபாடு மேலும் மோசமானதால் அம்மருத்துவமனை மீது காவல்துறையில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மருத்துவர் செந்தில்முருகன். இவருடைய கண்களில் 0.5, 1.0 என்ற அளவுக்கு பார்வைக் குறைபாடு இருந்ததால், வீட்டில் புத்தகங்களை படிப்பதற்கும், கார் ஓட்டும்போதும் மட்டும் கண்ணாடியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதன்பின் நடந்ததை அவர் கூறுகையில்… "கடந்த 2022, ஜூலை மாதம், 12ஆம் தேதி, கண் பரிசோதனைக்காக திருச்சி, தில்லை நகரிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு சோதனை செய்தபோது 0.5 மற்றும் 1.0 என்ற புள்ளிகளில் கண் பார்வை இருந்தது. எனவே நான் கண்ணாடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, இதற்கு லேசர் சிகிச்சை செய்து பார்வைக் குறைபாடே இல்லாத அளவிற்கு செய்துவிடலாம் என்று மருத்துவ மனை நிர்வாகத்தினர் கூறினார்கள். அதிலும் 2 நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும் என்று கூறியதால் சம்மதித்தேன்.
அதன்படி லேசர் சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை எடுத்துகொண்டு வெளியே வந்த 10 நிமிடங்களில் உயிர் போகும் அளவிற்கு கண்ணில் வலி ஏற்பட்டது. அதோடு, கண்களிரண்டும் முழுமையாக வீங்கி இமைகள் மூடிவிட்டன. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, 3 நாட்களில் சரியாகிவிடும் என்று கூறினார்கள். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற 45 நிமிடத்தில் வலி தாங்க முடியாமல் மீண்டும் என்னுடைய சகோதரரோடு மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு சிகிச்சையளித்த உமாதேவி என்ற மருத்துவர் அங்கு இல்லை. நான் பயங்கரமாக சண்டையிட்ட பிறகு, அனஸ்தீசியா வழங்கி, கண்களைத் திறந்து பார்த்தனர். பின்னர், "எந்த பாதிப்பும் இல்லை, தொடர்ந்து நாங்கள் தந்த கண் மருந்தைப் பயன்படுத்துங்கள்' எனக்கூறி அனுப்பிவிட்டனர்.
அவர்கள் சொன்னபடி மருந்துகளை ஊற்றி வந்தேன். சரியாகாததால், ஜூலை 14ஆம் தேதி சிபு வர்க்கீஸ் என்ற மருத்துவரைப் பார்த்தேன், அவரும் பரிசோதனை செய்துவிட்டு, அதே மருந்துகளைப் பின்பற்றுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால் எனது பார்வைக் குறைபாடு 2.5 என்ற அளவுக்கு அதிகரித்தது. சரியாகப் பார்க்க முடியவில்லையெனக்கூறி மீண்டும் அகர்வாலுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சென்றபோது, சென்னையிலுள்ள தலைமை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிப்பதாக மருத்துவர் ராமலிங்கம் தெரிவித்தார். நானே இங்கிருந்து சென்னைக்குச் சென்று, அங்குள்ள தலைமை மருத்துவர் அமர் அகர்வால், ரம்யா, சூசன் ஆகியோரைச் சந்தித்தேன்.
சூசனோ, உங்களுடைய பார்வைக்கோளாறுக்கு பொறுப்பேற்க இயலாதென்று கூறி, பெங்களூரிலுள்ள மருத்துவமனை ஒன்றை சிகிச்சைக்காகப் பரிந்துரைத்தார். பெங்களூர் மருத்துவமனைக்கு சென்றபோது, என்னைப் பரிசோதித்துவிட்டு, 3 வார காலத்துக்கு தங்கவைத்து சிகிச்சையளித்தார்கள். அடுத்த 6 மாத காலத்தில் அகர்வால் மருத்துவமனையோடு தொடர்பு கொண்டு தொடர் சிகிச்சையிலிருந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர்களின் சிகிச்சை தொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர்கள் செய்த தவறை மறைக்கத் தொடர்ந்து முயற்சி செய்வதோடு, தவறுகளை என் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள். இதுவரை 5 லட்சத்துக்கு மேல் செலவழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அந்த மருத்துவமனை மீது காவல்துறையில் புகாரளித்திருக் கிறேன்." என்றார்.
இவரது புகார் குறித்து திருச்சி அகர்வால் மருத்துவமனை மருத் துவர் ராமலிங்கத்திடம் கேட்ட போது, "மருத்துவர் செந்தில்முருகன் பொய் பேசுகிறார். அவர் குணமாகி புல்லட்டில் தினமும் ஜிம்மிற்கு செல்கிறார். அதோடு, அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய நாங்கள் எங்கள் தலைமை மருத்துவர்களான அமர், ரம்யா, சூசன் ஆகியோர் மூலமும் சிகிச்சையளித்தோம். இருந்தும் தேவையற்ற பொய்ப்பரப்புரை செய்கிறார்'' எனக்கூறிவிட்டு, தனது மேலாளரான டேவிட் என்பவரிடம் செல்போனை கொடுத்தார். "செந்தில்முருகனுக்கு சிகிச்சை யளித்த உமாதேவியை ஏன் சந்திக்க அனுமதிக்காமல் தவிர்க்கிறீர்கள்? என அவரிடம் கேட்டபோது, "அவரைவிட சிறந்த டாக்டர்களை நாங்கள் பார்க்க வைத்தோம்'' எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித் தனர்.
இந்நிலையில்... மருத்துவர் செந்தில்முருகனின் புகாரின் பேரில் தில்லை நகர் காவல் ஆய்வாளர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், திருச்சி அகர்வால் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ராம-ங்கம், மருத்துவர் உமாதேவி ஆகியோர் 3 மாத காலத்திற்குள் கண் முழுமை யாகக் குணமடையுமென்றும், டெல்லிக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்வதாகவும் உறுதியளித்தனர்.
மருத்துவர்கள் தவறான சிகிச் சையளித்ததாக ஒரு மருத்துவரே குற்றம்சாட்டும்போது சாமானி யர்களின் நிலை எப்படியிருக்கும்?