""ஹலோ தலைவரே, பிரதமர் மோடி தலைமையில் 24-ந் தேதி கவர்னர் மாளிகையில் பஞ்சாயத்து நடக்கப் போகுதுன்னு, நம்ம "நக்கீரன்' இதழ் அட்டையிலேயே அழைப்பிதழ் வடிவத்தில் செய்தி வெளியாக, அது சமூக ஊடகங்கள்ல, பரபரப்பாக வலம்வந்ததை கவனிச்சீங்களா?''’
""ஆமாம்பா, நக்கீரன் சொன்ன மாதிரிதான் சகலமும் அரங்கேறியிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, மோடி 24-ந் தேதி தமிழகம் வர்றார்ன்னதுமே பலரும் அவரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டாங்க. சிலருக்கு மட்டுமே அப்பாயின்ட்மெண்ட் தரப்பட்டது. அப்பாயின்ட்மெண்ட் டயத்திலேயே டெல்லியிலிருந்து கறார் பாணியில் சமாதானம் பேசப்பட்டிருக்கு. நீங்க ஒத்துமையா இல்லைன்னா, உங்க எல்லோருக்குமே கடுமையான பாதிப்பு உண்டாகும்ங்கிறது மோடி மெசேஜ். அதேபோல், தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டணி பத்தியும் டெல்லி கவனம் செலுத்துது.''’
""மோடியின் தேர்தல் வியூகம் என்னவாம்?''’
""அ.தி.மு.க.வை பலப்படுத்தி அதோடு தேர்தல் கூட்டணி வைத்து, அதன் பலத்தில் பா.ஜ.க.வை தமிழகத்தில் வலுப்படுத்துறது ஒரு சாய்ஸ். அது ஒத்துவராட்டி, ரஜினி தொடங்கும் கட்சியையும், தன்னோடு தேர்தல் உடன்பாடு வைக்க விரும்பும் பா.ம.க.வையும் கூட்டணியில் இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது என்பது மற்றொரு சாய்ஸ். பா.ம.க.வின் அன்புமணி, பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கனும்னு விரும்பறார்.''’
""ஏற்கெனவே ரஜினியை கடுமையாக விமர்சித்த கட்சி பா.ம.க., அதோட நடிகர்களுக்கு எதிரான அரசியலையும், அது கையில் எடுத்திருக்கிற கட்சி. எப்படி பா.ம.க.வையும் ரஜினியையும் தன் கூட்டணியில் பா.ஜ.க.வால் ஒண்ணா வச்சிக்க முடியுமா?''’
""தலைவரே, ஏற்கனவே 2014 தேர்தலில், நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வையும், பா.ம.க.வையும் தனது கூட்டணியில் வைத்துகொண்டு தேர்தலை சந்தித்த அனுபவம் பா.ஜ.க.வுக்கு உண்டு. அதுபோல ரஜினியையும் பா.ம.க.வையும் மெயின்டெய்ன் பண்ணலாம்னு பா.ஜ.க. நினைக்குதாம். சி.பி.ஐ. வழக்கை சட்டரீதியா சந்திக்கும் அன்புமணி டெல்லிக்குப் போகும் போதெல்லாம் பா.ஜ.க. அமைச்சர்களை சந்திப்பதை வழக்கமா வச்சிருக்காரு. அதனால் பா.ஜ.க. தரப்பு கூட்டணி விஷயத்தில் நம்பிக்கையா இருக்கு.''’
""தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, புதிய அதிகாரியா சத்ய பிரதா சாகு வந்திருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து, தன்னை விடுவிக்கணும்னு ராஜேஷ் லக்கானி, டெல்லியிடம் கேட்டுக்கொண்டு இருப்பதையும் அதனால் தனக்குத் தோதான அதிகாரியை அந்த இடத்துக்குக் கொண்டுவர எடப்பாடி அரசு விரும்புவதையும் பத்தி ஏற்கெனவே நாம பேசியிருக்கோம். தமிழக அரசுத் தரப்பிலும் தனக்குக் கீழ் இருந்த அதிகாரிகள் தரப்பிலும் சரிவர ஒத்துழைப்பு கிடைக்காததாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் "கேம்' ஆடியதாலும் லக்கானி, தன்னை இந்தப் பதவியில் இருந்து விடுவிக்கச் சொன்னார். எடப்பாடி அரசோ, ரமேஷ்சந்த் மீனாவை உட்காரவைக்கும் விருப்பத்தோடு காய்களை நகர்த்துச்சு. டெல்லியோ, எடப்பாடி அரசு அனுப்பிய மூவர் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருந்த. ஒடிசாக்காரரான சத்ய பிரதா சாகுவை நியமிச்சிருக்கு. இந்த நியமனத்தை முதல்வர் எடப்பாடி எதிர்பார்க்கலை.''’
""தி.மு.க.விலும் கட்சிப் பதவிகள் பற்றிய பரபரப்பு கிளம்பியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க., பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தாரு. அதில் கட்சியில் மா.செ.க்களுக்குக் கீழே இருப்பவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருந்தால், அவற்றை அவர்கள் ராஜினாமா செய்யவேண்டும்னு சொல்லியிருந்தாரு. அதாவது ஒருவர், ஒரு பதவியை மட்டும்தான் வகிக்கணும்னு இதன்மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கு. இந்த விதியை, மா.செ.க்கள் தொடங்கி, கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வரையிலும் கடைப்பிடிக்கவேண்டும்கிற எண்ண ஓட்டம்தான் கட்சிப் பிரமுகர்கள் பலரிடமும் இருக்கு.''’
""மு.க.ஸ்டாலின்கிட்டேயே செயல் தலைவர், பொருளாளர்னு 2 பதவிகள் இருக்குதே?''’
""கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் ஆனதுமே, அவரது பொருளாளர் பதவியை, கட்சியின் சீனியர்களான ஐ.பெரியசாமியும், எ.வ.வேலுவும் எதிர்பார்த்தாங்க. ஆனால், இவங்க இந்தப் பதவிக்கு வந்துடக் கூடாதுன்னு இவர்களுடன் நெருங்கிப் பழகிய கட்சியின் சீனியர்களே காய் நகர்த்தினாங்க. ஸ்டாலினும், இந்த இரண்டு பேரில் ஒருவரிடம் இந்தப் பதவியைக் கொடுத்து, மற்றொருவரின் அதிருப்தியை எதுக்கு சம்பாதிக்கணும்னு அமைதியா இருந்துட்டார். இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஐ.பெரியசாமி வகுத்துக்கொடுத்த வியூகங்கள் ஏற்கப்படலையாம். தி.மு.க. டெபாஸிட் இழப்புத் தோல்வியைச் சந்திச்ச நிலையில், ஐ.பி.யும் அறிவாலயம் பக்கம் அதிகமா வர்றதில்லை. அதேபோல், எ.வ.வேலுவும் முன்புபோல் கட்சியின் மேலிடத்தை அடிக்கடி சந்திக்காமல், மாவட்ட அரசியல்ல மட்டும் அவ்வப்போது தலைகாட்டிக்கிட்டு இருக்காரு.''’
""அப்ப தி.மு.க. பொருளாளர் பதவியை கேட்பதற்கு வேற யாரும் முன் வரலையா?''’’
""தி.மு.க.வில் அதற்கு பஞ்சமா என்ன? 2ஜி வழக்கில் வெற்றிபெற்ற கனிமொழிக்கு இந்தப் பதவியைக் கொடுக்கணும்னு குடும்ப உறவுகள் சிலர் காய் நகர்த்தினாங்க. அதே 2ஜி வழக்கில் விடுதலையான ஆ.இராசாவுக்குப் பொருளாளர் பதவின்னும் எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கு. ஆனால், மாவட்டக் கள ஆய்வுக் கூட்டங்களை நடத்திக்கிட்டு இருக்கும் ஸ்டாலினோ, உலகத் தாய்மொழி நாள் விழாவில் கலந்துக்குறதுக்காக மலேசியா பயணத்துக்கும் ரெடியானாரு. பொருளாளர் பதவிக்கான ரேஸ் தீவிரமா இருந்தாலும் உட்கட்சித் தேர்தலை நடத்தும் போது, பொருளாளர் பதவி பத்தி முடிவெடுத்துக்கலாம்ன்னு இருக்காராம் ஸ்டாலின்.''’
""அரசின் உயர் கல்வித்துறைப் பக்கமும் அதிக சலசலப்பு கேட்குதே?''’
""அங்கே ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுதுங்க தலைவரே. பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச வழக்கில் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், இந்தத் துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பணி நியமனங்களில் புரோக்கராகச் செயல்பட்ட நெல்லையைச் சேர்ந்த ரமேஷ் என்கிற சுப்பிரமணியத்தையும் தேடி வருகின்றனர். இவர் பிடிபட்டால் இன்னும் பல ஊழல் விவகாரங்களும் பலதுறை அமைச்சர்களின் விவகாரங்களும் அம்பலமாகும்ன்னு அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். உயர் கல்வித் துறையின் நிர்வாக முடக்கத்துக்கு ஒரு உதாரணமா, சென்னை பல்கலைக் கழகத்தில், போன நவம்பரில் நடந்த பருவத் தேர்வுக்கான விடைத் தாள்களைத் திருத்திய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு, அதற்கான தொகை இன்னும் தரப்படவில்லைங்கிறதை சுட்டிக்காட்டுறாங்க. கமிஷன் வெட்டாததால் அதற்கான ஃபைலை கிடப்பில் போட்டிருக்கிறார்களாம். இதுபத்தி புகார் போயும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அசைந்து கொடுக்கலையாம்.''’
""மந்திரிகள் பணத்தைச் சம்பாதிப்பது போலவே புகார்களையும் சம்பாதிக்கிறாங்கன்னு நெல்லைப் பக்கமிருந்தும் சத்தம் வருதே?''’
""ஆமாங்க தலைவரே, கோவில்பட்டி மக்களின் தாகத்தைத் தீர்க்க, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுபோகும் திட்டம், 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முடிவடைஞ்சிடிச்சி, அதை 25-ந் தேதி நீங்கதான் தொடங்கி வைக்கணும்னு முதல்வர் எடப்பாடியிடம் தேதி வாங்கிய, மாவட்ட மந்திரி கடம்பூர் ராஜு, அதேநாளில் தன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு பண்ணி, எடப்பாடி வரவுக்காகக் காத்திருந்தார். ஆனால், மாவட்ட கலெக்டர் வெங்கடேசோ, அந்தக் குடிநீர் திட்டப் பணிகள் 60 சத அளவுக்குக் கூட முடிவடையலைன்னு ரிப்போர்ட் அனுப்ப, எடப்பாடி தன் நெல்லைப் பயணத்தை ரத்து பண்ணிட்டார். இதனால் அமைச்சர் கடம்பூர் வீட்டு விசேஷத்துக்கும் அவர் வர்றது நின்னு போச்சு. கடுப்பான அமைச்சர் தரப்பு, கலெக்டர் தரப்பை கரித்துக்கொட்ட, கலெக்டர் தரப்பு குமுறிக்கிட்டிருக்கு.''’
""எடப்பாடி தரப்பிலிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., தினகரன் பக்கம் தாவியிருக்காரே?''’
""அது சம்பந்தமா ஸ்பெஷல் நியூஸே இருக்கு... இருந்தாலும் இப்ப ஒரு தகவல் சொல்றேன். தினகரன் தரப்பின் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதால், அதை சமாளிக்க எடப்பாடி தரப்பில் கைவசம் இருக்கிற எம்.எல்.ஏ.க்களோடு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கைகொடுப்பார்கள்னு நினைக்கிறாங்க. ஆனால், உன் கோட்டையிலேயே ஓட்டை போட்டுக்காட்டறேன்னு காட்டும் விதமா, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபுவைத் தன்பக்கம் கொண்டு வந்திருக்கார் தினகரன். தாவல்கள் தொடரும். பேரங்களும் இருபக்கமும் அதிகமாகும்.''’