""ஹலோ தலைவரே, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்குத் தொடர்ந்து ’தண்ணி காட்டிக்கிட்டிருக்கே?''’

""இது தொடர்பா முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி டீமை சந்திக்க பிரதமர் டைம் தரலையாமே?''’

eps-stalin

""உண்மைதாங்க தலைவரே! பிரதமர் மோடி, அண்மையில் தமிழகத்துக்கு வந்தப்ப, தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய, கவர்னரை அனுமதி கொடுக்கச் சொல்லுங்கன்னும், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் சந்திக்க, பிரதமர் நேரம் ஒதுக்கித் தரணும்னும் இரண்டு கோரிக்கைகள் அவரிடம் வைக்கப்பட்டன. மோடியோ, "பட்ஜெட் தாக்கலுக்கு கவர்னர் அனுமதி தருவார்'னு சொன்னதோட, அனைத்துக் கட்சிகளையும் சந்திப்பது குறித்து டெல்லிக்குச் சென்றதும் முடிவெடுப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார். பட்ஜெட் தொடர்பா மோடி, கவர்னருக்குப் பரிந்துரை செய்ததால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மார்ச் 15-ந் தேதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்னு தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்காரு.''’

Advertisment

""பட்ஜெட்டுக்கு அனுமதி கொடுத்த மோடி, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கத் தேதி கொடுக்கலையே?''’

""மோடியிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் சார்பில் 2-ந் தேதி நினைவூட்டல் கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவச்சார். பிரதமர் அலுவலகமோ, "தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்க இப்போதைக்கு பிரதமருக்கு நேரம் இல்லை. விரும்பினால், நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்திக்கலாம்'ன்னு பதில் கடிதம் மூலம் அன்றே கைவிரித்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து பேசவருமாறு கூப்பிட்டார். ஸ்டாலினோ, "இன்று என்னால் வர இயலாது. நாளை வருகிறேன்'னு சொன்னார். அதன்படி 3-ந் தேதி காலை முன்னாள் அமைச்சர் துரைமுருகனுடன் சென்று எடப்பாடியை சந்தித்தார் ஸ்டாலின்.''’

""சந்திப்பில் என்ன நடந்தது?''’

Advertisment

""சீனியர் அமைச்சர்களோடு காத்திருந்த முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம், "தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களை, பிரதமர் மோடி சந்திக்க மறுக்கிறார். வேண்டுமானால் நிதின் கட்கரியை சந்திக்கச் சொல்கிறார். நாம் என்ன செய்வது?'ன்னு கேட்டார். ஸ்டாலினோ, "பிரதமர், நம்மை சந்திக்கவேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடலாம். அதேபோல் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்து, பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கலாம்'னு சொன்னார். எடப்பாடியோ, "5-ந் தேதி டெல்லியிலிருந்து இது தொடர்பாகத் தகவல் வரலாம். இல்லையேல் சட்டசபையில் தீர்மானம் போடலாம்'னு சொன்னார். இதன்பின் வெளியே வந்த ஸ்டாலின், "பிரதமர் நம்மைச் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கே அவமானம்'னு சொன்னாரு. ஸ்டாலின் இப்படி ஓப்பனா ஒரு வெடிகுண்டை வீசுவாருன்னு ஆளுந்தரப்பு எதிர்பார்க்கலை. "பா.ஜ.க.வோடு அ.தி.மு.க.வை ஸ்டாலின் முட்டவைக்கப் பார்க்கிறாரோ'ன்னு குழம்பிப்போன எடப்பாடி தரப்பு, "பிரதமர் அப்படிச் சொல்லவில்லை' என அமைச்சர் ஜெயக்குமார் மூலம் மறுப்பு சொல்ல வைத்து, டெல்லியைக் கூல் செய்துகொண்டிருக்கிறது.''’

""எம்.பி.க்கள் ராஜினாமா பற்றி, அ.தி.மு.க.வின் மன ஓட்டம் எப்படி?''’

governor""இதுகுறித்தும் எடப்பாடி, சீனியர் மந்திரிகளிடம் விவாதிச்சிருக்கார். அப்ப அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க.விடம் சிங்கிள் டிஜிட்டில்தான் எம்.பி.க்கள் இருக்காங்க. நம்மிடம் 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். நம் எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொன்னால், ஏற்கமாட்டார்கள். அதோடு பதவிகள் மூலமும், அதுதரும் பயன்கள் மூலமும்தான் நாம் நம் கட்சியை நடத்திக்கிட்டிருக்கிறோம். அதனால், ராஜினாமாங்கிற முடிவுக்கு நாம் போகத்தேவையில்லைன்னு சொல்லியிருக்கிறார். மற்ற அமைச்சர்களும் இதையே சொல்லியிருக்காங்க.''’

""தி.மு.கவில் இந்த ராஜினாமா கோரிக்கையை எப்படிப் பார்க்கிறாங்க?''’

""தி.மு.க.வுக்கு லோக்சபாவில் யாரும் இல்லை. ராஜ்யசபாவில் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் பாரதின்னு 4 எம்.பி.க்கள் இருக்காங்க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யாமல், எம்.பி.க்கள் ராஜினாமான்னு வலியுறுத்தினால், கனிமொழி போன்றவர்கள் பதவி இழக்க வேண்டியிருக்கும். அதனால் "இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டாம். வேண்டுமானால் இது சம்பந்தமா கலந்துரையாடல் நடத்தலாம்'ங்கிற கருத்தே தி.மு.க. சீனியர்களிடம் இருக்கு.''’

""முதல்வர் எடப்பாடி, 3-ந் தேதி மாவட்ட கலெக்டர்களோடு கான்பரன்ஸிங்கில் கலந்துரையாடி இருக்காரே.''’

""தலைவரே, ஜெ. முதல்வரா இருந்தப்பவே 4 வருஷமா நடத்தப்படாத மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு 5, 6, 7 தேதிகளில் நடப்பதையொட்டித்தான் முதல்வர் எடப்பாடி கலெக்டர்களோடு கான்பரன்ஸில் பேசினார். அப்ப, மாவட்டங்கள்ல என்னென்ன திட்டங்கள் நடந்துக்கிட்டிருக்கு? கிடப்பில் இருக்கும் திட்டங்கள் என்னென்ன? மாவட்ட வளர்சிக்கு என்னென்ன செய்யலாம்? அதற்கான திட்ட மதிப்பீடுகள் எவ்வளவுங்கிற முழுமையான ரிப்போர்ட்டுகளோட மாநாட்டுக்கு வாங்கன்னு, கலந்துரையாடலின்போது அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கார். இப்படிப்பட்ட மாநாடுகள் கலைஞர் பீரியடில்தான் தவறாமல் நடக்கும். அதனால் கோட்டை அதிகாரிகள் அந்த நாள் நினைவுகள்ல மூழ்கறாங்க.''’

""கலைஞரும், இப்ப தன்னை சந்திப்பவர்கள் மூலம் பழைய நினைவுகள்ல மூழ்கறார் போலிருக்கே?''’

kalaingar""உண்மைதாங்க தலைவரே, அண்மைக்காலமா கலைஞரின் உடல் நிலையிலும் மனநிலையிலும் அதிக முன்னேற்றமும் உற்சாகமும் தெரியுது. கலைஞரை சந்திக்கும் போதெல்லாம் முக்கியமான தகவல்களை அவரிடம் ஸ்டாலின் சொல்றார். கலைஞர் கூடவே எப்போதும் இருந்து உதவுகிறவரான நித்தியா, இங்கே நடக்கும் அத்தனை அரசியல் செய்திகளையும், கலைஞர் கவனத்துக்கு கொண்டுபோகிறார். அதையெல்லாம் கேட்கும்போது கலைஞர் இப்ப அதிகமா ரியாக்ட் பண்றாராம். அண்மையில் நடிகர் அறிவுநிதியின் மகனான தன் கொள்ளுப் பேரனோட கலைஞர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி, தி.மு.க.வினரை குஷிப்படுத்துச்சு. இந்த நிலையில் இலக்கியவாதியான கலைஞரை, கவிஞர் வைரமுத்து சந்திச்சி, தான் எழுதி வந்த "பிடரி கொண்ட சிங்கமே, நீ பேசுவாய் வாய் திறந்து'ங்கிற கவிதையை உருக்கமா, அவரிடம் படிச்சிக் காட்டினார். அப்ப கலைஞர் முகத்தில் புன்னகையும் பூரிப்பும் ததும்பி வழிஞ்சிது. வைரமுத்துவை ஏக்கமா பார்த்த கலைஞர், பழைய நினைவுகளோட அவர் கைகளை இறுக்கமா பற்றிக்கிட்டார்.''

""எப்பவும் கட்சிக்காரங்களோடவும் நண்பர்களோடவும் இருக்கும்போது, கலைஞரின் உற்சாகமே தனிதான். அதுசரி, ராஜ்பவன் சைடில் பரபரப்பு தெரிஞ்சிதே?''’

""அண்மைக்காலமா ஆக்ஷன் கிங்கா மாறியிருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 3-ந் தேதி, பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தை ராஜ்பவனில் கூட்டினார். அப்ப, கொஞ்சம்கூட உட்காராமல் நின்றபடியும் நடந்தபடியும் ஸ்பீச் கொடுத்த கவர்னர், "பல்கலைக் கழகங்களின் ஊழல், இந்த ஆட்சியில் பெரிய நோயாகப் பரவியிருக்கு. இதை அனுமதிக்க முடியாது. இனியும் ஊழல் நடந்தால், நான் சும்மா இருக்கமாட்டேன். கடுமையான நடவடிக்கைகள் எடுப்பேன்'னு சொன்னவர், "பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அத்தனை பேரும், ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தாகணும்'னு கறார் உத்தரவும் போட்டிருக்கார்.''’

""பல்கலைக்கழக விவகாரம் போலவே மணல் விவகாரத்திலும் புழுதி பறக்குதே.''’

""உண்மைதாங்க தலைவரே, விழுப்புரம் சரகத்தில் இருக்கும் மணல் ரீச்சுகளுக்கான டெண்டரை முடிவுசெய்ய 3-ந் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் தயாரானாங்க. ஆனா டெண்டருக்கான விதிகள்ல, பொக்லைன் மற்றும் வாகன எண்ணிக்கை குறித்த விதிமுறைகள், சேலம், நாமக்கல் பகுதியில் பெரும்பான்மையா இருக்கும் கவுண்டர் சமூக ஒப்பந்தக்காரர்களுக்கு சாதகமாகவும், தங்கள் விழுப்புரம் பகுதியில் பெரும்பான்மையா இருக்கும் வன்னிய சமூக ஒப்பந்தக்காரர்களுக்கு பாதகமாகவும் இருக்குன்னு அங்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கு. இதைத் தொடர்ந்து பிரச்சினை பெரிதாக, வேறுவழியில்லாமல் டெண்டரே நிறுத்தப்பட்டிருக்கு.''’

jaiananth""ஜெ.’வின் மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்துவரும் நிலையில், "ஜெ. மரணத்தில் சதி உள்ளது'ன்னு அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி கிளப்பியிருக்காரே?''’

""அமைச்சரின் அதிரடிக்கு முன்பே திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் அதிரடியா பதிலடி கொடுத்திருக்காரு. தன்னோட ’போஸ் மக்கள் பணி இயக்கத்தின்’ பிரதிநிதிகளை சந்திக்க புதுக்கோட்டைக்கு வந்த ஜெய்ஆனந்த், "இது தினகரன் ஆதரவோடு அவர் தலைமையில் இயங்கும் இயக்கம்'னு சொல்லிட்டு, "அம்மா ஜெ.’மருத்துவமனையில் இருந்தப்ப அவரை சின்னம்மா சசிகலாவோட, டாக்டர் சிவகுமார் போன்ற எங்க உறவுக்காரங்க மட்டும்தான் பார்த்தாங்க. முதலமைச்சர் உட்பட வேற யாரும் அவங்களை வார்டில் பார்க்கலை. கண்ணாடி வழியாத்தான் பார்த்தாங்க. விசாரணைக் கமிஷன் அமைக்கிறதுக்கு முன்னாடி அது தொடர்பான வீடியோவை வெளியிடுவேன்னு சொன்னேன். இப்ப அந்த வீடியோக்கள் கமிஷனிடம் கொடுக்கப்பட்டிருக்கு. கமிஷன், விசாரணைக்கு அழைத்தால் கண்டிப்பாக ஆஜராவேன்னு சொல்லி இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்பை அட்டாக் பண்ணினாரு.''