""ஹலோ தலைவரே... வரிச்சலுகை, புதுத்திட்டங்கள்னு பலவித எதிர்பார்ப்புகள் கொண்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியிருக்கு. இந்த பட்ஜெட்டால், பொருளாதார ரீதியில் என்னென்ன தாக்கங்கள்னு ஆளாளுக்கு அலசிக்கிட்டிருக்காங்க.''’
""ஆமாம்ப்பா. ஜனாதிபதி உரையில், நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலை நடத்துறது பத்தியும் ஒரு பாயிண்ட் இருப்பதைக் கவனிச்சியா?''
""கவனிச்சேங்க தலைவரே, இரண்டு தேர்தலையும் சேர்ந்து நடத்துறதுக்கான சோதனைக் களமா, தமிழகம் இருக்கலாம்னு டெல்லி வட்டாரம் சொல்லுது. இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் என்னதான் டெல்லியின் மனசு கோணாமல் நடந்துக்கிட்டாலும், அவங்க மக்கள் அதிருப்திக்கு ஆளாகி இருப்பதும், அது பா.ஜ.க.வுக்கும் எதிராக இருப்பதும் டெல்லியை ரொம்பவே யோசிக்க வச்சிருக்கு. பிளவுபட்ட அ.தி.மு.க. முழுசா ஒன்றானால்தான் மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்கமுடியும்னு கணக்குப்போடுது டெல்லி. முழுசான்னா, சசிகலா குரூப்பையும் சேர்த்து வலுவான அ.தி.மு.க. இருந்தால் நல்லதுன்னு ஒரு வியூகம் இருக்கு. ஜெ.’இல்லாத நிலையிலும் தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்கமுடியலைன்னா, அந்தக் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு கலகலத்துடும்னும் கணக்குப்போடுது. அப்படி ஒரு நிலை வந்தால், அது தமிழகத்தில்தான் பலமாக காலூன்ற வசதியா இருக்கும்ன்னும் பா.ஜ.க., வியூகங்களை வகுக்குது. இதுக்கிடையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 16-ல் வரப்போகுது. இந்தத் தீர்ப்பு சம்பந்தமான சிக்னலையும் சசி தரப்புக்கு டெல்லி கொடுத்திருக்காம்.''’
""என்ன சிக்னல்? பச்சையா? சிவப்பா?''’
""இப்போதைக்கு மஞ்சள் லைட்டுதாங்க தலைவரே எரியுது. சட்ட வல்லுநர்களோ, வழக்கின் போக்குகளை கவனிச்ச வகையிலே சட்டரீதியா, சசிகலாவுக்குப் க்ரீன் சிக்னல் கிடைக்கலாம்ன்னு சொல்றாங்க. அந்த சூழலில் மைனாரிட்டியான எடப்பாடி அரசுக்கு முட்டுக்கொடுத்தால், பா.ஜ.க.வின் பேர் ரிப்பேர் ஆகும். அதனால் அவங்களுக்குள்ளேயே பேசி, ஒற்றுமையாகட்டும் அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடப்பாடி அரசு கவிழட்டும். அப்படி கவிழ்ந்தா கவர்னர் ஆட்சிங்கிற பேர்ல ஒருவருட காலத்துக்கு தமிழகத்தை நம்ம கட்டுப்பாட்டில் வச்சிக்கலாம். அப்படியே நாடாளுமன்றத் தேர்தலோட தமிழக சட்டமன்றத் தேர்தலையும் வச்சிக்கலாம்னு மோடி தலைமையில் டெல்லியில் விரிவாகவே ஆலோசனைகள் நடக்குது.''’
""தனக்கு ஆபத்து வந்தா சமாளிக்கிறது எப்படின்னு, எடப்பாடியும் ஆலோசிக்காமலா இருப்பார்?''’
""முதல்வர் எடப்பாடி, இதில் மட்டுமல்ல, எல்லாத்திலுமே ரொம்பத் தெளிவாத்தான் இருக்கார். உதாரணமா, விடுமுறைக்குப் பின்னர் பணியில் சேர்ந்திருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தன்னை தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கணும்னு முதல்வர் எடப்பாடியிடம் கேட்டுக்கிட்டார். எடப்பாடியோ, அவசரப்படாதீங்க. எங்களால் உங்களுக்கு எந்தச் சிக்கலும் வராதுன்னு அவரை சமாதானப்படுத்தி அனுப்பினார். அதுக்கப்புறம், அவருக்கு அடுத்து அடிஷனல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் யார் யார் இருக்காங்கன்னு ஒரு பட்டியலை அதிகாரிகள் மூலம் ஆர்வமா எடுக்கச்சொல்லி வாங்கி வச்சிருக்கார். அதனால் அவரைப் பொறுத்தவரை, அடுத்த தலைமைச் செயலாளர் ரெடி. இவ்வளவு உஷாரா இருக்கிறவர்தான் ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு சசிகலா தரப்புக்கும் தூது விட்டிருக்காரு''’
""எடப்பாடி அரசைக் கவிழ்க்க தினகரன் நாள் குறிச்சிருக்காரே!''’’
""தினகரனோடதானே பிரச்சினை. அவர் மட்டும் வேண்டவே வேண்டாம். மற்றபடி சசிகலாவுக்கு விசுவாசமா இருப்போம்ங்கிறதுதான் எடப்பாடி ஃபார்முலா. தன் மகன் மிதுன் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிற சசிகலாவுக்கு இந்தத் தகவல்களை அனுப்பிக்கிட்டே இருக்கார். இந்த நிலையில், ஆறுமுகசாமி கமிஷனில் ஜெ.’வின் முன்னாள் செயலாளரான வெங்கட்ரமணன், வாக்குமூலம் கொடுத்திருக்கார். இவர் அப்போதிருந்தே சசி தரப்புக்கு எதிரானவர். இதேபோல் ஜெ.வின் இதர முன்னாள் செயலாளர்களும் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. விசாரணை ஆணையத்தில் சசிகலாதான் ஜெ. மரணத்துக்கு காரணம்னு புகார் கொடுத்தவங்களை சசி தரப்பு குறுக்கு விசாரணை செய்ய, நீதிபதி ஆறுமுகசாமி அனுமதி கொடுத்திருப்பதை, சசி தங்கள் தரப்புக்கு சாதகமா கருதுது.''’
""சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் போய்ப் பார்த்திருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, 30-ந் தேதி தினகரன் சிறைக்குப் போய் சசிகலாவை பார்த்திருக்கார். அப்ப பல்வேறு விசயங்கள் பத்தி ஆலோசனைகளை சசிகலா அவரிடம் நடத்தியிருக்கார். இதேபோல் பிப்ரவரி 1-ந் தேதி திவாகரன், ஜெய் ஆனந்த், விவேக், கிருஷ்ணவேணி போன்ற முக்கியமான குடும்ப உறுப்பினர்களை சசிகலா, தன்னை சந்திக்க வருமாறு கூப்பிட்டிருக்கார். ஏன்னா ஆளாளுக்குத் தனித்தனியா, பாலிடிக்ஸ் பண்ணாம ஒத்துமையா இருக்கணும்னு அவர் வலியுறுத்த நினைக்கிறாருன்னு ஒருதரப்பும், யாருக்கும் எந்த பவரும் இல்லைன்னு அவங்களை அவர் அடக்கிவைக்கப் போறார்னு ஒரு தரப்பும் சொல்லுது. அதேபோல் தன்னை ஜெயிலில் சந்திக்க விரும்பும் கணவர் நடராஜன் பத்தின முடிவை, அவர் 1-ந் தேதி தன் உறவினர் மூலம் சொல்லியனுப்புவாராம்.''’
""மந்திரிகள் மத்தியில் மதுரை கெடாவெட்டுப் பத்தின பேச்சாவே இருக்கேப்பா?''’
""பெரிய ஆடு ஒண்ணு சிக்காம அங்க வந்து தப்பிச்சிருச்சே அந்த விழாவைத்தானே கேக்குறீங்க. அமைச்சர் செல்லூர் ராஜு தன் பேரன்களின் காதணி விழாவை ஏக தடபுடலா நடத்தினார். வந்தவங்களுக்கு கறிச்சோறு போட, மாவட்டத்தில் மேய்ஞ்ச அத்தனை ஆடுகளையும் அவர் டீம் வாங்கிடுச்சி. அதனால் மதுரையே அன்னைக்கு மசாலா வாசனையில் மூழ்கி இருந்துச்சு. விழா செலவெல்லாம் கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் தலையில் கட்டப்பட்டதால கோலாகலத்துக்குப் பஞ்சமில்லை. இங்க என்ன நடந்துச்சுன்னா, டைரக்டர் சசிகுமார் உறவினர் தற்கொலை விவகாரத்தில் போலீசால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான ஃபைனான்ஸியர் மதுரை அன்புச்செழியன், இந்த விழாவில் பளீர்னு கம்பீரமா கலந்துக்கிட்டார். முதல்வரிசையில் அமர்ந்திருந்த அவருக்கு போலீஸ் அதிகாரிகள் மட்டுமில்லாம... உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்ற மந்திரிகள் பலரும் வணக்கம் வச்சாங்க. முதல்வர் எடப்பாடி கறிவிருந்து சாப்பிட்ட அறைக்குள், யாருக்கும் அனுமதி இல்லை. அங்க அன்புச்செழியன் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார். இந்தக் காதுகுத்து விழாவில் மட்டுமே மந்திரிக்கு 25 கோடிக்கு மேல மொய் வசூலாம். தற்கொலைக்கு காரணம்னு குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவா இருந்த குற்றவாளியை விழாவுக்கு அழைச்சி, முதல்வரும் துணை முதல்வரும் சந்திச்சிருக்கிறது இந்த ஆட்சியோட லட்சணத்தைக் காட்டுது. இந்தத் தகவலை எக்ஸ்க்ளூசிவ்வா வெளியிட்டது நம்ம நக்கீரன் இணையதளம்தான்.''’’
""ஆளுங்கட்சி மேட்டர் ஓ.கே. எதிர்க்கட்சியான தி.மு.க.வில் உதயநிதி பற்றிய "டாக்' பரவலாயிருக்கே!''
""ஆமாங்க தலைவரே, போனதடவையே அவர், அரசியல் மேடையிலும், போராட்டத்திலும் முகம்காட்டியது பத்தி நாம பேசினோம். உதயநிதியின் இந்த திடீர் என்ட்ரி ஏன்னு விசாரிச்சப்ப கூடுதல் தகவல் கிடைச்சிது. கடந்த நவம்பர் டிசம்பரில் தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை விறுவிறுப்பா நடந்ததாலும் 18-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள்ன்னு பார்த்தப்ப, அவங்க எண்ணிக்கை குறைவாவே இருந்திருக்கு. இந்த நிலையில் 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுதலையானார். அந்த சமயத்திலும் அவரோட பிறந்தநாளின்போதும் சாதிப்பெயர் போட்டு, இளைஞர்கள் பலரும் கனிமொழிக்கு போஸ்டர் அடித்து அவரை வாழ்த்தியிருந்தாங்க. அதனால் சாதி கடந்த நிலையில் அனைத்துத் தரப்பு இளைஞர்களையும் கவர, சினிமா ஈர்ப்பைக் கொண்டிருக்கிற உதயநிதியைக் களமிறக்க, கட்சித் தலைமை முடிவெடுத்தது. அதேபோல் தி.மு.க.வின் இளைஞரணி பொறுப்பை, ஸ்டாலின் தனக்குப்பின் மாஜி மந்திரியான வெள்ளக்கோயில் சாமிநாதனிடம் கொடுத்திருந்தார். அவருக்கு ஸ்டாலின் மாதிரியான ஈர்ப்பு இல்லாததால், அந்தப் பதவியை நோக்கி உதயநிதி விரைவில் நகர்த்தப்படுவாருன்னும் சொல்லப்படுது.''’
""பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து, தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் நடத்திய மறியல் போராட்டம் பத்தி "நக்கீரன்'ல நிறைய படிச்சேம்ப்பா. அது சம்பந்தமா உன்கிட்ட ஏதாவது தகவல் இருந்தா சொல்லு.''’
""தி.மு.க. மா.செ.க்கள் தலைமையில் 27-ந் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மா.செ.வும் மாஜி அமைச்சருமான எ.வ.வேலு மட்டும் கலந்துக்கலை. கட்சியின் பவர் புள்ளியுடன் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் சங்கடத்தால்தான் அவர் கலந்துக்கலைங்கிற தகவல் பரவ... கட்சித் தலைமை அவரை அழைத்துக் கறார் குரலில் பேசியது. இதைத் தொடர்ந்து அவர் 29-ந் தேதி நடந்த மறியல் போராட்டத்துக்கு வந்துட்டார். அதேபோல், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸை, ராயப்பேட்டையில் திருநாவுக்கரசர் கலந்துகொள்ளும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சத்தியமூர்த்திபவன் தகவல் கொடுத்திருக்கு. பீட்டரோ, திருநாவுக்கரசர் பக்கம் நிற்காமல், ஸ்டாலின் தலைமையில் கொளத்தூரில் நடந்த போராட்டத்தில் கலந்துக்கிட்டார்.''’
""கடலோரத்தில் இருந்து கிடைச்ச ஒரு வெயிட்டான தகவலைச் சொல்றேன். வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கார்னெட் மணலை, தூத்துக்குடி மாவட்டத்தில் குவிச்சு வச்சிருக்கார். இங்கெல்லாம் ரெய்டு நடந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மணலை எல்லாம் ஏற்றுமதி செய்ய துறைமுகங்களில் அனுமதி கிடைக்காமல் போராடி வந்த வைகுண்டராஜன், அம்பானி குஜராத்தில் தனியே ஒரு துறைமுகத்தை உருவாக்கிய மாதிரி, தானும் உருவாக்க முடிவெடுத்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்னார் மூலம், துறையின் கேபினட் மந்திரியான நிதின் கட்கரியைப் பார்த்தார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பரிந்துரை செய்தார். இந்த விவகாரம் அமித் ஷாவரை போனது. எல்லாம் சுமுகமாக முடிஞ்சதால், "வி.ஆர்.ஜெ. முனையம்' என்ற பெயரில் புதிய தனியார் துறைமுகம் ஒன்றை உருவாக்குவதற்கான உரிமத்தைத் தன் தம்பி ஜெகதீசன் பெயரில் பெற்றுவிட்டாராம் வைகுண்டராஜன். இதற்காக, துறைமுகப் பொறுப்புக் குழுத் தலைவர் ஜெயகுமாரோடு 16-ந் தேதி ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்குதாம்.''’
அட்டைப் படங்கள்: அண்ணல்
நித்தியின் சேட்டை! எச்சரித்த நீதிபதி! 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார் நித்தியானந்தா. இதை எதிர்த்து ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை ஆதீனமாக நித்தி தொடர்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேற்படி வழக்கின் விசாரணை, கடந்த 29-ஆம் தேதி நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. "பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என நித்தியின் வக்கீல் கேட்க, ""31-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும்'' என எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி. நீதிமன்ற நடவடிக்கைகளையும் நீதிபதியை நோக்கியும் நித்தியின் சிஷ்யன் நரேந்திரன் என்பவர் செல்போனில் படம் எடுப்பதைப் பார்த்து கடும் கோபம் அடைந்த நீதிபதி மகாதேவன், போலீசாரைக் கூப்பிட்டு, அவரை அரெஸ்ட் பண்ணுமாறு உத்தரவிட்டார். அந்த செல்போனை போலீசார் பறித்து நரேந்திரனை எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டனர். -ஜீவாபாரதி |