""ஹலோ தலைவரே, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் சண்டித்தனம் பண்ணும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, சனிக்கிழமையன்று திடீரென மெரீனாவில் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியதால் அரசும் காவல்துறையும் பதறிடிச்சி. உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பையும் பலப்படுத்திடிச்சி.''
""ஆனாலும் மக்களோட போராட்ட உணர்வு குறையலையே... கட்சிகளும் களமிறங்கிடுச்சே''.
""தி.மு.க. அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்தி, போராட்ட வியூகங்களை விறுவிறுப்பா வகுக்குது. பா.ம.கவோ தமிழக விவசாயிகள் சங்கத்தோடு சேர்ந்து, 11-ந் தேதி பந்த்தை அறிவிச்சிருக்கு. தமிழக வாழ்வுரிமைக் கட்சியோ, வரிகொடா போராட்டம்ன்னு சொல்லி, சாலைகள்ல இருக்கும் சுங்கச் சாவடிகளுக்கு வரி கட்ட மாட்டோம்ன்னு அறிவிச்சிருக்கு. இப்படி தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடங்கியிருக்குதே.''’
""தலைவரே, மு.க. ஸ்டாலின் தலைமையில் 30-ந் தேதி காலை கூடிய தி.மு.க. செயற்குழுவில், மா.செ.க்களுக்கு பதில் செயற்குழு உறுப்பினர்கள் அதிகமா பேசுங்கனு ஸ்டாலின் கேட்டுக்கிட்டார். விதிவிலக்கா மாஜி மந்திரியான கீதாஜீவன் மட்டும் மா.செ.க்கள் சார்பில் பேசினார். அவர், தன்னோட தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் நடத்தப்படும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு தி.மு.க. துணைநிற்பதோட, அந்த மக்களுடன் சேர்ந்து தீவிரமா போராடணும்னு கேட்டுக்கிட்டார். அதேபோல் எக்ஸ் எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணன், அவரோட தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நியூட்ரினோ திட்டத்தின் பாதகங்களைப் பத்தி விரிவா பேசினார். டி.ஆர்.பாலு பேசும்போது, காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி சென்னையிலிருந்து தஞ்சை வரை நடைபயணம் நடத்தலாம்ன்னு ஆலோசனை சொன்னார். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு, கூட்டுறவு சங்க முறைகேடுகளுக்கு கண்டனம்னு 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போராட்டங்கள் குறித்து தோழமைக் கட்சிகளோடு பேசி, உரிய முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்த செயற்குழு, ஸ்டாலினுக்குக் கொடுப்பதாக அறிவித்தது. காவிரி பாயும் டெல்டா மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி மீட்புப் பயணத்தை மக்களைத் திரட்டி நடத்தும் ஆலோசனையும் இருக்குதாம்.''’
""மகாராஷ்ட்ரா விவசாயிகள் பாணியிலா? தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, கனிமொழி எம்.பி.யும் செயற்குழுவில் பேசினாராமே?''’
""ஆமாங்க தலைவரே, அவர் பேசும்போது, "பிரதமர் தமிழகத்துக்கு 11-ந் தேதி வர்றதா இருக்கார். அப்ப அவருக்கு நம்மோட எதிர்ப்பை நேரடியா காட்டும் விதத்தில் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டணும்'னு சொன்னார். இதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடக்கும்'னு சொன்னார்.''’
""காவிரி விவகாரத்தில் அரசுத் தரப்பில் என்னென்னவோ நடக்குதே?''’
""உச்சநீதி மன்றம் கொடுத்த கெடு தேதியான மார்ச் 30-க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்பதைப் புரிஞ்சிக்கிட்ட முதல்வர் எடப்பாடி, கடந்தவாரம் சட்ட ஆலோசனைக்காக, தனது செயலாளர்களில் ஒருவரான சாய்குமார், பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர், காவிரி வல்லுநர் குழு சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் டெல்லிக்கு அனுப்பிவச்சார். அவங்க, தமிழகத்துக்கான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சேகர் நாப்டேவை சந்திச்சி, மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமா? என ஆலோசிச்சாங்க. சேகர் நாப்டேவோ, "மத்திய அரசு இந்த வழக்கை கர்நாடகத் தேர்தல் வரையிலாவது இழுத்தடிக்கத் திட்டமிடறதா தகவல் வருது. அதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட ’"ஸ்கீம்'’ என்ற சொல்லை வைத்து, அது, திட்டம் என்பதைக் குறிக்குமா? அல்லது வாரியம் எனப்படும் போர்டு என்பதைக் குறிக்குமான்னு சுப்ரீம் கோர்ட்டிலேயே மனு போடப்போறாங்க. அதனால் மொட்டையா நீதிமன்ற அவமதிப்புனு வழக்கு தொடர்வது பலவீனமான முடிவு'ன்னு சொன்னார். இதைவைத்து 30-ந் தேதி சீனியர் மந்திரிகளோடும் அதிகாரிகளோடும் எடப்பாடி ஆலோசிச்சார். சனிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்யும்வரை காத்திருந்து, அதன்பிறகுதான் மாநில அரசு மனு தாக்கல் செய்தது.''’
""எல்லாமே ஐவாஷ் தானா? நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்வோம்னு உணர்ச்சிகரமா பேசியிருந்தாரே?''’
""முதல்வர் எடப்பாடிக்கு நவநீதகிருஷ்ணன் அப்படிப் பேசியதில் உடன்பாடில்லை. அதோட திருத்தணி எம்.பி. ஹரி, மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிச்சாங்க. டெல்டா பகுதி அ.தி.மு.க. எம்.பி.க்களும் ராஜினாமா முடிவில் இருந்தாங்க. மேலும் எம்.பி.க்களான திருச்சி குமாரும், கடலூர் அருண்மொழித்தேவனும் முதல்வர் எடப்பாடியை நேரிலேயே பார்த்து, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், நாங்கள் தொகுதிக்குள் போகவே முடியாது. மக்கள் கோபப்படுவாங்க. அதனால் நாங்களும் ராஜினாமா செஞ்சிடறோம்'ன்னு சொன்னாங்க. எடப்பாடியோ, "அவசரப்படாதீங்க. ராஜினாமாவால் எதுவும் நடக்காது. அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் வேணுகோபாலை ஆலோசிக்காமல் நவநீதகிருஷ்ணன் பேசிட்டாரு. கொஞ்சம் பொறுங்கள்' என்று சமாதானப்படுத்தியிருக்காரு. இதற்கிடையிலே, வாரியம் அமைக்கப்படாததால் எம்.பி.க்கள் தற்கொலை பண்ணிக்கணும்னு சொல்லி எலி பாய்சன், தூக்கு கயிறுன்னு பார்சல் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க.''’
""காவிரி விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் தனித்தனியா போராடாமல், ஒத்துமையா ஒண்ணா நின்னு போராடினால் அதிகபலன் கிடைக்குமேன்னு விவசாயிகள் தரப்பு ஆதங்கப்படுது. பா.ஜ.க. அரசோ தமிழர்களை வஞ்சிக்குது. இந்த நிலையில், உச்சநீதி மன்றத்திலும் பா.ஜ.க.வின் போக்கு, சர்ச்சைப் புயலை உருவாக்கியிருக்கு போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதியான கிருஷ்ணபட், நேர்மையானவர்னு பெயரெடுத்தவர். இவர் ஜெ.’வின் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்துப் புகழ்பெற்ற, நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் பேட்ச் மேட். இந்த கிருஷ்ணபட்டை, நீதிபதிகள் தேர்வுக் குழுவான கொலீஜியம், உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்புக்குப் பரிந்துரை செய்தது. மத்திய அரசோ, இதை ஏற்காமல், அவர் மீது புகாருக்கு ஆளான ஒரு பெண் நீதிபதி சொன்ன குற்றச்சாட்டைக் காரணம் காட்டி, அவரை நிராகரித்தது. அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு, கிருஷ்ணபட் நிரபராதின்னு முடிவான பிறகு, மறுபடியும் அவரை கொலீஜியம், சுப்ரீம் கோர்ட்டுக்குப் பரிந்துரை பண்ணியது. இந்த முறையும் அதை நிராகரித்த மத்திய அரசு, கிருஷ்ணபட்டை மறுபடியும் விசாரிக்கும்படி, தன் சட்டத்துறை மூலம், கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நேரடியாகவே உத்தரவிட்டது.''’
""இது நீதித்துறையுடன் மோதல் போக்கை உருவாக்கும் நடவடிக்கையாச்சே!''’
""ஆமாங்க தலைவரே, இதேபோல் நீதிபதி குன்ஹாவையும், சுப்ரீம்கோர்ட் நீதிபதி பொறுப்புக்கு வந்து விடாதபடி பா.ஜ.க. தடுக்கலாம்ங்கிற பேச்சும் நீதித்துறையிலேயே அடிபடுது. இதையெல்லாம் பார்த்துதான், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ’ஒருவரான செலமேஸ்வர், மத்திய அரசின் இந்த நீதித்துறை அத்துமீறல் குறித்த ஒரு கண்டனக் கடிதத்தை 22 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பிவைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கார். இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருது. இதெல்லாம் பா.ஜ.க. அரசின் இமேஜை கிடுகிடுக்க வச்சிக்கிட்டு இருக்கு.''’
""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். மத்திய கல்வித் திட்டமான சி.பி.எஸ்.இ.க்கான தேர்வில், 10 ஆம் வகுப்புக்கான கணித வினாத்தாளும், 12 ஆம் வகுப்பிற்கான பொருளாதார வினாத்தாளும் லீக் ஆயிடிச்சி. அதனால் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கு. இதை எதிர்த்து பரவலாக மாணவர்கள் போராடிக்கிட்டிருக்காங்க. மார்ச் 31-ந் தேதி நடந்த போராட்டத்தில் 9 மாணவர்கள் உட்பட 12 பேர் கைதாகியிருக்காங்க. இந்தக் களேபரங்களால் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சரவையில் இருந்து தூக்கப்படலாம்ங்கிற பேச்சு, பா.ஜ.க. வட்டாரத்தில் பரவுது.''