""ஹலோ தலைவரே, மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகிட்ட அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தையே புறக்கணிச்சிட்டு சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடியிருக்காங்களே கவனிச்சீங்களா?''’
""ஆமாம்பா, விழாவைத் தொடங்கும்போது பாடவேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பதில், மஹா கண்பதிங்கிற சமஸ்கிருதப் பாடலைப் பாடியிருக்காங்க. ஏற்கெனவே காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிச்சாரு, இப்ப பா.ஜ.க. மத்திய அமைச்சர்கள் கலந்துகிட்ட விழாவிலேயே அவமானம்.''
""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. தலையீடு பலவிதங்களிலும் இருப்பதாக அ.தி.மு.க.வினரே குற்றம் சாட்டுறாங்க. இரட்டை இலை சின்னத்தில் ஜெயிச்சவர்ன்னாலும், மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி, அ.தி.மு.க.வின் பா.ஜ.க., நெருக்கத்தை தொடர்ந்து விமர்சிக்கிறார். அதேபோல், மதுரை போனபோதும் அவர் விமர்சிக்க, இந்தத் தகவல் அப்பவே அமைச்சர் உதயகுமார் காதுக்குப் போச்சு. உடனே தன் ஆட்களை, அன்சாரி தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்கு அனுப்பினார். அவங்க அன்சாரி இருந்த அறையைப் பூட்டைப் போட்டு பூட்டினாங்க. அப்ப சில பத்திரிகையாளர்களும் காவல்துறையினரும் அந்த அறைக்குள் இந்தாங்க.இதைப்பார்த்த அன்சாரி, இந்த அராஜகத்தை சும்மா விடமாட்டேன். மந்திரி மீது புகார் கொடுப்பேன்னு எச்சரிச்சார். இதனால், அந்த அறையைத் திறந்துவிட்ட உதயகுமார் ஆட்கள், அன்சாரி அரசு அலுவலகத்தில் அத்துமீறி கூட்டம் போட்டார்ன்னும், பொதுமக்களுக்கு இடையூறு செய்தார்ன்னும் அவர் மேல் தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்துட்டாங்க. அதன்பேரில், அன்சாரி மேல் எஃப்.ஐ.ஆர். போட்ட போலீஸ், அன்சாரி கொடுத்த புகாரை வாங்க மறுத்துடுச்சு. டெல்லி பின்னணியும் இதில் இருக்குதாம்.''’
""கைதிகள் விடுதலை விசயத்திலும் இந்துத்வா தன் மூக்கை நுழைச்சிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, முதலில் ஜெ. பிறந்தநாளுக்காக கைதிகளை விடுவிப்பதா சொல்லிட்டு, அப்புறம் ஏதேனும் சர்ச்சையாகும்ங்கிறதால எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, 1500 கைதிகளை விடுதலை செய்யப்போறதா எடப்பாடி அரசு அறிவிச்சிது. இதையறிந்த மோடி அரசு, மத்திய புலனாய்வுத்துறை மூலம், எக்காரணம் கொண்டும் முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக் கூடாதுன்னு சொன்னது. இதைத் தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களாகவும், தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்படாதவர்களாகவும் இருக்கும் கைதிகளே விடுவிக்கப்படுவார்கள்ன்னு எடப்பாடி அரசு அறிவிச்சிருக்கு. இதனால் நீண்டகாலமா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகள் விடுதலை ஆக முடியலை.''’
""வக்ஃப் போர்டு விவகாரத்திலும் பா.ஜ.க. மூக்கை நுழைக்கிதுன்னு புகார் எழுதே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, வக்ஃப் போர்டு சேர்மன் பதவிக்கான தேர்தல் 26-ந் தேதி நடக்கும்ன்னு எடப்பாடி அரசு அறிவிச்சிருந்தது. இந்தப் பதவிக்கு ஏற்கெனவே சேர்மனாக இருந்த தமிழ்மகன் உசேன் ஆசைப்பட, அவரையே நிற்கச்சொன்னார் முதல்வர் எடப்பாடி. தமிழ்மகன் உசேன் மேல குற்றச்சாட்டுகள் இருப்பதால் உங்கள் கட்சியிலேயே இருக்கும் அன்வர்ராஜா எம்.பி.யை நிறுத்துங்கன்னு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கோரிக்கை வச்சாங்க. தமிழ் மகன் உசேன் இ.பி.எஸ். ஆள், அன்வர்ராஜா ஓ.பி.எஸ். ஆள். அன்வர்ராஜாவுக்குத்தான் அதிக ஆதரவுங்கிற தகவல் பா.ஜ.க. தலைமைக்குப் போனது. முத்தலாக் சட்ட விவகாரத்தில் பா.ஜ.க.வை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சிச்சவர் அன்வர் ராஜா. அதனால் அவர் வக்ஃபோர்டு சேர்மனாக ஆகக் கூடாதுன்னு டெல்லியில் இருந்து எடப்பாடி அரசுக்கு உத்தரவு வந்தது. இதனால் 26-ந் தேதி நடக்க இருந்த தேர்தலை ஒத்திவைப்பதாக, 25-ந் தேதி வக்ஃப் போர்டு உறுப்பினர்களுக்கு தகவல் போனது. இதில் கொதிப்பான வக்போர்டு உறுப்பினர்கள் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் எம்.எல்.ஏ., அபூபக்கர் தலைமையில், செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் வக்ஃப் போர்டு அலுவலகத்தில் கூடி கடும் எதிர்ப்பை தெரிவிச்சி முறைப்படி தேர்தல் நடத்தணும்னு சொல்லியிருக்காங்க.''’
""அ.தி.மு.க. கட்சி, முஸ்லிம்கள் அமைப்புன்னு கைவச்சி, சோவின் "துக்ளக்' பத்திரிகையையும் பா.ஜ.க. தரப்பு ஆக்கிரமிக்கப் பார்க்கறதா புகார் எழுந்திருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, சோ இருந்தவரை மத்தியில் மோடியையும் தமிழகத்தில் ஜெ.வையும் அவர் ஆதரித்தாலும், இரு கட்சிகளையும் அவ்வப்போது லேசாய் விமர்சிச்சி, நடுநிலை மாதிரி காட்டிக்குவாரு. சோ மறைந்த பிறகு, துக்ளக்கில் கட்டுரைகள் எழுதிவந்த ஆடிட்டர், அதன் ஆசிரியரானார். அதன்பின் முழுக்க முழுக்க அது பா.ஜ.க. பத்திரிகையாகவே மாறிடிச்சு. இதுக்கு சோ குடும்பத்திலும் வாசகர்களிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்புச்சு. இதன்பின் ஆடிட்டர் தரப்பு, அந்தப் பத்திரிகையை தன் மனைவி மீனா பெயரில் எழுதிக்கொடுக்கும்படி வற்புறுத்துதுனு சோ மனைவி சௌந்தரா புலம்பறாரு. சோ இருக்கும்போது ஆடிட்டரின் மனைவி மூலம் எட்டரைக் கோடி ரூபாய் சோவுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு ஈடாகத்தான் பத்திரிகையை ஆடிட்டர் கேட்கறாருன்னும் ஒரு தரப்பு சொல்லுது. சோ குடும்பமோ, தங்களோட வீட்டுக்கு ஒரு கட்டுரையாளரும், ஒரு தொழிலதிபரும், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அடிக்கடி வந்து, சோவின் மனைவி, மகள், மகன் ஆகியோரிடம் பத்திரிகையைக் கேட்டு வற்புறுத்துவதாகவும் இதன் பின்னணியில் ஒரு பெரிய பத்திரிகை நிறுவனர் இருப்பதாவும் சொல்லுது. ஆடிட்டர் தரப்போ, "அப்படியெல்லாம் இல்லை. சோ இருக்கும் போது போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படிதான் எல்லாம் நடக்குது'ன்னு சொல்லுது. சோ அபிமானிகள், சோ பாணியே துக்ளக்கில் தொடரணும்னு சொல்றதோட, சோ குடும்பத்துக்கு மிரட்டல் விடுப்பதை கண்டிக்கிறாங்க.''’
""அ.தி.மு.க., தரப்பிலும் சிலை சர்ச்சை, பத்திரிகை சர்ச்சைன்னு பலவும் கிளம்பியிருக்கே?
""நமது எம்.ஜி.ஆருக்கு போட்டியா தங்கள் தரப்பிற்கு ‘"நமது புரட்சித் தலைவி அம்மா'ங்கிற பேரில் எடப்பாடி தரப்பு ஒரு நாளிதழை, ஜெ.’ பிறந்தநாள்ல தொடங்கியிருக்கு. நமது எம்.ஜி.ஆரில் ஆசிரியராக இருந்த அழகு மருதுராஜ்தான் இதன் ஆசிரியர். இதழ் தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 24-ந் தேதி ஏட்டிக்குப் போட்டியான இரண்டு பத்திரிகையிலும் அவர் பெயரே ஆசிரியர்ன்னு குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பின் மறுநாளில் இருந்து "நமது எம்.ஜி.ஆரில்' பொறுப்பாசிரியர்ன்னு பூங்குன்றன் பேரைக் குறிப்பிட்டாங்க.''’
""ஓஹோ.''’
""இந்த அம்மா பத்திரிகையின் பின்னணி பத்தி நாம் விசாரிச்சப்ப, அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவரான சந்திரசேகரன் என்பவரும், எடப்பாடி, தங்கமணி ஆகியோரின் உறவினர்களும் இருக்காங்கன்னும், இதை மேற்பார்வை பார்ப்பவர் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன்னும் சொல்லுறாங்க. அதேபோல் அ.தி.மு.க. அலுவலகத்தில் திறக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை அவசர அவசரமாக செய்தவர், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான பிரசாத் என்பவராம். சிலையைப் பார்த்த அ.தி.மு.க.வினரே டென்ஷனாயிட்டாங்க. அழகான ஜெ.வை இப்படியா அசிங்கப்படுத்துற மாதிரி மோசமா சிலை செய்றதுன்னு ஓப்பனா பேச, அமைச்சர் ஜெயக்குமாரோ "சிலையை விமர்சிப்பவர்கள் மனசாட்சி இல்லாத மிருகங்கள்'னு பேய் மாதிரி பேசுனாரு. ஆனாலும், கட்சியினர் மத்தியிலேயே, சிலை ஜெ.வை போல் இல்லைன்னு கடும் எதிர்ப்பு வந்ததால், அந்த சிலையை அகற்றிவிட்டு, திருத்தமான சிலையை வைப்போம்ன்னு எடப்பாடி அரசு அறிவிச்சிருக்கு. ஜெ.வுக்கு தங்கத்திலே சிலை வைக்கணும்னு சசிகலா வெளியில இருந்தப்ப முயற்சி எடுக்கப்பட்டிருக்கு. ஹைதராபாத்தில் அழகான சிலையும் ரெடியானது. ஆனால் எடப்பாடி தரப்போ அசிங்கப்படுத்திடிச்சுன்னு சொல்றாங்க.''’
""தொண்டர்களாகிவிட்ட கமல் ரசிகர்களின் மனநிலை எப்படி?''
""மக்கள் நீதி மய்யம்; கட்சியை ஆரம்பிச்சிருக்கும் கமல், மாவட்ட பொறுப்பாளர்கள்கிட்ட தொடர்ந்து பேசுறாரு. விரைவில் மற்ற அரசியல்கட்சிகளைப் போல் மாநகர், பேரூர், நகரம், ஒன்றியம், வார்டுகள், கிளைகள்ன்னு கட்சியை வேரூன்றச் செய்ய, வியூகங்களை வகுத்துக்கிட்டிருக்கார். இப்ப அவர் தன் உயர்நிலைக் குழுவில் பெரும்பாலும், தனக்கு நெருக்கமான அறிவுஜீவிகளையே வச்சிருக்கார். இதில் கமலின் சீனியர் ரசிகர் மன்றப் பிரமுகர்கள் இடம்பெறணும்னு ஆசைப்படறாங்க. கமலும் அவர்களிடம், "உங்களுக்கும் வயசு ஆயிடிச்சி. பேரன் பேத்திகளைப் பார்த்தவங்களும் இருக்கீங்க. அதனால் உங்கள் மனநிலை எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன செய்யணுமோ அதைக் கட்டாயம் செய்வேன்'னு உத்தரவாதம் கொடுத்திருக்காரு.''’
நக்கீரன் சட்டப்போர்! வெற்றித் தீர்ப்பு! ஏழை எளிய பெண்களை பூ கட்டும் வேலை தருவதாக அழைத்துச் சென்று, மாத்திரைகளை கொடுத்து சோதனை எலிகளாக்கி மருத்துவப் பரிசோதனை செய்வதை கள ஆய்வுசெய்து, "மர்ம மாத்திரை! சோதனை எலிகளான பெண்கள்!' என்கிற தலைப்பில் "நக்கீரனில்' அம்பலப்படுத்தினோம். மேலும், பிரத்யேக வீடியோ ஆதாரத்துடன் "நக்கீரன்' இணையதளத்தில் நாம் வெளியிட்ட செய்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது மருந்து பரிசோதனை செய்த ஐ.எஃப்.எம்.ஆர். (Institute for Finanacial Management and Research) பொது நிறுவனம். அந்த வழக்கில் நக்கீரனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. மேலும், ""ஐ.எஃப்.எம்.ஆர். சொசைட்டி என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது. அவர்களது செயல்பாடுகளை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனம் உரிமை கோர முடியாது'' என்றும் கூறி தடையை நீக்கியது உயர்நீதிமன்றம். நக்கீரன் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றித்தீர்ப்பு பத்திரிகை, ஊடகங்களுக்கு மட்டுமல்ல… இணையதளம் மற்றும் சோஷியல் மீடியாக்களுக்கும் கிடைத்த வெற்றித் தீர்ப்பு! -மனோ |