""ஹலோ தலைவரே, பரோல்ல வந்திருக்கும் சசிகலா, தனக்குக் கொடுக்கப்பட்ட 15 நாள் விடுப்பு முடியறதுக்குள்ளேயே சட்டுபுட்டுன்னு தன் கணவர் நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்திமுடிச்சிட்டு, ஜெயிலுக்கே போய்டலாம்ங்கிற மனநிலையில் இருக்காங்களாம்.''’
""என்னப்பா சொல்றே?''’
""நான் சொல்லலீங்க தலைவரே.. சசி தரப்புதான் சொல்லுது. மறைந்த நடராஜன், தன் பேரிலும் பினாமிகள் பேரிலும் ஏகப்பட்ட சொத்துக்களை வச்சிருக்காராம். அது தமிழ்நாட்டிலும், வெளி மாநிலங்கள்லயும், வெளிநாடுகள்லயும் கூட இருக்குதாம். அதையெல்லாம் இப்ப ஜரூரா கணக்கெடுக்குறாங்க. நடராஜன் தரப்போ, நடராஜனின் கடைசிக் காலத்தில் சசிகலா தரப்பு அவரை ஒரு பொருட்டாவே மதிக்கலைன்னும் ஜெ.’ பெயரைச் சொல்லியே அவரை ஓரம்கட்டியதோட, ஜெ.’ இறந்த பிறகும் அவரை கார்டனுக்குள் அனுமதிக்கலைன்னும், சிறையில் தன்னை சந்திக்கவும் நடராஜனை சசிகலா அனுமதிக்கலைன்னும் கோபப்படுது. அதனால் நடராஜன் தொடர்பான சொத்துக்களை சசி தரப்பு கைப்பற்றிவிடக் கூடாதுன்னு அது வரிஞ்சு கட்டுது''’
""இந்து சொத்துரிமைச் சட்டப்படி, "ஒருவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கிறவர்தான் அவரது சொத்துக்களுக்கு உரிமையானவர்'ன்னு சொல்லப்பட்டிருக்கு. இதை கவனத்தில் கொண்டுதான், நடராஜனுக்கு அவர் சகோதரர் எம்.ஆர். மகன் ராஜு இறுதிச் சடங்குகளைச் செய்தார்ன்னு சொல்லப்படுதே?''’
""உண்மைதாங்க தலைவரே, நடராஜன் உறவினர்கள் அவரது சொத்துக்கள் மீது கவனம் வைத்திருக்கிறார்கள். நடராஜன் உயிரோடு இருந்தபோது அவர் மாற்றிக்கொடுத்த முக்கியமான சொத்துக்கள் போக, மீத சொத்துக்கள் யார்யார் பெயரில் இருக்குன்னு, அதையெல்லாம் பட்டியல் எடுக்கும் வேலைகள் நடக்குது. சசி உறவுகள் தரப்பும், நடராஜன் சொத்துக்களை விட்றக் கூடாதுன்னு நினைக்கிது. இதைப் பார்த்த சசிகலா, "இப்ப எல்லாருடைய கண்களும் நம்ம பக்கம்தான் திரும்பி இருக்கு. அதனால் சொத்துக்களுக்காக யாரும் அடிச்சிக்காதீங்க. சொத்துக்கள் நம்மைவிட்டு எங்கேயும் போகாது. அமைதியா இருங்க'ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காராம். உறவுகளுக்குள் நடக்கும் சச்சரவுகள்தான் சசிகலாவை ரொம்பவே எரிச்சல்படுத்திக்கிட்டிருக்கு''’
""சொந்தபந்தங்களின் சச்சரவுகளை சசிகலாவால் சமாளிக்க முடியலையா?''’
""தஞ்சாவூர்ல உறவினர்கள் புடைசூழத் தங்கியிருக்கும் சசிகலாவை பலரும் சந்திச்சி துக்கம் விசாரிக்கிறாங்க. தி.மு.க. எம்.எல்.ஏ. புல்லட் ராமச்சந்திரன், எக்ஸ் எம்.பி.யான எல்.கணேசன் போன்றோர் துக்கம் விசாரிக்க போனப்ப, "நான் யாரையெல்லாம் நம்பினேனோ அவங்கள்லாம் எனக்குத் துரோகம் பண்ணிட்டுப் போயிட்டாங்க'ன்னு அழுதபடியே சொன்ன சசி, "இருந்தாலும் நான் நினைச்சதை சாதிக்காமல் விடமாட்டேன்'னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கார். சசிகலாவுடன், தினகரன், திவாகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ்ன்னு முக்கிய உறவுகள் கூடி விவாதிச்சிருக்காங்க. அப்ப தினகரன், "நானும் எம்.என்.னும் இந்தக் கட்சிப் பதவியெலாம் இப்ப வேணாம்ன்னு சொன்னோம். ஆனா நீங்க யாரும் கேட்கலை. இப்ப கட்சி ஆட்சி எல்லாத்தையும் விட்டுட்டு நிக்கிறோம்'ன்னு ஆதங்கப்பட்டிருக்கார். அதுக்கு சசிகலா, "கட்சியை மீட்கணும்ன்னு சொன்னேன். ஆனா புதுசா ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கீங்க. முதல்ல கட்சியை மீட்கற வழியைப் பாருங்க'ன்னு எரிச்சலா சொன்னதோட, 30-ந் தேதியே தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சியை நல்லபடியா முடிச்சிட்டா போதும்னு நினைக்கிறாராம்.''’’
""ஆளுங்கட்சித் தரப்பிலும் எம்.என். மரணம் குறித்து விவாதிச்சாங்களாமே?''’
""நடராஜன் இறப்புக்கு மந்திரிகள் யாரும் வரலைன்னு சசிகலா கோபப்பட்ட தகவல் கிடைச்சதால், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு போன்ற மந்திரிகள், முதல்வர் எடப்பாடியையும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சையும் பார்த்து, "தஞ்சாவூர் போய் துக்கத்தையாவது விசாரிக்கலாமா? இல்லைன்னா அவங்க பகையை, நிரந்தரமா நாம சம்பாதிச்சாகணுமே'ன்னு தயக்கமா சொல்லியிருக்காங்க. அதுக்கு அவங்க ரெண்டுபேரும், "சசிகலாவிடம் துக்கம் விசாரிக்க நாம் போனால், மத்திய அரசின் கடும் கோபத்தை நாம சம்பாதிச்சாகணும். இப்பவே நம் மீது டெல்லி கோபமாத்தான் இருக்கு. சசிகலாவின் கோபமெல்லாம் பரோல்ல அவர் வெளியில் இருக்கும் வரைதான். அவரால் எப்பவும் நம்மை ஒண்ணும் செய்யமுடியாது. நமக்கு டெல்லித் தரப்புதான் முக்கியம்'ன்னு சொல்லியிருக்காங்க''’’
""டெல்லி வார்த்தைகள் ரொம்ப முக்கியமானதாச்சே!''’
""ஆட்சியாளர்களின் சொந்தக் கணக்கும் முக்கியமா இருக்குங்க தலைவரே... கூட்டுறவு சங்கத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் முதல்வர் எடப்பாடி, மாவட்ட வாரியா கட்சிக்காரர்களை உள்ளே நுழைக்கும் வகையில் கட்சிப் பொறுப்பாளர்களை நியமிச்சிருக்கார். உதாரணத்துக்கு தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இதை கவனிக்கும் பொறுப்பாளரா, மாஜி மந்திரியும் எம்.பி.யுமான வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கார். அவர் ஏரியாவாசி என்பதால் இதில் பிரச்சினை இல்லை. ஆனால் திருச்சி, கரூர் பகுதியின் பொறுப்பாளரா கொங்குமண்டல அமைச்சரான தங்கமணி நியமிக்கப்பட்டிருக்கார், இதுதான் பிரச்சினையை எழுப்பியிருக்கு. எப்படின்னா, இந்த பகுதியில் முக்குலத்தோரும் முத்தரையர் சமூகத்தினரும் பலமா இருக்காங்க. இங்கே கவுண்டர் சமூக தங்கமணியை பொறுப்பாளரா நியமித்திருப்பதால், அவர் தன் சமூகத்தினருக்கே முக்கியத்துவம் தருவார்ன்னு மற்ற சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் கொந்தளிக்க ஆரம்பிச்சிருக்காங்க''’
""அரசியலில் திருமணம் சம்பந்தமான கொந்தளிப்புகளும் டெல்லிவரை எதிரொலிக்கிதே?''’
""தலைவரே, ஜெ.’இருந்தபோதே நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவே ஜெ. குறித்தும் சசிகலா குறித்தும் குற்றச்சாட்டுகளை வைத்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா. அதன் பின்னும் பல்வேறு பரபரப்பு செய்திகளில் அவர் அடிபட்டிருக்கார். இப்ப அவர் டெல்லியைச் சேர்ந்த ஓரியண்டல் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி என்பவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். முதல் கணவரிடம் முறையா விவாகரத்தும் வாங்கியிருக்காரு. புதுக் கல்யாண அழைப்பிதழ் எல்லாம் ரெடியான நிலையில், ராமசாமியின் முதல் மனைவியான சத்யபிரியா தன்னை ராமசாமி ஏமாற்றுவதாகவும் அவரது புதுத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தணும்னும் புகார் கொடுத்தார். அதோட குடும்பநல நீதிமன்றத்திலும் அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இதில், சசிகலா புஷ்பா திருமணத்துக்கு அதிரடியா தடை விதிச்சிடிச்சி நீதிமன்றம்.''’
""சசிகலா புஷ்பா எம்.பி.யின் திருமண விவகாரம் வெளியில் வந்த மாதிரியே, இன்னொரு அ.தி.மு.க. எம்.பி. குடும்ப திருமண விவகாரமும் சர்ச்சையாகியிருக்கே.''’
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. எம்.பி.அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி, தன்னைத் திருமணம் செய்துகொண்டு 3 மாதம் குடும்பம் நடத்தியதாகவும், தனது பணம், நகையை எல்லாம் பிடுங்கிக்கொண்டு, தன்னை கைவிட்டுவிட்டதாகவும், இந்த நிலையில் அவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அதைத்தடுத்து நிறுத்தணும்னும், ரேடியோ தொகுப்பாளினியான பிரபல்லா என்பவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கார். அதோட நிறுத்தாமல், அந்த நாசருக்குப் பெண்கொடுக்க இருந்த கலிபுல்லாகான் இருக்கும் காரைக்குடி ஜமாத்துக்கே போய் அழுது புலம்பி முறையிட்டார்.''’
""போனமுறை நாம பேசுனப்ப, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மறுபடியும் காங்கிரசில் சேர முயற்சிக்கிறார்னு சொல்லியிருந்தோம். அப்படி ஒரு எண்ணமே இல்லையாம். டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பவுன்டேஷன் விழாவில் பங்கேற்க அழைப்பு வந்ததால் தான் வாசன் போயிருக்கிறார். மக்கள் நலத்திற்காக பல போராட்டம் நடத்திய வைகோவிற்கு எதிரா திடீர் போராட்டம் நடந்திருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, சென்னை மூல கொத்தளம் இடுகாட்டுப் பகுதியில், அப்பகுதி மக்களுக்கு எடப்பாடி அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகட்டித் தரும் முயற்சியில் இறங்கியிருக்கு. இது தொகுதிக்காரரான அமைச்சர் ஜெயக்குமார், தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள எடுத்த முயற்சி. ஆனால் இந்த இடுகாட்டில், மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன் மற்றும் திராவிட இயக்கத் தலைவர் டாக்டர் தருமாம்பாள், ஈழப் போராட்டத்தில் தீக்குளித்த இளைஞர் முத்துக்குமார் போன்றோரின் நினைவிடங்கள் இருப்பதால், இந்த இடுகாட்டை ஆக்கிரமித்துக் குடியிருப்பைக் கட்டக்கூடாது என்று ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் ம.தி.மு.க.வையும் வைகோவையும் எதிர்த்து 25-ந் தேதி சிலர் ம.தி.மு.க. தலைமையகமான தாயகம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் குதித்து பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தினாங்க. இது சம்பந்தமா கருத்து தெரிவிச்சிருக்கும் வைகோ ‘"இது எனக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் போராட்டம். அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி தலைமையிலான கும்பல்தான் இங்கே போராட்டம் என்ற பெயரில் ரகளை செய்திருக்கு'ன்னு குற்றச்சாட்டைத் தெரிவிச்சிருக்கார்''’
""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். ரேசன் கடைகளுக்கு துவரம் பருப்பைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு 185 கோடியை ஒதுக்கியிருக்கு. அரசின் இந்த கொள்முதலுக்கான டெண்டரில் ஒரு நிறுவனம் கலந்துக்கணும்னா, மாதத்துக்கு 3 கோடி ரூபாய்வரை அரசுத் துறைகளுக்கோ, பொதுத்துறை நிறுவனங்களுக்கோ அந்த நிறுவனம், வணிகம் செய்த அனுபவத்தைப் பெற்றிருக்கணும்னு விதி இருக்கு. ஆனால் தனக்கு வேண்டிய முக்கியமான நிறுவனங்கள் மட்டும் இந்த டெண்டரில் பங்கேற்கணும்னு நினைக்கிற எடப்பாடி அரசு, அதன் வர்த்தக லிமிட் 3 கோடி என்பதை 19 கோடின்னு ஒரேயடியா உயர்த்தியிருக்கு. இதைப் பார்த்து, டெண்டரில் பங்கேற்க நினைத்த மத்த நிறுவனங்கள் ஷாக் ஆகியிருக்கு.''’