""ஹலோ தலைவரே, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது எடப்பாடி அரசு தொடர்ந்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் ஸ்கீமுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவும் வரும் 9-ந் தேதி விசாரணைக்கு வருவதால், அது தொடர்பாக பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுது.''’
""நீதிமன்ற உத்தரவில் சொல்லப்பட்ட "ஸ்கீம்' என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் என்னன்னு கேட்டு, மத்திய அரசு மனுதாக்கல் செய்ததையும் அதுக்கு உச்சநீதி மன்றம் ’ஸ்கீம்’ என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்ற பொருள் இல்லைன்னு சொன்னதையும் மீடியாக்கள்ல பார்த்தேம்ப்பா.''’
""தலைவரே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறதுன்னும், தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும்னும் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற சொல், காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்காதுன்னும் சொன்னது. இதற்கு பதில் மனுவைத் தாக்கல் செய்திருக்கும் தமிழக அரசோ, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில், scheme does not mean cauvery management board only என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அது காவிரி மேலாண்மை வாரியத்தையும் நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவையும் சேர்த்துச் சொல்லப்பட்ட வார்த்தை. இதில் இருக்கும் "ர்ய்ப்ஹ்' என்ற சொல்லை சரியாக கவனிக்கவேண்டும் என்ற ரீதியில் குறிப்பிட்டிருக்கு. அதனால் வழக்கின் விசாரணை வரக்கூடிய நாளான 9-ந் தேதி என்ன நடக்கும்னு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் குவிஞ்சிருக்கு.''’
""மத்திய அரசின் மீது தொடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கிற்கான மனுவே ஏனோதானோ போக்கில் இருந்ததுன்னு நக்கீரன்லயே சொல்லப்பட்டிருந்ததே?''’
‘அது உண்மைதாங்க தலைவரே, இது தொடர்பாக தமிழக அரசுக்கான உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான சேகர் நாப்டேவே, "நாங்க மனுத் தாக்கலில் தீவிர கவனம் செலுத்தலைங்கிறது உண்மைதான். ஆனால் வாதத்தை பலமாக வைப்போம். அதனால் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிடுவோம்'ன்னு, நம்பிக்கையூட்டி இருக்காராம். இதேபோல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் இப்ப சவசவத்துக்கிட்டிருக்கு. ஏன்னா, அவருக்கு எதிரா கையெழுத்துப் போட்ட 14 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிஞ்சிடுச்சாம். அதேபோல் காங்கிரஸிலேயே கபில்சிபலைத் தவிர மத்த யாரும் இதில் பெருசா ஆர்வம் காட்டலையாம். இருந்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இப்ப எல்லோரும் கூர்மையா கவனிக்கிறாங்க.''’
""உண்மைதாம்பா. எஸ்.சி./எஸ்.டி. விவகாரத்தில் கூட உச்சநீதிமன்றம் எடுத்த சில முடிவுகளை எதிர்த்து நாடு முழுக்கப் பரவலா போராட்டங்கள் வெடிச்சிருக்கே?''’’
""உண்மைதாங்க தலைவரே, இது தொடர்பான வழக்கொன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 20-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகாருக்கு ஆளானவர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்றும், அதேபோல், புகாருக்கு ஆளானவர் மேல் டி.எஸ்.பி. லெவலில் விசாரணை நடத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே, சம்மந்தப்பட்டவர் மீது வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னதோடு, வன்கொடுமைச் சட்டத்தில் முன்ஜாமீன் உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவித்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்க, உ.பி., ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப்புன்னு பெரும் கலவரமா மூண்டிருக்கு. 2-ந் தேதி நிலவரப்படி, 10 பேர் உயிரிழக்கும் அளவிற்கு கலவரம் வெடித்தது. இதைப்பார்த்த பிரதமர் மோடி, 3-ந் தேதி தலித் எம்.பி.க்களை சந்திச்சி, தலித் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்ன்னு உறுதிமொழி கொடுத்திருக்கார். உச்சநீதிமன்றத்திலும் தலித் உரிமைகளுக்கு ஆதரவா மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கு.''’
""காவிரி விவகாரம் உட்பட மோடி அரசின் அப்ரோச்சே தனிதானே?''’
""ஆமாங்க தலைவரே, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இருக்கும் போது, அவரருகே போன அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், "காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைக்காததால்தான் உங்களை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கு'ன்னு சொன்னார். மோடியோ கொஞ்சமும் அலட்டிக்காமல், "சில அரசியல் காரணங்களால்தான் எங்களால் அதை அமைக்கமுடியலை. நீங்க பாட்டுக்கு போராட்டம் நடத்துங்க'ன்னு சொல்லிட்டாராம்.''’
""மோடி பாணியிலேயே அ.தி.மு.க. எம்.பி. ஒருத்தரும் டிராமா போட்டிருக்காரே.''’’
""ஆமாங்க தலைவரே, மாநிலங்களவை உறுப்பினரான நெல்லை முத்துக்கருப்பன், காவிரி விவகாரத்தில் தான் ராஜினாமா செய்யறதா அறிவிச்சார். பிறகு தன் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ஏத்துக்கலைன்னும், முதல்வர் எடப்பாடி கேட்டுக்கிட்டதால் தனது ராஜினாமாவை வற்புறுத்தப் போவதில்லைன்னும் சொன்னார். ஆனால் இலைத் தரப்போ, "எல்லாமே பொய். அவர் மா.செ.பதவி கேட்டுக்கிட்டு இருந்தார். அது உடனே கிடைக்காத கோபத்தில், இப்படி ஒரு ஸ்டெண்ட் அடிச்சிருக்கார். அவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பவும் இல்லை. அதை வெங்கையா நாயுடு நிராகரிக்கவும் இல்லை'ன்னு தலையில் அடிச்சிக்கிட்டு சிரிக்கிது.''’
""சரிப்பா தமிழ்நாடு காங்கிரஸ் பக்கமும் சலசலப்பு கேட்குதே?''’
""அது ஒண்ணும் இல்லைங்க தலைவரே, காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழுவின் கூட்டம் அண்மையில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்துச்சு. அதில் பேசிய எக்ஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, அம்பாசமுத்திரத்தில் சுதந்திரப்போராட்ட தியாகியான கோமதி சங்கர தீட்சிதர், காங்கிரஸுக்குக் கொடுத்த சொத்தை, திருநாவுக்கரசரின் உறவினர்ன்னு சொல்லிக்கொள்ளும் ஒருவர் அபகரிச்சிட்டார். அந்த இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகும் அவர் கட்டடங்களைக் கட்டியிருக்கார்ன்னு குற்றம் சாட்டினார். பேசிய பலரும் திருநாவுக்கரசரின் உறவுகள் காங்கிரஸ் சொத்துக்களைக் கைப்பற்றத் துடிக்குதுன்னு குற்றம் சாட்டினாங்க. இதை திருநாவுக்கரசர் பெருசா கண்டுக்கலை. இது தொடர்பாக திருநாவுக்கரசருக்கு எதிரான புகார்கள் ராகுலுக்குப் போக, திருநாவுக்கரசர் தரப்போ, செல்வப் பெருந்தகை தரப்பு, காங்கிரஸ் சொத்துகளை ஆக்கிரமிக்கப் பார்க்குதுன்னு பதிலுக்கு ராகுலுக்குப் புகார்கள் அனுப்பியிருக்கு.''’
""மற்ற கட்சிகளில் என்ன நிலவரம்?''
""தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைமைக்குன்னு எந்த ஒரு அலுவலகமும் இல்லை. அதனால் தினகரனை அவரது பெசண்ட் நகர் இல்லத்தில்தான் கட்சிப் பிரமுகர்கள் சந்திப்பது வழக்கம். அண்மைக் காலமாக, தினகரனின் உதவியாளர்களும் வாட்ச்மேன்களும், "இனி வீட்டுக்கு வந்து அண்ணனுக்கு தொல்லை கொடுக்காதீங்க'ன்னு கட்சிப் பிரமுகர்களிடம் கெடுபிடி காட்டி பரிதவிக்க வைக்கிறாங்களாம். இதையறிந்த தினகரன், கட்சி அலுவலகத்துக்கு சென்னை அசோக் நகரில் இடம் தேட ஆரம்பிச்சிருக்காரு. இப்படி மாநிலத் தலைமை, இடம் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருவாரூர் அ.ம.மு.க. வின் நகர செயலாளரான கடலைக்கடை பாண்டி, அங்கிருக்கும் ஐய்யனார் கோயில் தெருவில் தன் சொந்தக் காசில் இடம் வாங்கி, கட்சி அலுவலகத்தையே கட்டிவிட்டார். தினகரன் வந்து திறந்துவைக்க வேண்டியதுதான் பாக்கியாம்.''’
""கோட்டைத் தகவல் எதுவும் இருக்கா?''’
""நான் சொல்றேன். ஜெ.’ஆட்சிக் காலத்தில் இருந்தே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் புரமோசனில் காட்டப்படும் அக்கறை அளவிற்கு, தங்களது பதவி உயர்வில் அக்கறை காட்டப்படுவது இல்லைங்கிற ஆதங்கம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு உண்டு, அதேநிலை இப்போதும் தொடர்கிறதாம். குறிப்பாக தமிழகத்தில் 1986 பேட்சைச் சேர்ந்த ஏ.டி.ஜி.பி. அதிகாரிகளான லஷ்மி பிரசாத், ஜாபர்சேட், அசுதேஷ் சுக்லா உள்ளிட்ட 6 அதிகாரிகள், டி.ஜி.பி. பதவி உயர்வுக்காகக் காத்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கும் மேலாக இதற்கான கோப்புகள் பெண்டிங்கிலேயே இருக்குதாம்.''’’
-----------------------------------------------
இறுதிச்சுற்று
கமல் பாட்டு!
மக்கள் நீதி மய்யத்தின் துவக்க விழாவை மதுரையில் நடத்திய கமல், மார்ச் 08-ஆம் தேதி மகளிர் தினக் கூட்டத்தை சென்னையில் நடத்தினார். ஏப்ரல் 04-ஆம் தேதி திருச்சிக்கு வாருங்கள் எனக் கூறியிருந்தார். மதுரையைவிட திருச்சியில் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கிக் காட்டியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கினார்கள் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்.
திருச்சி- பொன்மலை-ஜி கார்னர் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக 02-ஆம் தேதியே திருச்சி வந்தார் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளர் கோவை ஆர்.தங்கவேலு. எந்த நெருக்கடியும் இல்லாமல் போலீஸ் அனுமதி கிடைத்த தகவல் கிடைத்ததும் 03-ஆம் தேதி மதியம் சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் டிரெயினில் திருச்சிக்கு கிளம்பினார் கமல். போகும் வழியில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் ரயில் நிலையங்களில் கட்சியினரைச் சந்திக்கும் திட்டத்தில் இருந்த கமல், சில சர்ச்சைகளாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், கடைசி நேரத்தில் அதைத் தவிர்த்துவிட்டார். உயர்மட்டக்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீப்ரியாவும் கமலும் இணைந்து கட்சிப் பிரச்சாரத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளனர். இசை அமைப்பாளர் வித்யாசாகர் இசையில் கமல் பாட, ஆண்-பெண் கோரஸ் குரல்களும் சேர்ந்து பாடியுள்ளனர். இதே பாடலுக்கு மற்றொரு இசை அமைப்பாளரான தேவாவின் தம்பி சபேஷின் மகனும் இசை அமைத்துள்ளார். இங்குள்ள ரெகார்டிங் ஸ்டுடியோவில் கம்போஸிங் செய்யப்பட்டு, மாஸ்டரிங் ஒர்க்கிற்காக அமெரிக்காவில் உள்ள ரெகார்டிங் ஸ்டுடியோவிற்கு அனுப்பியுள்ளார் கமல். விரைவில் தமிழகமெங்கும் கமல் கட்சிப்பாட்டு ஒலிக்கும்.
-பரமு