நக்கீரன் மற்றும் சி.என்.சி. கைட்ஸ் இணைந்து நடத்திய, மாநில அளவிலான மாணவர் களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டிக்கான பரிசளிப்பு விழா, கடந்த நவம்பர் 26ஆம் தேதி, சனிக்கிழமை, ராயப்பேட்டையிலுள்ள நக்கீரன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட் டார்கள். இந்த பேச்சுப்போட்டிக்காக 11 தலைப்பு கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. முதல் சுற்றுப் போட்டியில் 15 மாணவர்களைத் தேர்ந் தெடுத்தனர். இரண்டாவது சுற்றுப் போட்டியில் இவர்களில் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். இறுதிச்சுற்றில் மூன்று மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கோப்பை, ஷீல்டு, பதக்கங்களுடன் புத்த கங்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர் கோவி.லெனின், பரிசளிப்பு விழாவுக்கான வரவேற்புரை நிகழ்த்தி னார். கவிஞர் ஜெயபாஸ்கரன், தனது வாழ்த்துரை யில், "தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்வார்கள். அதனடிப்படையிலே இந்த சமூகத் துக்குத் தேவையான சான்றோர்களை, அறிஞர்களை, எழுத்தாளர்களை, பேச்சாளர்களை உருவாக்குகின்ற ஒரு பயிற்சிப்பட்டறை போல இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. ஏனென்றால், உண்மையைச் சொல்வதற்கும், அறங்களைச் சொல்வதற்கும், தமிழின் வரலாற்றைச் சொல்வதற்கும், சங்க இலக்கியங்களைச் சொல்வ தற்குமான தூதுவர்கள் இன்றைக்கு நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். இன்றைக்கு நம் தமிழ்நாட் டின் மக்கள் தொகை, தோராயமாக பத்து கோடி என்று வைத்துக்கொண்டால், அதற்கேற்ற பேச்சா ளர்கள் நம்முடைய சமூகத்தில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில்தான் இப்படியான பேச்சுப் போட்டி பயிற்சி தேவைப்படுகிறது. இங்கே ஏராள மான பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு தழுவிய அளவிலே ஆர்வமாகப் பங்கேற்றிருக்கிறார் கள் என்பது எனக்கு மிகச்சிறந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது'' என்றார்.
அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய புலவர் மதியழகன், "தமிழ்ச் செல்வங்களே! உங்களுடைய பேச்சுக்கலையை வளர்க்கவேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு நக்கீரனும் சி.என்.சி. கைடு நிறுவன மும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக் கின்றன. கருத்து வளமுள்ள பல மாணவர்களை அடையாளம் காட்டியிருக் கிறது. மாணவச் செல்வங்களே, உங்கள் பேச்சுக்கலையை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங் கள். சராசரி மதிப்பெண் எடுத்த மாணவர்கள்கூட, பல் வேறு பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு, பேச்சுக்கலையில் வெற்றி பெற்றதனால், மேடைப்பேச்சுக்களில் முழங்கியதால் நேர்காணல்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படியான உயர்ந்த நோக்கத்துடன் உங்களையெல் லாம் இந்த நக்கீரன் அடையாளம் காட்டியிருக்கிறது'' என்றார்.
கவிஞர் அறிவுமதி தனது சிறப்புரை யில், "நக்கீரன் என்ற வளாகத்திற்குள் ஒரு பெருமிதத் தமிழனாய், எங்கள் மீசைத்தமிழன்... வீரத்தமிழன்... அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களது இல்லத்துக் குள், அவர்களது உறவுக்குள் நானும் ஒருவன் என்ற நெகிழ்ந்த உணர்வோடு நான் நிற்கிறேன். இந்த மேடையில் நம் பிள்ளைகள் பேசும்போது, பொருநை நதி யில் நனைந்த சாரல் காற்றாக, பிறமொழிச் சொற்கள் கலக்காத நுட்பத்தில் அவர்கள் பேசுகிற பேச்சு, தமிழை வாழ வைக்கின்ற செயல். மேடைப்பேச்சால் தமிழ்நாட்டை அறிவுக்களமாக மாற்றியவர்கள் திராவிட இயக்கச் சொற் பொழிவாளர்கள். பேச்சால் விடியவைத்த நாடு தமிழ்நாடு. பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் உழைப்பின் விளைச்ச லாகத்தான் இன்றைக்கு இந்த குழந்தைகளை நீங்கள் இங்கே அடையாளப்படுத்தியதாக நான் உணர்கிறேன்'' என்றார்.
திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, தனது சிறப்புரை யில், "சிவன் ஒரு சிறு பிழை செய்தபோது, நெற்றிக்கண்ணைக் காட்டி அச்சுறுத்தியபோதும், தமிழின் மீதிருக்கும் அன்பின் காரணமாக எம்பெருமானையே எதிர்த்தவர்தான் நக்கீரன். இந்த நக்கீரனும் அப்படித்தான். நான் பார்த்த, ரசித்த, நேசித்த ஒரு நிஜக்கதாநாயகன் என்றால் அண்ணன் நக்கீரன் கோபால்தான். இந்த வெள்ளை மாளிகை சாதாரண மாளிகையல்ல, அதிகாரத்துக்கு எதிராக ஒரு தனி மனிதன் கட்டிய மாளிகை. இந்த கட்டிடத்தை நான் பார்க்கின்ற போது, நிமிர்ந்து நிற்கிற பேனா போல இருக்கிறது. இந்த சமூகத்தில் இருக்கின்ற பல பெரிய மனிதர்கள் ஓரளவுக்கு சரியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அண்ணன் நக்கீரன் கோபால்தான் முக்கியமான காரணம்.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகமென்றால், போர்க்களத்தைச் சொல்வேன், சேலஞ்சை சொல்வேன். எதிர்ப்பிலேயே வளர்ந்த ஒரு ஆளுமை. எதிர்வினையிலேயே வளர்ந்த ஒரு ஆளுமை. அடங்காமையால் வளர்ந்த ஒரு ஆளுமை. அதனால்தான் நிஜக் கதாநாயகன் என்று நான் சொன்னேன்'' என்று நெகிழ்வோடு கூறினார்.
சிறப்புரையாற்றிய இனிய உதயம் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், "தமிழ் விரைவில் அழிந்துபோகும், இலக்கியம் விரைவில் அழிந்துபோகும் என்றெல்லாம் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டபோது, தமிழுக்கான அடுத்த தலைமுறை உருவாகி விட்ட நம்பிக்கை வந்துள்ளது'' என்றார்.
சிறப்புரையாற்றிய இலக்கியா நடராஜன், "விடாப்பிடி யாக ஒரு மனிதர் எந்த லட்சியத் தோடு, எந்த கொள்கை தாகத் தோடு, எந்த சமூகப் புரட்சியின் மீதான அக்கறையோடு ஒரு பத்திரிகையைத் தொடங்கினாரோ, அந்த பத்திரிகையை 35 ஆண்டு களுக்கும் மேலாக கட்டிக்காத்து, அதிகார வர்க்கத்துக்கு அஞ்சாமல், மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எனை மாற்ற நினைத்திடும் சிறைச்சாலை என்று பாரதிதாசன் பாடினானே, அப்படி சிறைச் சாலைக்கெல்லாம் சென்றுவந்த போதிலும், அச்சமில்லாதவராக, ஒரு சமூகப் புரட்சியாளராக அவர் விளங்கிவருகிறார்'' என்று பாராட்டினார்.
நமது ஆசிரியர் சிறப்புரை யில், "இந்த நிகழ்ச்சியை ஒன் மேன் ஆர்மியாக நடத்திக்கொண் டிருக்கும் தம்பி சுரேஷ்குமார் அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பாக பாராட்டுகள். இவ ருடைய குழுவிலுள்ள தம்பிகள், கடந்த 60 நாட்களாக பம்பரமாக இயங்கி, இந்நிகழ்ச்சியை நடத்திக்காட்டியுள்ளனர். சி.என்.சி. கைடுக்கு தளகர்த்தா நம்ம தம்பி மாலிக் தான். அவர்தான் இந்த சி.என்.சி.யை நம்மிடம் கொடுத்தார். இந்த சி.என்.சி. நக்கீரனுக்கு இப்படியொரு நல்ல பெயரைக் கொடுக்கும்னு நினைக்கல. இன்னைக்கு இங்குள்ள நடுவர்கள் எல்லாரும், பிள்ளைகள் தமிழில் பேசிய விதத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு சொன்ன போது, நக்கீரன் ஒரு சரியான தளத்தை எடுத்திருப்பதாக ஒரு சந்தோசம் வந்திருக்கு.
சி.என்.சி. கைடு, பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஒரு துணைவன். 55 ஆண்டுகளாக பாரம்பரியமாக வந்துகொண்டிருந்த கைடு, ஏதோ காரணங்களுக்காக நின்றுபோனதால் அதை எடுத்து நடத்துனதுதான் எங்களுடைய பொறுப்பு. இந்த பில்டிங்... கம்பீரம்... இதுக்கு பின்னால நான், என் தம்பி லெனின் மற்றுமுள்ள தம்பிகள் சிந்திய ரத்தம் இதற்குள் இருக்கிறது. அதனாலதான் இந்த உயரம். நக்கீரன் கோபால் என்பதை விட நக்கீரன் குடும்பம் இதில் இருக் கிறது. எங்கள் குடும்பத்தின் இன் னொரு அங்கமாகத்தான் சி.என்.சி.யை நாங்க கொண்டுவந்திருக்கோம். இவ்வளவு ஆர்வமாக மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சி. நக்கீரன் சார்பாக அவங்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இறுதியாக, நக்கீரன் வெப் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் ஆர்.வி. பிரபாவதி தனது நன்றியுரையில், "நக்கீரனின் செய்திகள், கட்டுரைகள், புலன் விசாரணைகள் இவையெல் லாமே அனைத்துத் தரப்பு மக்களுக்கு மானது என்றாலும், மாணவர்களுக் கான பல்வேறு பிரச்சனைகள் குறித்து நக்கீரன் செயல்பட்டுவந்தாலும், நேரடியாக மாணவர்களுக்கு நெருக்க மாக ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டுமென்பதே எங்கள் குடும்பத் தலைவரின் நெடுநாள் விருப்பம். அப்படி செயல்பட அமைந்த ஒரு வாய்ப்பு தான் சி.என்.சி. 55 வருட பெருமையுடைய ஒரு கைடு. இதை வெறும் வணிகமாக மட்டுமே நாங்கள் பார்க்கவில்லை. இது ஒரு செயல்பாடாக, இயக்கமாக இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த பேச்சுப் போட்டி. இதை சாத்தியப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் பெற் றோர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்'' என்று கூறினார்.
-தெ.சு.கவுதமன்
படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்