சினிமாவில் வில்லன்கள் கூட்டமாக வீட்டிற்குள் புகுந்து பெண்ணைக் கடத்திச்செல்வது போல கூட்டமாக வீட்டிற்குள் திபுதிபுவெனப் புகுந்து இளம்பெண்ணைக் கடத்திச் சென்றது பெற்றவர்களை மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்டத்தையே பதற வைத்துவிட்டது.

d

கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜனின் மகன் விக்னேஸ்வரன், மயிலாடுதுறை மயிலம்மை நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டிற்கு அடிக்கடி வந்து போவது வழக்கம். பாட்டி பிரேமா வீட்டிற்கு மூன்றாவது வீடு பிரியாவின் வீடு (பெயர் மாற்றியுள்ளோம்). பட்டதாரியான பிரியாவின் தந்தையும், தாயும் சலவைத் தொழில் செய்து பிரியாவையும், அவரது தங்கையையும் கல்லூரி வரை படிக்க வைத்துள்ளனர். விக்னேஷ்வரன் பாட்டி வீட்டிற்கு வந்துபோகும்போது பிரியாவோடு நெருங்கிப் பழகியிருக்கிறான். இந்தப் பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. காலப்போக்கில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை பிரியா நிறுத்திவிட்டார். ஆனாலும் அந்தப் பெண்ணை விடாமல் பின்தொடர்ந்ததோடு, பிரியாவின் பெற்றோரிடம், ”"உங்க பெண்ணை நான் காதலிக்கிறேன், நீங்க திருமணத்திற்கு சம்மதிக்கணும். இல்லன்னா உங்களை கொன்னுட்டு பிரியாவை தூக்கிடுவேன்'' என மிரட்டவும் செய்துள்ளான். பதறிப்போன பிரியாவின் பெற்றோர், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, "இனி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது' என விக்னேஸ்வர னிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் கோபம் தணியாத விக்னேஷ் வரன், தனக்கு நெருக்கமான இரண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு கையில் ஆயுதங்களோடு ஜூலை 12-ஆம் தேதி பட்டப்பகலில் பிரியாவை வீடு புகுந்து தூக்கிக்கொண்டு வரும்போது, அக்கம் பக்கத்து இளைஞர்கள் விக்னேஷ்வரனையும், அவனோடு வந்தவர்களையும் அடித்து விரட்டி பிரியாவை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகாரளிக்க, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனைத் தேடிவந்தனர். அடிபட்ட பாம்பைப்போல வெறிப்பிடித்து அலைந்தவன், கடந்த மூன்றாம் தேதி இரவு 7.40 மணியளவில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் கும்பலாக வந்து, சினிமா படக்காட்சியையே மிஞ்சும்படி அந்தப் பெண்ணை தூக்கிச் சென்றான். தகவல் கிடைத்த பத்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையிலான போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும், கார் நம்பரையும் கொண்டு, விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் தடுத்து நிறுத்தி அந்தப் பெண்ணை மீட்டதோடு, குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.

Advertisment

dd

விசாரணையிலிருந்த தனிப்படை போலீஸா ரிடம் விசாரித்தோம். "இருவருமே ஆரம்பத்தில் நெருக்கமாகக் காதலிச்சிருக்காங்க. இதுபற்றி தெரியவந்ததும், பெண்ணோட பெற்றோர், ஆரம்பத்திலேயே பொண்ணையும் பையனையும் கண்டிச்சிருக்காங்க. ஆனாலும் விக்னேஷ்வரன் விடாம, அந்தப் பெண் வேலை பார்த்த பள்ளிவரை சென்று தொல்லை கொடுத்துள்ளான். அதனால அந்தப் பெண் வேலைக்குப் போறதையும் நிறுத்திட்டாங்க. ஒருகட்டத்துல அவங்கள மிரட்ட ஆரம்பிச்சிட்டான். முதல்முறை கடத்த நினைச்சு முடியாம பாதியிலேயே தப்பிச்சு ஓடுனவன், அடுத்து, சேந்தங்குடியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவனின் உதவியோட கடத்தியிருக்கான். சுபாஷ் சந்திரபோஸின் அக்கவுண்டிலிருந்து கடத்தலுக்கு வந்த இளைஞர்களுக்கு கூகுல்பே செய்யப்பட்டதை வைத்தே மற்றவர்களைப் பிடித்தோம். இந்த கடத்தலின்போது, விழுப்புரத்துக்கு அருகே கார் போறப்ப செல்வகுமார் என்பவன் காரில் ஏறியிருக்கான். அவன் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவனுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னும் விசாரிச்சுக்கிட்டிருக்கோம்''’ என்கிறார்கள்.

அந்த பெண்ணின் பெற்றோர்களோ,’ "ஊர்க்காரவுங்க துணியத் துவச்சி சலவை செஞ்சி குடுக்குறதுல கெடைக்கிற சொற்ப வருமானத்துல எங்க பொண்ணுங்கள வளர்த்து படிக்க வச்சோம். ஒரே தெருவுல இருக்கிறதால அந்த பையன் உறவா பழகுவான். ஆனால் இப்டி செஞ்சுட்டான்'' என்று கலங்குகிறார்கள்.

விக்னேஷ்வரனின் வீட்டிற்கு சென்றோம். அவனது அப்பா இறந்துவிட்டார். அம்மா இந்த விவகாரத்தால் மனமுடைந்து உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், "மயிலாடு துறையில் கஞ்சா இல்லாத பகுதியே இல்லை. காவல் நிலையத்தைச் சுற்றியும்கூட கஞ்சா, கள்ளச் சாராயம் விற்பனையாகுது. கஞ்சா விற்பனையை காவல்துறை கண்டுக்காம விட்டதன் விளை வாகத்தான் கஞ்சா போதையோடு இப்படி ஒரு சம்பவத்தை துணிந்து செய்திருக்காங்க. இப்போ நல்லபடியா அந்த பெண்ணை மீட்டாச்சு. இதுவே போதையில் அந்த பெண்ணை கடத்திட்டுப் போறப்ப தப்பா நடந்திருந்தால் யார் பொறுப்பு?''’என்கிறார்.

கடத்தியவர்களைப் பிடித்த டி.எஸ்.பி வசுந்தராஜோ, "தகவல் கிடைத்த பத்து நிமிடத்தில் ஸ்பாட்டுக்கு சென்றோம். அங்கிருந்த சி.சி.டி.வி. ஆதாரங்களோடு, கடத்தப்பட்ட காரின் நம்பரையும் வைத்து, அந்த கார் யாருடையது என்பதை அறிந்து, அவனது போனை டிரேஸ்அவுட் செய்தோம். அதைக்கொண்டு விக்கிரவாண்டி பகுதியில் ஏற்கனவே நான் வேலைபார்த்த தொடர்பு இருந்ததால் அங்குள்ள போலீஸ் டீமில் கூறி, எங்கள் டீமும் பின்தொடர்ந்து பிடித்தோம். இனிமேல் இதுபோல் குற்றம் நடக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisment