அண்ணா பல்கலைக்கழகத்தின் போலிப் பேராசிரியர்கள் முறைகேடுகள் விவகாரம் தமிழக உயர்கல்வித் துறை வட்டாரங்களை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜிடம் முழுமையான ரிப்போர்ட் கேட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.
இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரிகள் ஆகியோரும் துணைவேந்தரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். இதற்கிடையே, போலிப் பேராசிரியர்கள் விவகாரத்தில் தனியாகவும் புலனாய்வு செய்து வருகிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில். இதனால், அண்ணா பல்கலைக்கழக போலிப் பேராசிரியர்களும், அவர்களை பயன்படுத்திக் கொண்ட தனியார் பொறியியல் கல்லூரிகளும் கிலியில் இருக்கின்றனர்.
போலிப் பேராசிரியர்கள் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ள அறப்போர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் கேட்டபோது,”"கடந்த கல்வி ஆண்டில் (2023-24) தகுதியற்ற பல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தந்திருக்கிறது அண்ணா பல்கலைக் கழகம்.
பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டுமானால் நிறைய விதிமுறைகளை வகுத்திருக்கிறது அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில். அந்த விதிகளின்படி பொறியியல் கல்லூரிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, தகுதி இருந்தால் மட்டுமே பல்கலைக்கழகம் அனுமதி வழங்க வேண்டும். விதிகளை ஆய்வு செய்வதற்காக பல்கலைக் கழகத்தில் அப்ளியேஷன் இன்ஸ்பெக்ஷன் கமிட்டி ஒன்று இருக்கிறது.
இந்த கமிட்டிதான், பொறியியல் கல்லூரிகள் தரத்துடனும் தகுதியுடனும் இருக்கிறதா என்பதை ஸ்பாட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தி ரிப்போர்ட் தரவேண்டும். அந்த ரிப்போர்ட்டின் படி, பல்கலைக்கழகம் அனுமதி வழங்கும். இப்படி அனுமதி வழங்கியதில்தான் ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் நடந்திருக்கின்றன. அதாவது, ஒரு பொறியியல் கல்லூரி நடத்த வேண்டுமானால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முழு நேர பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், நிறைய தனியார் கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களை நியமிப்பதில்லை அந்த கல்லூரி நிர்வாகம். அதற்கு மாறாக, பல்கலைக்கழக கமிட்டி ஆய்வுக்கு வரும்போது, முழு நேர பேராசிரியர்கள் இருப்பதாக கணக்குக் காட்டிவிடுவார்கள்.
இப்படி போலிப் பேராசிரியர்கள் குறித்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்த நிலையில், அது குறித்து நாங்கள் புலனாய்வு செய்த போது, 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல தனியார் கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிற மோசடி தெரிந்தது. அந்த மோசடியை அங்கீகரித்து அனுமதி வழங்கி மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். அந்தவகையில், இந்த மோசடி யின் முதல் குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகம் தான். இது மட்டுமல்லாமல் 972 முழு நேர பேராசிரியர் இடங்களையும் மோசடியாக நிரப்பியதை அங்கீகரித்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.
போலிப் பேராசிரியர்களை பயன்படுத்தி தங்களிடம் முழுநேர பேராசிரியர்கள் இருப்பதாக அனுமதி பெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை 224. இந்த கல்லூரிகளில் கடந்த ஆண்டு ஆய்வுக் கமிட்டியின் இயக்குநர் இளையபெருமாள் தலை மையிலான குழுவினர்தான் ஆய்வினை நடத்தி யிருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் நடந்துள்ள இந்த ஊழல் விவகாரத்தின் பின்னணியில் லாபம் இல்லாமல் இருக்காது. பெரிய அளவில் பணம் புழங்கியிருக்கக்கூடும். பணம் விளையாடாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. கல்வியில் ஊழல் என்பது ஜீரணிக்க முடியாத விசயம். வருங்கால இளைய தலைமுறையினரையே பாழ்படுத்திவிடும் இந்த கல்வி ஊழல்.
அதனால், உயர்கல்வித்துறையில் போலி பேராசிரியர்கள் மோசடி பெரிய அளவில் நடந் திருப்பதால், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத் தினர், ஆய்வுக் கமிட்டியின் இயக்குநர் இளைய பெருமாள், கமிட்டியின் உறுப்பினர் கள், மோசடியில் ஈடுபட்டுள்ள 224 தனியார் கல்லூரிகளின் நிர்வாகத் தினர், போலிப் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த 353 பேராசிரியர்கள் என அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து தமிழக முதல் வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, துறையின் செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருக்கிறோம். என்ன ஆக்ஷன் எடுக் கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்''’என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் நேரடி ஆய்வு நடத்துகிறது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கமிட்டி அந்த ஆய்வில், பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித் தகுதி, உள்கட்டமைப்பு, படிப்புகளுக்குரிய பரிசோதனைக் கூடம் ஆகியவை பரிசோதிக்கப்படவேண்டும். இந்த ஆய்வில் முழுமைபெறும் கல்லூரிகளுக்கே மாண வர்களை சேர்க்கும் அனுமதி கொடுக்கப்படுகிறது.
ஆனால், பெரும்பான்மையான தனியார் கல்லூரிகள் முழுத் தகுதி பெற்றவைகளாக இருப்பதில்லை. இதற்கு மாறாக, பல கோடிகளை லஞ்சமாகக் கொட்டிக் கொடுத்து அந்த அனுமதியைப் பெற்றுவிடுகின்றன. இந்த ஊழல் காலம் காலமாக நடந்துகொண்டேயிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டும் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
சமீபத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் தலைமையில் சிண்டிகேட் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. அப்போது பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மீது ஏற்கனவே கூறப்பட்டிருந்த புகார்கள் குறித்து விவாதிக்கப்படும் என கல்வியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதனை விவாதத்திற்கே கொண்டுவரவில்லை சிண்டிகேட் உறுப்பினர்கள். இது மட்டுமல்ல, பல கல்லூரி களுக்கு அனுமதி தருவதற் கான ஒப்புதலையும் பிரதீப்யாதவிடம் பெற்றிருக்கிறது சிண்டிகேட்.
ஒரு கல்லூரியின் முழு நேர பேராசிரியர் ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசிரியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால் அது மோசடி என்கிறது அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில். ஒரு கல்லூரியிலுள்ள முழு நேர பேரா சிரியர்கள் மற்றும் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தே பாடப் பிரிவுகளுக்கும் (கோர்ஸ்), மாண வர்களின் சேர்க்கைக்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும். இதனைத்தான் வருடம்தோறும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக ஆய்வு செய்கிறது பல்கலைக் கழகத்திலுள்ள ஆய்வுக் கமிட்டி. ஆனால், ஆய்வுக் கமிட்டியினரின் நேர்மையற்ற செயல்பாடுகளால் ஊழல்கள் பெருத்துவிட்டன என்கிறார்கள் கல்வியாளர்கள்.
அறப்போர் இயக்கத்தினரிடம் மேலும் விசாரித்தபோது’"டாக்டர் மாரிச்சாமி, டாக்டர் முரளிபாபு ஆகிய இரண்டு பேராசிரியர்கள், வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள 11 கல்லூரி களிலும், டாக்டர் வெங்கடேசன், அரங்கராஜன், வசந்தா சுவாமிநாதன் ஆகிய மூவரும் தலா 10 கல்லூரிகளிலும் முழுநேரப் பேராசிரியர்களாக ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்து கின்றனர். இதெல்லாம் எப்படி சாத்தியம்? அதாவது பாடம் நடத்துவதாக ரெக்கார்டுகள் மட்டும் கிரியேட்டாகியிருக்கிறது. இப்படி 353 பேராசிரியர்கள் முழுநேரப் பணியாளர்களாக வெவ்வேறு கல்லூரிகளில் பணிபுரிகின்றனர். இதனை ஆய்வு செய்துவிட்டு அனுமதியும் கொடுத்துள்ளது அண்ணா பல்கலைக் கழகம்.
இந்த முறைகேடுகளுக்கு காரணமான அனைவர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தோடு விளையாடும் இப்படிப்பட்ட கிரிமினல் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன் அதன் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயவேண் டும். இப்படிப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் தமிழகத்தில் கல்வி சுத்தமாகும். நேர்மையான நிர்வாகத்தை தர நினைக்கும் தி.மு.க. அரசு, நடவடிக்கை எடுக்குமா?'' என்று குமுறுகின்றனர்.
ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஒரு தனித்துவ அடையாள எண்ணை அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் வழங்குகிறது. அதன்படி, ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் பணிபுரிவதாக அந்த எண்ணை வைத்து பதிவு செய்துவிட்டால், அதே பேராசிரியர் வேறு ஒரு கல்லூரியில் பதிவுசெய்ய முடியாது. ஆனால், போலி பேராசிரியர்கள், போலியான தனித்துவ அடையாள எண்களை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பல்கலைக்கழகப் பணியாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 440 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் பெரும்பான்மையானவை அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்தான். இவைகளிடமிருந்து மட்டும் வருஷத்துக்கு 30 கோடி ரூபாய் லஞ்சமாகவே பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கிறது. இது வெறும் அனுமதி வழங்குவதற்கு மட்டும் தான். இதைத்தவிர, புதிய கோர்ஸ்களுக் கான அனுமதி, மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி, போதிய உள்கட்டமைப்பு இருப்பதாக சான்றளிக்க அனுமதி என பல்வேறு அனுமதிகளை கணக்கில் கொண்டால் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் விளையாடுகிறது''’ என்கிறார்கள்.
போலி பேராசிரியர்கள் மற்றும் போலி அங்கீ காரம் ஊழல் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த கவர்னர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் வேல் ராஜிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். சரியான விளக்கத்தை அவரால் சொல்லமுடியாததால், அவரிடம் அறிக்கை கேட்டுள்ளார் கவர்னர். அதேபோல, அமைச்சர் பொன் முடி விசாரித்தபோதும் தடு மாறியிருக்கிறார் துணைவேந்தர் வேல்ராஜ்.
பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் விசாரித்தபோது, "போலி பேராசிரியர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வுக் கமிட்டி துணிந்தால், சம்பந்தப்பட்ட பேரா சிரியர்களும் பொறி யியல் கல்வி நிறுவனங்களும் தங்களிடமிருக்கும் அரசியல் தொடர்புகளையும், ஆட்சியாளர்களை யும் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து வரும் அழுத்தங்கள் தவறுக்கு வழிவகுக்கின்றன'' ’என்று பழியை வேறுபக்கம் திருப்புகின்றனர்.
இந்த நிலையில், போலிப் பேராசிரியர்கள் விவகாரம் தமிழக உயர்கல்வித் துறையை உலுக்கி எடுத்துள்ளதாலும், கவர்னர் நேரடியாக விசாரிக்க தலையிட்டிருப்பதாலும் இந்த ஊழல்களை விசாரிக்க தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அனுமதி கிடைத்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை கையில் எடுக்கும்போது இன்னும் பல பிரளயங்கள் வெடிக்கும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங் களில் எதிரொலிக்கிறது.
இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ள துணைவேந்தர் வேல்ராஜ், "முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் மீதும், கல்வி நிறுவனங்கள் மீதும் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்கிறார்.
இந்த விவகாரத்தை மத்திய பா.ஜ.க. அரசின் கவனத்துக்கும் புகாராகத் தெரிவித்திருக்கிறது அறப்போர் இயக்கம். அதேசமயம், பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இதேபோன்ற போலி பேராசிரியர்கள், போலி டாக்டர்களைக் காட்டி தங்களின் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்யவரும் கமிட்டியினருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுப்பது மட்டுமல்ல; வெளிநாட்டு மது சரக்குகள், வெளிநாட்டு மாதுக்கள் என படாடோபமான விருந்தும் கொடுத்து கமிட்டியை தங்கள் பிடியில் வைத்துக்கொள்கிறார்கள். மது, மாது குளியலில் கமிட்டி உறுப்பினர்கள் ரிலாக்ஸாகி விடுகின்றனர். இப்படிப்பட்ட பல வில்லங்க விவகாரங்களெல்லாம் மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தில் நடந்திருக்கிறது என்று டெல்லிக்கு புகார்களைத் தட்டிவிட்டுள்ளனர் கல்வியாளர்கள் சிலர்.
"பொறியியல் கல்லூரி விவகாரம் அம்பலமானது போல, மருத்துவக் கல்லூரி களில் நடக்கும் இத்தகைய ஊழல்களும் விரைவில் அம்பலமாகும். அப்போது தமிழகத் தின் கல்வித்தரம் மேலும் கேள்விக்குறியாகும்' என்கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்