மது போதையில் விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஏட்டய்யா. ஏட்டய்யாவுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு அவரது வாக்கிடாக்கியைத் திருடிய விவகாரத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர் உள்பட 4 மணல் திருடர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் அன்பழகன். அப்பகுதி மணல் திருடர்களிடம் பழக்க முள்ளவர். சம்பவத்தன்று, திருட்டு மணல் வாகனம் ஒன்று, சம்மட்டிவிடுதி காவல் எல்லையில் சிக்கிக் கொண்டது. சிறிது நேரத்தில் அன்பழகனை செல்பேசியில் தொடர்புகொண்ட மணல் திருடர்கள், பெருங்களூரில் உள்ள ஒரு பேக்கரிக்கு அருகே வருமாறு அழைத்துள்ளனர். அவர்களைச் சந்திக்கச் சென்ற அன்பழகனிடம், "உங்களுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்று எங்கள் வாகனத்தைச் சிக்க வைத்துவிட்டீர்களா? வாக னத்தை மீட்டுக் கொடுங்கள்'' என்று கேட்டுள்ளார்கள். அதன்பின்னர் அவருக்கு மது விருந்து கொடுத்துள்ளனர். அவருக்குப் போதை ஏறியதும், அவருக்கே தெரியாமல் அவரிடமிருந்த வாக்கிடாக்கி யையும் திருடி வைத்துக் கொண்டனர்.
வாக்கிடாக்கி திருடப் பட்டது தெரியாமல் அங்கி ருந்து சென்ற அன்பழகன், கடைவீதியிலேயே போதை யில் விழுந்து உறங்கி, அதி காலையில் எழுந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத் துக்கொண்டு அக்னி ஆற்றுப் பாலத்தில் செல்லும் போது தவறி விழுந்து அடிபட்டுள் ளார். இச்சம்பவம் பற்றி தெரி யாத கீரனூர் காவல் நிலைய போலீசார், அன்பழகனைத் தேடி கண்டுபிடிக்கையில்தான், அவரது வாக்கி டாக்கி திருடு போனது தெரியவந்துள்ளது.
அடிபட்ட தலைமைக் காவலரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவருடன் மது அருந்திய 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, சம்மட்டிவிடுதியில் பிடிபட்ட மணல் வாகனத்தை மீட்பதற் காக அன்பழகனை அழைத்த தாகவும், அவருக்கு போதை யேற்றி வாக்கிடாக்கியைத் திருடியதாகவும் ஒப்புக்கொண்டனர். கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷின் புகாரின் பேரில் மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து இன்ப சுரேஷ், முகேஷ்கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய நான்கு பேரை கைது செய்தார். இதில் முகேஷ் கண்ணன், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளராகவும், அ.தி.மு.க. ஐ.டி. விங்கிலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். தலைமைக்காவலர் அன்பழ கன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருட்டு மணல் வாகனங்களைப் பிடித் தால் அந்த வாகனங்களை விடச்சொல்லி மணல் கொள் ளையர்களை ஆதரிப்பதாக ஏற்கனவே அன்பழகன் மீது காவலர்கள் சிலர் புகாரளித் திருப்பதும் தெரியவந்துள்ளது.