""பீஸ் கட்ட வக்கில்லை. எக்ஸாம் எழுத வந்துட்ட..'' என சக மாணக்கர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் 14 வயது மாணவன்.
பாளையங்கோட்டை சாந்திநகர் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரியும் இவருக்கு நரேன், சுர்ஜித் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி மாரியம்மாள், அருகிலுள்ள தபால் நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றார். ""பீஸ் அதிகமானாலும் பரவாயில்லை. தன்னுடைய நிலை மகன்களுக்கு வந்துவிடக்கூடாது'' என்பதற்காக இருவரையும் அருகிலுள்ள தனியார் பள்ளிக்கு கல்வி பயில அனுப்பியுள்ளார். இந்நிலையில் பீஸ் கொண்டு வந்தால்தான் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளி நிர்வாகம் வற்புறுத்திய நிலையில், வியாழக் கிழமையன்று பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த மகன் நரேன் மாலை வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், ""பள்ளியில் அனைவருக்கும் முன்பு குழந்தையை அவமானப்படுத்தியதால் தான் அவன் இந்த முடிவை எடுத்துள்ளான். இப்ப பணத்தைத் தர்றேன். பிள்ளையத் தருவீயளா..?'' என்ற கேள்வியுடன் பள்ளி நிர்வாகத்தின் மீதும், குறிப்பிட்ட அந்த ஆசிரியை மீதும் வழக்குப் பதியவேண்டுமென வெள்ளிக் கிழமையன்று பாளையங் கோட்டை -தூத்துக்குடி சாலையை மறித்து போராட்டம் நடத்தினர் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
""ரூ.11 ஆயிரம் பீஸ் கட்ட வேண்டியிருந்தது உண்மை தான். சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் உயிரைக் காத்துக் கொள்வதற்கே பெரும் போராட்டமான நிலை இருந்தது. இந்த நிலையில் ஸ்கூல் 2ம் தேதி திறந்தது. நானே நேரில் சென்று பள்ளிக் கட்டணத்தை வெகு விரைவாக கட்டி விடு கிறேன் என பள்ளி நிர்வாகத்திடம் சொல் லிட்டு வந்தேன். ஆனால் 3ம் தேதி அன்னைக்கு எக்ஸாம் நேரத்தில், எக்ஸாம் ஹாலில் அனைத்து மாணாக்கர் களும் இருந்த நிலையில், ""பீஸ் கட்ட வக்கில்லை... எக்ஸாம் எழுத வந்துட்ட'' என மகன் நரேனிடம் கத்தியுள் ளார் ஆசிரியை ஒருவர். அழுதுக்கிட்டே எக்ஸாம் எழுதிட்டு வீட்டுக்கு வந்தவன், ""பீஸ் கட்டினால் தான் எக்ஸாம் எழுத விடுவாங்களாம்'' என்றவன் அன்று நடந்ததைக் கூறினான். நாம கஷ்டப்படுற மாதிரி நம்மபுள்ள கஷ்டப்படக்கூடாதுன்னு இங்கிலீஷ் ஸ்கூலில் சேர்த்துவிட்டோம். எப்பாடுபட்டாவது பீஸைக் கட்டுறேன். அதுவரை வீட்டில் இரு."" என்றேன். வியாழக்கிழமை அன்று சின்னவன் (அதே பள்ளி) ஸ்கூலுக்கும், மனைவியும் நானும் வேலைக்கும் சென்றோம். மாலை வேளையில், "ஏங்க கதவு சாத்தியிருக்குது. தம்பியை பாத்தீகளா?'ன்னு போன் அடிச்சா எனது மனைவி. அதற்கப்புறம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தால் என்னுடைய வேஷ்டியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கின்றான் என் மகன். இதற்கெல்லாம் காரணம் பள்ளி நிர்வாகமே! பணத்திற்காக எனது மகனை கொன்றுவிட்டது பள்ளி நிர்வாகம்'' என உடைந்து அழுதார் தந்தையான நாகராஜன்.
இளைய மகன் சுர்ஜித்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட அம்மா மாரியம்மாளோ அழுது அரற்றிய நிலையில் மயங்கி விழுந்தார். மாணவனின் பெற்றோர், உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில், "பள்ளிக் கட்டணம் செலுத்தாமல் வகுப்புக்கு வரக்கூடாது' என வகுப்பு ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து நரேன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்... மேலும் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டியும் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இவ்வேளை யில் பள்ளி நிர்வாகமோ, "பள்ளிக் கல்வி கட்டணத்துக்காக மாணவன் நரேனை அவமானப்படுத்த வில்லை. அவர் விடு முறை எடுத்ததாலேயே திட்டியதாக' போலீஸாரிடம் விளக்கமளித் துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஒரே வாரத்தில் மேலும் ஒரு சம்பவமாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
-நா.ஆதித்யா