சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்த நபர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத் துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த வேல் முருகன், தனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அதிருப்தி யடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்ட காவலர்கள், தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் உயிரிழந்தார். வேல்முருகனின் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. விண் ணப்பித்த ஆறு நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது எனவும், எந்த அலைக்கழிப்பும் செய்யவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதிச்சான்று கொடுக்காமல் அலைக்கழித்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட வேல்முருகன் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும், வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பழங் குடியினர் சான்று கோரி வழங்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேல்முருகன் மனைவி சித்ராவிடம் கேட்டபோது, “"என் கணவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி, குழந்தைகளுக்கு எஸ்.டி. சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மனைவியான என்னுடைய குழந்தைக்கு எஸ்.சி. சான்று கொடுத்துள்ளார்கள். நாங்கள் இருவருமே குறவர்கள்தான்... இருந்தபோதிலும் எங்களுக்கு மட்டும் எஸ்.சி. சான்று கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?''’என்றார்.
"மலைக் குறவன், குறவன் என்று தனித்தனியாக இரு இனங்கள் இருக்கின்றனவா என்றால் அது அரசுப் பட்டியலில் மட்டுமே இருக்கின்றதே தவிர, இரு இனங்களும் ஒன்றுதான். இருவரும் பெண் கொடுத்து பெண் எடுப்பவர்களே. அத்தனை சடங்குகளும் ஒன்றே. இப்படி இருக்கும்போது எங்களை எப்படி பிரிக்கமுடியும், இதே நிலைதான் தமிழகம் முழுவதும்''” என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
குறவர் சமூகத்தின் சாதிச்சான்று சிக்கலைப் புரிந்துகொள்ள காலனி பிரிட்டிஷ் அரசுமுதல், சுதந்திரத்துக்குப் பின் மத்திய, மாநில அரசுகள் வரை இச்சமூகம் தொடர்பாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும்.
1883-ஆம் ஆண்டு, 11 பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பட்டியலை பிரிட்டிஷ் அரசாங்கம் முதன்முதலில் வெளியிட்டார்கள். அதில் ஆங்கிலத்தில் குரவாஸ் என்றும், தமிழில் குறவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது. சில பத்தாண்டு களுக்குப் பிறகு 1936-ஆம் ஆண்டு இந்தியா முழுதும் அட்டவணை ஜாதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் குறவர் என இருந்ததை மாற்றி, குறவன் என குறித்து எஸ்.சி. பட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டபோது, குறவன் எஸ்.சி.யாக வும், மலைக்குறவன் எஸ்.டி.யாகவும் பிரிக்கப்பட் டது. இரண்டு பிரிவினரின் திருமணச் சடங்கில் தொடங்கி குலமுறைகள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். இந்த சூழ்நிலையில் 1976, குடியரசுத் தலைவரின் உத்தரவு மூலமாக தமிழகம் முழுவது முள்ள மலைக்குறவர்களை எஸ்.டி.யாக அறிவித்த மத்திய அரசு, குறவர்களை தொடர்ந்து எஸ்.சி. யிலே விட்டுவிட்டது. ஒரே சமூகம் இருவேறு பட்டியல்களான எஸ்.சி.யிலும், எஸ்.டியிலும் நீடிக்கும் அவலநிலை இப்படித்தான் உருவானது.
மேலும் குற்றப் பழங்குடி சட்டத்தின்கீழ் ஒடுக்கப்பட்ட இம்மக்கள், 1913 முதல் 1943 வரை இடம் அல்லது தொழில் அடிப்படையில் பல்வேறு பெயர்களில் அறிவிக்கை செய்யப்பட்டார்கள். இந்த அறிவிக்கை செய்யப்பட்ட இனங்கள் எந்தப் பட்டியலிலும் இல்லாமல் இருந்தவர்களை, 1980-இல் அன்றைய அரசு என்.சி.யாக கொண்டு வந்து, அதனை பி.சி.யில் ஒரு பிரிவாக இணைத்தது. 1989-களில் பி.சி.யில் இருந்ததை எம்.பி.சி.யில் இணைத்து எம்.பி.சி. +டி.என்.சி என 20 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., டி.என்.சி.யாக மூன்று பட்டியலில் உள்ளனர்.
பொதுவாக சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு பி.சி., எம்.பி.சி.யாக இருந்தால் ஜோனல் தாசில்தாரிடம் பெறுவார்கள், எஸ்.சி.யாக இருந்தால் தாசில்தார் வட்டாட்சியரிடம் வாங்குவார்கள். எஸ்.டி.யாக இருக்கும் பட்சத்தில் கோட்டாட்சியரிடமே வாங்கவேண்டியுள்ளது.
திருமணம், சடங்கு, தொழில், கொடிவழிச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டியபிறகே சாதிச் சான்றிதழ் இவர்களுக்குக் கிடைக்கும்.
குறவன் இனத்தில் அப்பா எஸ்.டி.யாகவும், அம்மாவுக்கும் எஸ்.சி.யும், மாமனார் எஸ்.டி.யாக வும் இருக்கும் அவலம்கூட நிலவுகிறது. குழந்தைக்கு என்ன சான்றிதழ் கொடுப்பார்கள் என்ற கேள்வி யெழுகிறது. உண்மையாகவே இவர்கள் குறவர் களாக இருந்தாலும் அதை விளக்கிச்சொல்லும் அளவிற்கு கல்வியறிவு அற்றவர்களாகவே உள்ளனர். அதனால் சாதிச் சான்றிதழ் கொடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதைத்தான் 1970-ஆம் ஆண்டு சட்டநாதன் அறிக்கையில், "இந்த மக்கள் என்னைச் சந்தித்து பேசியபோது, தன்னைப் பற்றி யார் என்பதைக்கூட விளக்கம் கொடுக்கமுடியாதவர் களாக உள்ளனர்''’என்றார்.
நிபுணர்கள் தலைமையில் குழு அமைத்து, குறவர்கள் அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதே இதற்கு ஒரே தீர்வு என்பதே பலரின் கருத்தாக உள்ளது.