ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள மலைகளைப் பிளந்து கனிமங்களை கேரளாவுக்கு கொண்டுசெல்வது இன்னும் தடுக்கப் படாமல் தொடர்கிறது.
இதைத் தடுப்பதற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, பத்மனாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மனோதங்கராஜ் சித்திரங்கோடு, தக்கலையில் பலகட்ட போராட்டங்களையும் சாலை மறியலையும் நடத்தினார். அதில் தி.மு.க. கூட்டணியினர், கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அப்போதைய அரசோ, அதிகாரிகளோ இதைக் கண்டுகொள் ளாததால் மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் வழக்கு தொடர்ந் தார்.
"மனோ தங்கராஜ் மந்திரியாகிவிட்ட தால், குமரி மாவட்டத்தி லிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டுசெல்வது தடுக்கப்படும்' என நினைத் திருந்த குமரி மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிம்லர், “"4 மாதத்துக்கு முன் மந்திரி துரைமுருகன் சட்டசபையில் குமரி மாவட்டத்தில் 3 கல் குவாரிகள்தான் இருக்கிறது. மற்ற குவாரிகளை மூடிவிட்டோம்'' என்றார். ஆனால் ஒரு வாரத்துக்கு முன் மந்திரி மனோ தங்கராஜ், "குமரி மாவட்டத்தில் 7 குவாரிகள்தான் இருக்கிறது. அவற்றுக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறோம்' என்றார். மனோ தங்கராஜ் சொல் வதைப் பார்த்தால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மேலும் 4 குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டு மந்திரிகளும் சொல்வதைப்போல் குமரி மாவட்டத்தில் செயல்படுவது 7 குவாரிகள் மட்டுமல்ல. சித்திரங்கோட்டில் மட்டுமே 9 குவாரிகள் அனுமதியோடும், அனுமதியில் லாமலும் முறைகேடாகச் செயல்படுகின்றன. அதுபோக தோட்டியோடு, கருங்கல் பகுதி களிலும் பல குவாரிகள் செயல்படுகின்றன. துரைமுருகன் 3 குவாரிகள் மட்டும்தான் உள்ளது என்று சொல்லும்போது தினமும் 600 டாரஸ் லாரிகள் கனிம வளங்களோடு இங்கிருந்து கேரளாவுக்குச் சென்றன. இன்றைக்கு 1300 லாரிகள் போகின்றன. குவாரிகள் எண்ணிக்கை குறைந்தால் லாரிகளின் எண்ணிக்கையும் குறையவேண்டும் இல்லையா?
"அ.தி.மு.க. அரசுதான் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது. தி.மு.க. ஆட்சி வந்ததும் குமரி மாவட்டத்தில் குவாரிகளை எல்லாம் மூடி மலையைப் பாதுகாப்போம்' என தேர்தல் பரப்புரை செய்தார் மனோ தங்கராஜ். அதே மந்திரி, இப்போது ஒன்றிய அரசையும் நீதிமன்றத்தையும் கைகாட்டுகிறார். அப்படியென்றால் கடந்த ஆட்சியில் குவாரிகளை மூட எதற்காக அவர் போராட வேண்டும்?''” என்றார்.
சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஹோமர்லால் கூறும்போது, "யுனெஸ்கோவால் பாரம்பரிய மலையாகவும் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதியாகவும் அறிவிக்கப்பட்ட "குமரி மேற்குத் தொடர்ச்சி மலையில் அறிவிக்கப்படாத இடங்களில் செயல்படும் கல் குவாரிகளை மூடவேண்டும்' என்று 2013-ல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன், 32 கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அதை கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ததையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அந்த ஆட்சியருக்கு பிறகு யாரும் துணிச்சலாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாரிகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்க... மலைகள் அழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. கல் குவாரிகளுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாகப் போராடிய மந்திரி மனோ தங்கராஜுக்கு அந்த விசயத்தில் தற் போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித் திருப்பதால் அதை நாம் தடுக்க முடியாது என்று துரைமுருகன் சட்டசபையில் பேசுகிறார். தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவந்த எத்தனையோ சட்டத்தை அரசு எதிர்த் திருக்கிறது. அப்படியிருக்கையில் கனிம வளத்தை மட்டும் ஏன் தி.மு.க. கண்டுகொள்ளவில்லை.
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பெரும் போராட்டத்தின் போது நெல்லை தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் அங்கிருந்து ஓடோடி வந்து, குமரி ஆட்சியரைச் சந்தித்துப் பேசினார். அதற்கு காரணம் அவருக்குச் சொந்தமான 300-க்கும் மேற்பட்ட லாரிகள் இங்கிருந்து கேரளாவுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்கின்றன.
இதேபோல் சித்திரங்கோட்டில் 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 2 குவாரிகள் மற்றும் தோட்டியோட்டில் 2 குவாரிகள் மந்திரி மனோ தங்கராஜுக்கு நெருக்கமானவருடையதாம். 80 லாரிகள் அவர் பினாமி என சொல்லி ஓடுகிறதாம். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அதிகாரிகளும் காவல்துறையும் கூறுகிறார்கள்''’என்றார் அவர்.
இதுகுறித்து மந்திரி மனோ தங்கராஜிடம் நாம் கேட்டபோது, “"அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்த குவாரிகளுக்கான உரிமம் மே மாதம் முடிகிறது. அதன்பிறகு எந்த குவாரிகளுக்கும் அனுமதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப் பாட்டில்தான் அரசு இருக்கிறது''’என்றார்.
"மே' வெகு தொலைவில் இல்லை... மந்திரி சொன்னதைச் செய்வாரா பார்க்கலாம்!