தமிழக முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் அரசு கட்டிக்கொடுத்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் செயல்படும் என்று அறிவித்து, அலுவலக செயல்பாட்டுக்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் லேப்டாப் வழங்கி சேவையை துவக்கிவைத்துள்ளார்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் பொது இ-சேவை மையங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற உத்தரவுப்படி, மத்திய அரசின் நிதி உதவியோடு தமிழக அரசு மேற்படி இ-சேவை மையக் கட்டடங் களைக் கட்டியது. கடந்த 2014- 2015-ஆம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள 12,518 ஊராட்சிகளிலும் சுமார் பதினைந்து லட்சம் செலவில் இ-சேவை மையக் கட்டடங்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள், அரசுத் திட்டங்களில் தேவையான சான்றுகளைப் பெற இணைய வழியே விண்ணப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்குத் தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடம், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர் உதவித்தொகை, வாரிசுச் சான்றுகள் உட்பட சுமார் 60-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெற இணைய வழியேதான் விண்ணப்பிக்க வேண்டுமென்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதற்காக கிராமப்புற மக்கள், நகரங் களில் தனிநபர்கள் நடத்திவரும் இ-சேவை மையங்களைத் தேடி படையெடுத்துச் செல்கிறார்கள். விண்ணப்பிக்க நாள்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.
அரசு இ-சேவை மையம் என்ற பெயரில் தனிநபர்கள் நடத்தும் மையங்களில், மக்கள் விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு, குறைந்தபட்சக் கட்டணம் என்று அரசு நிர்ணயித்துள்ளதைமீறி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்கிறார்கள். உதாரணமாக, ஆதரவற்றோர் உதவித்தொகை பெற விண் ணப்பக் கட்டணம் பத்து ரூபாய். ஆனால் இ-சேவை மையங்களில் நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிடுங்குகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கிராமப்புறங்களில் கட்டி கேட்பாரற்றுக் கிடக்கும் இ-சேவை மையங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் ஒடுக்கப்பட்டோர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிங்கார வேலன் நம்மிடம், “"தமிழகத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் பல லட்சம் பட்டதாரிகள் முடங்கிக்கிடக்கிறார் கள். அவர்களைக் கொண்டு சேவை மையத்தை இயக்கவேண்டும். லேப்டாப், கணினி உபகரணங்களை அரசு வாங்கிக் கொடுத்து பயிற்சிகொடுத்து இ-சேவை மையங்களில் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தும் தொகையிலிருந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம். இதன்மூலம் பொதுமக்கள் அந்தந்த கிராமத்திலேயே அரசுத் திட்டங்கள், சலுகைகளைப் பெற சுலபமான முறையில் விண்ணப்பித்துக் கொள்வார்கள். வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும்'' என்கிறார்.
“"தமிழகத்தில் ஊராட்சிகளில் கட்டப் பட்ட இ-சேவை மையங்களை அந்தந்த ஊராட்சியிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு குறைந்த கட்டணத் தில் மத்திய- மாநில அரசுகளின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உட்பட பல்வேறு தேவைகளுக்கு விண்ணப் பிக்கவுமே இ-சேவை மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது அந்தக் கட்டடங் களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர், கிராமத்தில் நடக்கும் திட்டப் பணிகளுக்குத் தேவையான சிமெண்ட் மூட்டை, இரும்புக் கம்பிகளை அடுக்கி வைக்கும் குடோனாகப் பயன்படுத்துகிறார்கள். பல ஊர்களில் இந்தக் கட்டடங்கள் மது அருந்துமிடமாக வும், கள்ளக்காதலர்களின் தேவைக்குமே பயன்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இ-சேவை மையக் கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்'' என்கிறார். வெள்ளையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாயகிருஷ்ணன்.
"தனி நபர்கள் அரசு இ-சேவை மையங்களை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு அனுமதிபெறாமலும் பலர் அரசு முத்திரையுடன் விளம்பர போர்டு வைத்து மையங்களை நடத்துகிறார்கள். அரசு அதிகாரிகள் முறையாக அனுமதி கொடுத்த பல இ-சேவை மையங்களில் போர்ஜரி ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், மையங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது பல அதிகாரிகள் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு அனுமதிகொடுத்துள்ளனர். தற்போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் இ-சேவை மையங்களைச் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், ஒரு சட்டமன்றத் தொகுதியில் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்குமேல் உள்ளனர். 100 முதல் 200 கிராமங்கள் உள்ளன. இதில் வாழும் மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்திற்கு படையெடுத்துச் சென்றால் எல்லோருக்கும் அங்கே தேவைகளை நிறைவேற்றமுடியுமா? எனவே தமிழக அரசு கிராமப்புறங்களில் கட்டப்பட்ட இ-சேவை மையங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் திருக்கோவிலூர் தாமோதரன்.