"எங்களது கோரிக்கையைத்தான் சுகாதாரத்துறை கண்டுகொள்ளவில்லை.… "நீதித்துறையின் உத்தரவையும் மதிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது' என புலம்புகிறார்கள் அரசு மருத்துவர்கள்.

அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இணையாக உயர்த்தும் வகையில் அரசாணை 354-ஐ 2009-ஆம் ஆண்டு வெளியிட்டார் முதலமைச்சராக இருந்த கலைஞர். அந்த அரசாணையைச் செயல்படுத்தவிடாமல் அரசின் உயர் அதிகாரிகள் தடுத்துவந்தனர். அதன்பின் வந்த ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. அரசு, கலைஞர் போட்ட அரசாணை என்பதால் கிடப்பில் போட்டது. எடப்பாடி ஆட்சியிலும் கண்டு கொள்ளவில்லை.

2018-ல் அரசு மருத்துவர்கள் கோட்டையை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தியபோது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் முன்னின்ற மருத்துவர்களை துறைரீதியாகப் பழிவாங்கினார். அப்படியும் தொடர் போராட்டங்களால், சுகாதாரத்துறை அரசு கூடுதல் செயலாளர் நாகராஜ் ஐ.ஏ.எஸ். தலைமையில் மருத்துவக் கல்வி இயக்குநர், மாவட்ட ஊரக நலப்பணிகள் இயக்குநர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் கொண்ட பணிக்குழு ஒன்றை அமைத்தது அரசு. அந்தக் குழுவிடம் பிற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கான ஊதியம், பணிமுறை, தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்து அறிக்கை கேட்டது. அதே காலகட்டத்தில், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள்பிள்ளை, நளினி உள்ளிட்ட 8 மருத் துவர்கள், 2020 டிசம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தில், அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வுக்கான அரசாணை 354-ஐ நடை முறைப்படுத்தவேண்டும் என மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை 2021, மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரசு அமைத்த பணிக்குழு 17.2.21 அன்று தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு முனைப் போடு உள்ளது. ஆனால், சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை எனத் தெரி வித்தனர். இதனால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisment

அதன்பின் நடந்தவற்றை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் பெருமாள், "தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் மறைந்த கலைஞரின் அரசாணையை ஒதுக்கிவைப்பது வேதனையாக இருக்கிறது. கடந்த 2024 பிப்ரவரி 1-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், 6 வாரத்துக்குள் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 6 வாரம் முடிந்தும் சுகாதாரத்துறை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது வேதனையாக இருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்கமாட்டேன் என்பவர்கள், யாருடைய பேச்சைத்தான் கேட்பார்கள் என 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் கேட்கிறார்கள்''’என்றார்.