நீட் எனும் உயிர்க்கொல்லியின் முதல் பலி அரியலூர் மாணவி அனிதா. ப்ளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும், தனது மருத்துவக் கனவைப் பறிகொடுத்த அவர், நீதிமன்றப் படியேறி நீதி கிடைக்காததால் 2017, செப்டம்பர் 01-ந் தேதி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
அவரது மரணம் நிகழ்ந்து இரண்டு ஆண்டு கள் கடந்துவிட்ட நிலையில், ராஜலெட்சுமி, வைசியா, மோனிஷா, பிரதீபா, சந்தியா என இது வரை 11 மாணவிகளும், நீட் தேர்வுதந்த மன உளைச்சலால் பெற்றோரும் உயிரிழந்துள்ளனர். இருந்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்த பாடில்லை. இந்நிலையில், அனிதாவின் நினைவுநாளான செப்டம்பர் 01-ல் இந்திய மாண வர் சங்கத்தினர், சென்னை எழும்பூரில் அனிதாவின் முகமூடி அணிந்தபடி பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் அனிதாவின் நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கவும், பெண்கல்வியைப் பாதுகாக்கவும், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் மாரியப்பன் நம்மிடம், “""நீட் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்துசெய்த துரோகம். அனிதா தற்கொலை செய்து கொண்டதாக சொல்வது முற்றிலும் தவறு. அது அப்பட்டமான கொலை. இரண்டே ஆண்டுகளில் இதே நீட் தேர்வினால் 11 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், நீட் தேர்விலிருந்து விலக்குக்கேட்டு அனுப்பிய தீர்மானம் ரத்தானதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தது தமிழக அரசு. தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு இங்கு மறுக்கப்படுகிறது. எனவேதான், அனிதாவின் நினைவுதினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வலியுறுத்துகிறோம்''’என்றார்.
அனிதாவின் நினைவுதினத்தன்று தமிழகமே நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிக் கொண்டிருந்தது. அதேநாளில், அதை ஆதரித்துப்பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு தெலுங்கானா ஆளுநராக பதவி கொடுத்திருப்பது விமர்சனத்தைக் கிளப்பியிருக் கிறது. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண் டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் விமானநிலையத்தில் இறங்கியபோது நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வலியுறுத்தி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
உலகத் தமிழர்களின் வலுவான எதிர்ப்புக்கு மத்தியில், எட்டே மாதத்தில் அடுத்த நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்கள் லட்சங்களைக் கொட்டி பயிற்சி மேற்கொள்ளும் வேளையில், தமிழக அரசு நடத்தும் நீட் கோச்சிங் மையத்தில் பயின்ற ஒரேயொரு மாணவர் மட்டுமே தேர்ச்சிபெற்றது ஏமாற்றமளித்தது.
அனிதாவின் மருத்துவக் கனவைக் கொன்ற அரசுகள், இனியாவது தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுமா என்று பரிதாபக்குரல் எழுப்புகிறார்கள் ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள்.
-அ.அருண்பாண்டியன்