சமீபகாலமாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் பிரஸ் கார்டு வைத்திருக்கும் போலி பத்திரிகையாளர்கள் போலீசாரிடம் சிக்குவது அதிகரித்துவருகிறது. இந்த போலி பத்திரிகையாளர்கள், தமிழக அரசு வழங்கும் அக்கிரிடேஷன் எனும் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பது இன்னும் அதிர்ச்சியான விஷயம்.
உதாரணமாக சில சம்பவங்களைப் பார்ப்போம்
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது, மக்களிடம் சென்று போலி பத்திரிகை யாளர்கள், அவர்கள் பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டுசென்று தீர்வு காண்பதாகத் தெரிவித்து பணம் வசூலித்திருக்கின்றனர். இது மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்றிருக்கிறது. பத்திரிகையாளரின் பெயரில் சிலர் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, வேலையை முடித்துத் தருவதாகக் கூறி, அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கு மாறு மாவட்ட ஆட்சியரக அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஒரு அறிக்கை வெளியிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க 9498042423 என்ற எண்ணையும் தருமளவுக்கு போலி பத்திரிகையாளர் களின் அட்டகாசம் கோவையில் அதிகரித்துள்ளது,
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல் படும் மாவட்ட செய்தித்தொடர்பாளர் மூலம் அங்கீகாரம் பெற்ற பத்திரிகை யாளர்களுக்கு, அரசு சார்பில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதை வைத்திருப்போர் இலவச பஸ், ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகைகள் வழங்கப்படுகிறது. இப்படி ஒரு அட்டை வைத்து அனுபவித்த ஒரு இளைஞரை யும், அவரது நண்பர்களையும் போலீசார் மடக்கி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பதும், போரூர் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவரையும் இவரது கூட்டாளிகள் சூர்யா, பிரவீன் ஆகியோரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். டாட்டா ஏ.சி. வேன் வாங்கி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இடமாறுதலில் செல்லும்போது அவர்கள் வீட்டைக் காலிசெய்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிச்செல்லும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக கூறிக்கொண்டு ஆந்திராவி லிருந்து கஞ்சா கடத்திவந்துள்ளனர்.
திருச்சியில் கிறிஸ்டல்ராஜ் என்பவர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்தபோது போலீசார் கைதுசெய்தனர். அப்போது போலீசாரிடம், “"நான் 15 வருடமாக ரிப்போர்ட்டர் தொழில் செய்துவருகிறேன். எனக்கு காவல்துறையில் பெரிய, பெரிய அதிகாரிகளைத் தெரியும். என்னையே கைது செய்கிறீர்களா?''’என்று மிரட்டியுள்ளார். இவரை கைதுசெய்து திருச்சி கண்ட் டோன்மென்ட் மகளிர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாயார் வாங்கிய கடனுக்காக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ரமீஜாபானு என்பவரிடம் வீட்டு வேலைக்கு வந்துள்ளார். ரமீஜாபானுவோ சிறுமியை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தியுள்ளார். அந்த சிறுமியோடு கிரிஸ்டல்ராஜ் விடுதியில் தங்கியிருந்தபோதுதான் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 28-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு இரண்டு நபர்கள் காரில் சென்றுள்ளனர். பத்திரிகையாளர்கள் என்று கூறிய அவர்கள், "இந்தக் கடையில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பதாக தகவல் வந்துள்ளது. அதுகுறித்து விசாரித்து செய்தி வெளியிட வந்துள்ளோம். செய்தி போடாமலிருக்க எங்களுக்கு பணம் தரவேண்டும்'' என டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி 2000 ரூபாய் பணம் பெற்றுள்ளனர். பணம் கொடுத்த அந்தக்கடை விற்பனையாளர் மற்ற கடைகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அடுத்தபடியாக, அதே ஊரிலுள்ள இன்னொரு டாஸ்மாக் கடையில் பணியிலிருந்த மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வருவதற்குள் இரண்டு நபர்களும் அங்கிருந்து எஸ்கேப். விசாரணையில் இருவரும் விருதுநகர் மாவட்டத் தில் பல்வேறு டாஸ்மாக் கடைகளுக்கும் சென்று, இதேபோல் ஏகப்பட்ட பணம் வசூலித்தது தெரியவர... அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையத்தில் எல்.கே.ஜி. படித்த 4 வயது சிறுமி, தனியார் பள்ளியின் வேன் சக்கரத்தில் சிக்கி இறந்துபோனார். மறுநாள் அந்த பள்ளிக்குச் சென்ற இருவர், பள்ளித் தாளாளரிடம் தங்களை பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு "உங்கள் பள்ளி வேனில் சிக்கி சிறுமி இறந்தது குறித்து செய்தி வெளியிடப்போகிறோம். அந்த செய்தி வெளிவந்தால் உங்களது பள்ளியின் பெயர் டேமேஜாகும். செய்தி போடாமலிருக்க எங்களுக்கு பணம் தரவேண்டும்'' என்று மிரட்டியுள்ளனர்.
பள்ளித் தாளாளரோ, நைச்சியமாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட... இருவரும் எஸ்கேப். போலீஸ் விசாரணையில், வந்தவர்கள் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் என தெரியவந்தது. இதில் சீனிவாசன் பூட்டு சாவி ரிப்பேர் செய்யும் தொழில் செய்துவந்துள்ளார். இவர் போலியாக பிரஸ் அடையாள அட்டை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையில் பணிபுரிவதாக பலரிடமும் மிரட்டி பணம் பறித்துள்ளார். சீனிவாசன் கைது செய்யப் பட்ட நிலையில், குபேந்திரன் தலைமறைவாகி விட்டார்.
போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு?
-சக்கரை