விருதுநகரில் நம்மைச் சந்தித்த பாரம்பரிய காங்கிரஸ்காரரான அந்தப் பெரியவர் வேதனையுடன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"சிவகாசி லோக்சபா தொகுதியா இருந் தப்ப 1967ல இருந்து 2004 வரைக்கும் நடந்த 11 தேர்தல்ல ரெண்டு தடவைதான் காங்கிரஸ் ஜெயிச்சது. அந்த ரெண்டு தடவையும் ஜெயிச்சு எம்.பி. ஆனவங்க ஜெயலட்சுமி. விருதுநகர் லோக்சபாவா மாறுன பிறகு 2009ல இருந்து 2019 வரைக்கும் நடந்த 3 தேர்தல்ல ரெண்டு தடவை காங்கிரஸ் ஜெயிச்சுச்சு. ரெண்டு தடவையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆனாரு. காமராஜர் பிறந்த மண்ணுன்னு பெருமையா சொல்லுறாங்க. ஆனா.. இங்க காங்கிரசுக்கு என்ன மதிப்பு இருக்கு? பெரிய கட்சி தி.மு.க.வோட கூட்டணிங்கிறதுனால.. மாணிக்கம் தாகூருக்காக தி.மு.க.தான் கடுமையா உழைக்குது. வாக்கு வங்கி வற்றிப்போன காங்கிரஸை, எங்க கட்சிக்காரங்கள தி.மு.க.வும் சரி... கூட்டணிக் கட்சிக்காரங்களும் சரி... கண்டுக்கிறதே இல்ல. காங்கிரஸுக்கு தேர்தல் கமிட்டின்னோ, தேர்தல் பணிக்குழுன்னோ எதுவும் இல்ல. தி.மு.க. வாலைப் பிடிச்சிக்கிட்டு பின்னாலயே போகணும், அவ்வளவுதான். இங்கே யாரையும் குற்றம் சொல்லுறது என்னோட நோக்கம் இல்ல. இந்த நெலம ஏன் வந்துச்சுன்னு காங்கிரஸ்காரங்க சிந்திக்கணும்கிறதுதான்.
இந்தியா சுதந்திரம் அடைஞ்ச பிறகு 1947ல இருந்து 1967 வரைக்கும் தமிழ்நாட்டுல காங்கிரஸ் ஆட்சிதான் நடந்துச்சு. டி.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம்னு மிகப் பெரிய ஆளுமைகள்கிட்ட தமிழ்நாடு இருந்துச்சு. இன்னைக்கு காமராஜர், கக்கன்னு பெருமை பேசுறோமே தவிர, காங்கிரஸுக்கு புத்துயிர் கொடுக்க ணும்னு யாரும் சிந்திக்கிறதும் இல்ல; செயல்படறதும் இல்ல.
இதைக்கூட இந்த நேரத்துல நான் ஏன் பேசுறேன்னா.. திருமங்கலம் சைடுல இருந்து எனக்கு ஒரு தகவல் சொன்னாங்க. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. என்.எஸ்.வி.சித்தனுக்கு நெருக்கமான குடும்பத்துல உள்ள வங்ககிட்ட தி.மு.க. தரப்புல இருந்து பேசிருக்காங்க. உங்க கட்சிதான் இந்தத் தொகுதில நிக்குது. மாணிக்கம் தாகூர்தான் வேட்பாளர். நீங்கள்லாம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்துல உள்ளவங்க. இந்த ஏரியவுல உங்க சொந்தபந்தங்களே நெறயபேரு இருப்பாங்க. அவங்கள ஒருங்கிணைச்சு கை சின்னத்துல ஓட்டுபோடச் சொல்லணும். இதை ஒரு பொறுப்பா எடுத்து நீங்க பார்க்கணும்னு உருத்தா சொல்லிருக்காங்க. அதுக்கு அந்தக் குடும்பத்துல இருக்கிற ஒருத்தர், தமிழ்நாட்டுல காங்கிரஸ் காலம் எப்பவோ முடிஞ்சிருச்சு. வயசானவங்க மட்டும் இருக்கிற கட்சியா இருக்கு. எதுக்கு காங்கிரசுக்கு சீட் கொடுத்து நீங்க கஷ்டப்படணும். தி.மு.க. வேட்பாளர நிப்பாட்டிருக்கலாம்ல. அடுத்து வர்ற தேர்தல்லயாச்சும் நான் சொன்னத மனசுல வச்சுக்கிட்டு, உங்க கட்சித் தலைமைகிட்ட பேசுங்கன்னு சொல்லிருக்காரு. தி.மு.க.வுல இருக்கிற அந்த முக்கிய பிரமுகர் என்கிட்ட, "என்னய்யா.. உங்க கட்சிக்காரங்ககிட்ட சப்போர்ட் பண்ணச்சொல்லி கேட்டா, தேவையில்லாமப் பேசி எங்களுக்கே அட்வைஸ் பண்ணுறாங்க'ன்னு எரிச்சல்பட்டாரு.
எனக்கு என்ன கவலைன்னா, என்.எஸ்.வி. சித்தன் யாரு? காங்கிரஸ் கட்சில சீட் கொடுத்து.. மூணு தடவை திருமங்கலம் எம்.எல்.ஏ. ஆனாரு. மூணு தடவ திண்டுக்கல் எம்.பி. ஆனாரு. இப்ப என்.எஸ்.வி. சித்தனுக்கு 90 வயசு நெருங்கப்போகுது. அவரு உடம்புல காங்கிரஸ் ரத்தம்தான் ஓடும்... அதுல சந்தேகம் இல்ல. ஆனா... அவருக்கு நெருக்கமா இருக்கிற குடும்பத்துல உள்ளவங்களே, இப்படி பேசிருக்காங்க. என் மனசுலகூட ஒரு கேள்வி இருக்கு. தனக்கு இத்தனை வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ் கட்சிக்காக, என்.எஸ்.வி.சித்தன் ஏன் துடிப்பான இளைஞர்கள வளர்த்து விடல? அதை அவரு பண்ணிருந்தா, அந்தக் குடும்பத்துல இருந்து காங்கிரசுக்கு எதிரா இப்படி ஒரு கமெண்ட் வந்திருக்குமா?
என்.எஸ்.வி.சித்தனோட அப்பா வீர்பத்திரத் தேவரும், மாமனார் சோமசுந்தரத்தேவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். அந்தக் காலகட்டத்துல காமராஜர் மாதிரி தலை வர்களோட ஜெயில்ல இருந்தவங்க. சுதந்திரம் கிடைச்ச பிறகு, காமராஜர் வழில அரசியலுக்கு வந்தவங்க. ஆனா... அவங்க வாரிசான என்.எஸ்.வி. சித்தனுக்குப் பிறகு, யாரும் காங்கிரஸ்ல பெருசா தலையெடுக்கல. யாரையும் உருவாக்கவும் இல்ல.
கிட்டத்தட்ட 57 வருஷமா தமிழ்நாட்டுல பவர்ல இல்லாத கட்சியா காங்கிரஸ் ஆயிருச்சு. மாநில அதிகாரத்தை நோக்கி கட்சியை நடத்துற தலைவர்கள் வரல. வீரியம் இழந்த கட்சிங்கிறதுனால.. தேர்தல் நேரத்துல இத்தனை எம்.எல்.ஏ. சீட் வேணும், இத்தனை எம்.பி. சீட் வேணும்னு மாநில கட்சிகளான திராவிட கட்சிகள்கிட்ட கேட்கிற நிலைமைகிட்ட இறங்கிட்டோம்.
தமிழ்நாட்டுல கேரள மாடல் இல்ல. 2006 சட்டமன்றத் தேர்தல்ல தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கல. 96 தொகுதில ஜெயிச்சது. காங்கிரஸ் 34 தொகுதில ஜெயிச்சுச்சு. அப்ப காங்கிரஸ் தயவுல தி.மு.க. ஆட்சி அமைஞ்சது. ஜெயலலிதாகூட மைனாரிட்டி தி.மு.க. அரசுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொன்னாங்க. அந்த நேரத்துல ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தி.மு.க. கூட்டணி ஆட்சி மந்திரிசபைல காங்கிரசுக்கும் இடம் வேணும்னு வெளிப்படையாவே கேட்டாரு. மாநில அரசுல காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. பங்கு தரமாட்டேங்குது. ஆனா... மத்திய அரசுல இலாகாக் களை கேட்டு வாங்குறாங்கன்னு காங்கிரஸ் கட்சிக் காரங்க குமுறுனாங்க. கலைஞர் நோ சொல்லிட்டாரு. சோனியா அம்மா வரைக்கும் விவகாரம் போச்சு. அவங்க "பெரியவர் மனசு கோணாம நடந்துக்கங்க'ன்னு சொல்லிட்டாங்க.
அதிகாரத்துல இருந்தாத்தான் கட்சிய வளர்க்கமுடியும். நாட்டுக்காக மிகப்பெரிய தியாகம் பண்ணுன கட்சி. காங்கிரசுக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. ஆனா.. காங்கிரஸ்ல தொண்டர்களே இல்ல. தலைவர்கள் மட்டுமே இருக்காங்கன்னு ஒரு பேராயிருச்சு. காங்கிரஸ்காரங்க உழைக்கிறது இல்ல. ஆனா.. சீட் மட்டும் கேட்கிறாங்கன்னு தேர்தலுக்குத் தேர்தல் விமர்சனம் வருது. கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத இந்தக் காலக்கட்டத்துலகூட, எதிர்க்கவேண்டிய நேரத்துல எதிர்த்து, தமிழ்நாட்டுல துணிச்சலா அரசியல் பண்ணி காங்கிரஸை வளர்க்கிறதுக்கு ஆள் இல்லாம போச்சு.
மேலே அரசியல்மாற்றம்னா பா.ஜ.க.வுக்கு மாற்றா காங்கிரஸ் இருக்கு. மோடிக்கு மாற்றா ராகுல்காந்தி இருக்காரு. ஆனா... தமிழ்நாட்டுல காங்கிரஸோட நிலைமை மாறவே மாறாதுங்கிற ஒரே ஸ்டேஜுலயே ரொம்ப காலமா இருக்கு''’என்று நொந்துகொண்டார்.
எப்படியிருந்த காங்கிரஸ் இப்படி ஆயிருச்சே!