வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் காற்று வேகமெடுத்து வீசுகிறது. ஒவ்வொரு கட்சியிலும் சீட் ரேஸ் விறுவிறுப்பாக நடக்கிறது. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது சிவகங்கை மாவட்டம். தற்போது காரைக்குடி காங்கிரஸ் வசமும், திருப்பத்தூர் தி.மு.க வசமும் இருக்க, சிவகங்கை, மானாமதுரை ஆகியவை அ.தி.மு.க.விடம் இருக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான ஒன்றியங்கள் இழுபறியில் சிக்க, அண்மையில் குலுக்கல் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இருதரப்பும் அங்கே "நீயா? நானா?' என டஃப் ஃபைட்டில் இருப்பது தெரிகிறது. இதில் அ.தி.மு..க. தரப்பிடம் அதிகமாய்க் கேட்கிறது கோஷ்டி கானம். இனி சீட் ரேஸைப் பார்ப்போம்.
காரைக்குடி:
காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் தாலுகாக்கள் சாக்கோட்டை, கன்னங்குடி மற்றும் தேவக்கோட்டை ஆகிய ஒன்றியங்களும், கண்டனூர் மற்றும் புதுவயல் பேரூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியது காரைக்குடி தொகுதி.
இதுவரை காங்கிரஸ் தரப்பு 4 தடவையும், சுதந்திரா கட்சி 2 முறை யும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பா.ஜ.க., த.மா.கா. ஆகியன தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ப.சிதம்பரத்தின் அழுத்தத்தால் பெரும்பாலும் காரைக்குடித் தொகுதியினை கூட்டணிக்கே தட்டிவிடும் தி.மு.க. இந்தமுறை எப்படியாவது இங்கு போட்டி யிடுவதென கங்கணம் கட்டிக்கொண்டி ருக்கிறது.
தி.மு.க. களமிறங்கும் என்ற நினைப்பில், கட்சியின் இலக்கிய அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தென்னவன், இப்போதே தொகுதிக்காக மல்லுக் கட்டி வருகிறார். கொலையுண்ட கட்சிப் பிரமுகர் ரூஸோவின் மனைவி ஜோன்ஸ் ரூஸோ தற்பொழுது மாவட்ட துணை செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். இவரும் வேட்பாளராக முயற்சி செய்கிறார். சாக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சூழ்ச்சியால் தோல்வியுற்ற ஒன்றிய பொறுப்பாளர் சின்னத்துரையும் களத்திலிருக்கின்றார்.
அ.தி.மு.க தரப்பிலோ தனக்குத்தான் இங்கு சீட் என்கின்ற நம்பிக்கையில், கொரோனா காலத்து உதவிகள் மூலம் மக்களிடம் வலம்வந்த மா.செ. செந்தில் நாதன், தலைமையின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறார். எனினும் இந்தத் தொகுதி தனக்குதான் என்று பா.ஜ.க.வின் ஹெச் ராஜாவும் காத்திருக்கிறார்.
காங்கிரஸ் தரப்பில் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராம சாமியோ, "இந்தமுறை தனக்கு காரைக் குடிக்கு பதில் திருவாடனை வேண்டும்' என்று காய் நகர்த்திவருகிறார். அதேநேரம் அவரது மகன் கருமாணிக்கம் இந்தத் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார். ம.தி.மு.க.வைச் சேர்ந்த புலவர் செவ்வந்தி யப்பனும் தொகுதி மீது காதல்கொண் டிருக்க... அ.ம.மு.க சார்பில் கட்சியின் மா.செ. தேர்போகி பாண்டி சீட் ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்களையும், கானாடுகாத்தான், பள்ளத்தூர் மற்றும் கோட்டையூர் பேரூராட்சிகளையும் உள்ளடக்கியது திருப்பத்தூர். இதுவரை தி.மு.க. 8 முறையும், அ.தி.மு.க. மூன்று முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும், சி.பி.ஐ., சுயேட்சை ஆகியவையும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.
தி.மு.க.வினைப் பொறுத்தவரை மாற்று வேட்பாளர் யாரும் போட்டிக்கே வராத நிலையில் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்ற கட்சியின் மா.செ. பெரியகருப்பன் மீண்டும் களமிறங்கக் காத்திருக்கிறார். அ.தி.மு.க.வினைப் பொறுத்தவரை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா'வின் ஆசிரியர் மருது அழகுராஜ் தனக்கே உரிய மேல்மட்ட செல்வாக்கினைக் கொண்டு எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். இருப்பினும் அவருக்கு போட்டியாக யாதவ சமூகத்தை சேர்ந்த "இளைஞர் இளம்பெண்கள் பாசறை'யின் ஆபத்தாரணப்பட்டி பிரபுவும், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திராவும் சீட்டுக்காக மல்லுக்கட்டி வருகின்றனர். இது இப்படியிருக்க அ.ம.மு.க தரப்பில் உமாதேவன் சீட் கேட்டு வரிந்துகட்டுகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை நகராட்சி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் கல்லல் ஒன்றியங்களுக்குண்டான பகுதிகளை உள்ளடக்கிய இத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க மூன்று முறையும், சி.பி.ஐ. இருமுறையும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வினைப் பொறுத்தவரை கட்சியின் மா.து.செயலாளரான சேங்கை மாறன் தனக்கு வேண்டப்பட்ட மேலிட பொறுப்பாளர் களைக் கொண்டு சீட் கேட்டு மல்லுக் கட்டி வரும் நிலையில், அவர் தொகுதிக்கே சம்பந்தமில்லாதவர் என்ற ரீதியில் இப்போதே அவருக்கு எதிரான கடிதங்கள் அறிவாலயத்தை நோக்கிப் படையெடுக்கின்றன.
சிவகங்கை ந.செ.துரை ஆனந்தும், கல்லல் ஒ.செ. செழியனும் முயற்சியில் இறங்க, இவர்களில் செழியன், ஓ.பி.எஸ். வீட்டில் சம்பந்தம் செய்தவர் என்று ஒரு தரப்பு அவருக்கு எதிராகக் கொளுத்திப் போட்டு வருகிறது. தொகுதியின் சிட் டிங் அமைச்சர் பாஸ்கர், "எதையாவது பேசி வம்பில் மாட்டிவிட்டு விடுவார் என்பதால் இந்தமுறை அவருக்கு சீட் கிடைக்காது' என்கிறார்கள். இதையறிந்த அமைச்சர் தரப்பு, அவருடைய மகன் கருணாகரனுக்கு சீட் கேட்கிறதாம்.
சீட் ரேஸில் முன்னாள் மா.செ. முருகானந்தமும், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஏ.எம்.என். ராஜாவும் ஓடிக்கொண்டிருக்க... இந்தத் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சிவகங்கை வேண்டுமென இப்போதே மா.செ.செந்தில்நாதன் ஆப்சனையும் தலைமைக்குக் கொடுத்திருக்கிறாராம்.
காங்கிரஸைப் பொறுத்தவரை முன்னாள் மத்திய இணையமைச்சராக பதவி வகித்த சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்மன் களமிறங்கும் ஆயத்தத்தில் இருக்கிறார்.
"தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.ஐ.-க்கு தொகுதி ஒதுக்கப் பட்டால், 2006, 2011-ம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான குணசேகரனே போட்டியிட வாய்ப்பு' என்கிறார்கள். அ.ம.மு.க.வைப் பொறுத்தவரை மந்தக்காளை தனக்கு சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறாராம்.
மானாமதுரை:
மறுசீரமைப்பின்போது இளை யான்குடி தொகுதியிலிருந்து பிரிந்திருக்கிறது மானாமதுரை. இதில் திருபுவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய ஒன்றியங்களும், பேரூராட்சிப் பகுதிகளும் அடங்கியுள்ளன.
தி.மு.க.வைப் பொறுத்தவரை முன் னாள் அமைச்சர் தமிழரசி மல்லுக்கட்ட... அவருக்கு ஆதரவாக எ.வ.வேலுவும், கனி மொழியும் தெம்பூட்டி வருகின்றனர். அதே வேளையில் கடந்த முறை தோல்வியுற்ற இலக்கியதாசனும், முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் மகளான சித்ரா செல்வியும் சீட்டுக்கான ரேஸில் குதித்திருக் கிறார்கள். கட்சியில் சிலர் உள்ளடி வேலை பார்க்கலாம் என்பதால் தொகுதி யைக் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுக்குத் தள்ளிவிடும் யோசனையில் இருக்கிறாராம் மா.செ.வான பெரியகருப்பன்.
சமீபத்தில் நடந்த தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில், ""எனக்கு சீட்.! அவனுக்கு சீட்! என ஆளாளுக்கு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வேட்பாளராக்கி வருகிறீர்கள். அது தவறு. யாருக்கு சீட் என்பதனை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். ஏன் இந்தத் தொகுதியில் தி.மு.க.தான் போட்டியிட வேண்டுமா..? காங்கிரஸ் போட்டியிடாதா..? காங்கிரஸ் போட்டியிடத்தான் 95 சதவிகித வாய்ப்புக்கள் உள்ளன'' என பெரியகருப்பன் பகிரங்கமாகவே சொல்ல, அது தி.மு.க.வினரை எரிச்சல்படுத்தியிருக்கிறது.
இதையறிந்த காங்கிரஸ் தரப்பு உற்சாகமடைய, அங்கே அக்கட்சியின் எஸ்.சி. எஸ்.டி பிரிவின் மாநில துணைத்தலைவர் மருத்துவர் செல்வராஜ் சீட்டைக் கைப்பற்ற சென்னைக்கும் காரைக்குடிக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க. தரப்பிலோ பெண் விவகாரத்தால் வெட்டுப்பட்ட மானாமதுரை ஒ.செ. குணசேகரன், ஓ.பி.எஸ். மூலம் சீட் கேட்டு காய் நகர்த்திவரும் நிலையில், ""நான் இங்கே வெற்றி பெற்று ஒரு வருடம்தான் ஆகின்றது. என் மீது எவ்விதப் புகாரும் இல்லை. எனக்கே சீட் கொடுக்க வேண்டும்'' என மீண்டும் சீட் கேட்டு போராடி வருகின்றார் சிட்டிங் நெட்டூர் நாகராசன். அ.ம.மு.க தரப்பிலோ மாரியப்பன் கென்னடி ரேஸில் இருக்கிறார்.
சீட்டுக்காக மல்லுக்கட்டும் பிரமுகர்களால் சிவகங்கை மாவட்ட அரசியலில் புழுதி பறக்கிறது.
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்