வழக்கம்போல என்றால் அக்டோபர் 2020-ல் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவேண்டும். கொரோனா சூழ்நிலை ஒரு இக்கட்டைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை உரிய தேதியில் பீகார் தேர்தல் நடக்கப்போவதில்லை. கொரோனாவைக் காரணம்காட்டி இப்போதைய ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சியை அறிவித்துவிட்டு பின்பு வசதியான ஒரு தேதியில் பா.ஜ. தேர்தலை நடத்தும். எத்தனை நாளைக்கு கூட்டணிக் கட்சியாகவே தொடர பா.ஜ. விரும்பும் என ஒரு அரசியல் யூகம் ஓடிக்கொண்டிருக்கிறது.
2010 தேர்தலில் 91 சீட்டுகளும், 2015 தேர்தலில் 53 சீட்டுகளும் வென்று மத்தியில் ஆட்சியிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பீகாரை வசப்படுத்த இதுதான் சரியான நேரம் என்றொரு யூகம் பீகாரில் எதிரொலிக்கிறது. அப்படி நடக்க வாய்ப்பில்லை எனும் யூகங்களும் பலமாக ஒலிக்கிறது.
பத்தாண்டு ஆட்சியில் ஆளுங்கட்சியின்மேல் எதிர்ப்புக் குவிந்திருக்கும் நேரத்தில் ஜனதா தளமும், பா.ஜ.க.வும் தனித்தனியாகப் போட்டியிடுவதென்பது ராஷ்ட்ரிய ஜனதாதளத்திடம் தாம்பாளத்தில் வைத்து வெற்றியை ஒப்படைப்பதாகவே அர்த்தம். தேர்தல் தேதியே நிச்சயமாகாத நிலையில், பீகாரில் யார் வெல்வார் என இப்போதே கணிப்பது ஆகாத விஷயம் என பலரும் நழுவுகிறார்கள். பீகாரில் அணிவகுக்கும் கட்சிகளைப் பார்த்தால்… நமக்கு தலைசுற்றிவிடும். பிரதான கட்சிகள் என்னவோ ஆறேழுதான். ஆனால் குட்டிக் குட்டியாய் தனக்கென கொஞ்சம் ஆதரவு வாக்காளர்களை வைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் ராஜ்ஜியம் நடத்தும் கட்சிகள் ஏராளம். இவற்றை இரண்டு தரப்புமே புறக்கணிக்கமுடியாது. பணமாகவோ… தேர்தல் சீட்டுகளாகவோ… பேரம் பேசி தமது தரப்பில் வைத்துக்கொள்வது வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும்.
பிரதான கூட்டணி என்று பார்த்தால் ஒருங்கிணைந்த ஜனதா தளம், பாரதிய ஜனதா. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் இதற்குப் பின்னால் உதிரிக் கட்சிகள் தேர்தல் சூழலை யொட்டி அணிவகுக்கும்.
முதலில் ஆளுங்கட்சியைப் பார்க்கலாம். நிதிஷுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் உரசல் அதிரிகரித்துக்கொண்டே வருகிறது. வெறுமனே கூட்டணிக் கட்சியாய் தொடர்வதைக் காட்டிலும் பீகாரில் ஆட்சியைப் பிடிக்கும் கனவு பா.ஜ.க.வுக்கு அதிகரித்தபடியே வருகிறது. எவ்வளவு நாளைக்குதான் துணை முதல்வர் பொறுப்பிலேயே தொடர்வது. தன் தலைமையில் கூட்டணி அமைந்து, கூட்டணிக் கட்சிகளுக்கு துணைமுதல்வர் பொறுப்பையோ, அமைச்சர் பதவியையோ காணிக்கையாகக் கொடுக்கும் நிலைக்கு வரவிரும்புகிறது.
கூட்டணியில் இருந்துகொண்டே தொடர்ந்து தன்னை விமர்சிக்கும் பா.ஜ.க.வுக்கு உரிய பாடம்புகட்ட நிதிஷ்குமாருக்கு ஆசையிருக்கிறது. ஆனால் சந்தர்ப்பம்தான் சரிவர அமைய மறுக்கிறது. இருதரப்பும் முதுகுக்குப் பின்னால் உருவிய வாளை மறைத்தபடி கைகுலுக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆளுங்கட்சியில் இருந்து ஷ்யாம் ராஜக் என்ற அமைச்சரும், ஜாவேத் இக்பால் என்னும் முக்கியப் பிரமுகரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்குத் தாவியிருப்பது நிதிஷை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. 2015 தேர்தலில் தன் கட்சியிலிருந்து வெளியேறி ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவைத் தொடங்கிய ஜித்தன் ராம் மஞ்சியை அரவணைக்கத் தொடங்கியிருக்கிறார்.
பாரதிய ஜனதாவிலிருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்கா, முன்னாள் எம்.பி. பப்பு யாதவுடன் இணைந்து சிறு சிறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு நிதிஷ்குமாருக்கும், பா.ஜ.க. வுக்கும் எதிரான பிரச்சாரங்களை வலுப்படுத்துவது ஆளும்கூட்டணிக்குச் சேதாரம் விளைவிக்கக்கூடும். இந்தியக் கட்சிகளுக்கு வெற்றிவியூகம் வகுத்துத் தரும் பிரசாந்த் கிஷோரை, ஆர்.ஜே.டி. கூட்டணி சந்தித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டும் சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.எம்.எல். என மூன்று பிரிவுகள் உள்ளன. இவை எந்தக் கூட்டணியில் பங்கேற்கப்போகின்றன என்பது இப்போதைக்கு முடிவாகவில்லை. எனினும் சி.பி.ஐ.யில் உள்ள கன்னையாகுமாரின் பிரச்சாரம் ஆளும் கூட்டணிக்குப் பாதகமாக அமையுமென ஊகிக்கலாம்.
ஆரம்பகட்ட சர்வே ஒன்று இம்முறையும் நிதிஷ் தலைமையிலான கூட்டணியே ஜெயிக்கும் என்கிறது. ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவுவதென்னவோ வாஸ்தவம்தான். லாலுபிரசாத் சிறையிலிருக்கிறார். நிறைய வாக்காளர்கள் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராகக் கருதவில்லை. தேஜஸ்விக்கும் அவரது சகோதரருக்குமான சண்டை, தேஜஸ்விக்கும் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து மனு தாக்க லாகிவிட்டது என நிறைய காரணங்களைச் சொல் கிறார்கள். தேர்தலில் தேஜஸ்வியை எதிர்த்து ஐஸ்வர்யா,நின்றால் அது ஊடகங்களுக்குத் தீனிதான். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
சமீபத்தில் பிரதமர் மோடி மயில், வாத்துக்களு டன் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆயின. ஜனதா தளத்திலிருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு வந்த அமைச்சர் ஷ்யாம், ""இரண்டு வருடத்துக்கு முன்னாள் லாலு வீட்டில் மயில் கொண்டுவரப்பட்டபோது அழிவின் விளிம்பிலிருக்கும் மயிலை வீட்டில் வளர்ப்பதா என பா.ஜனதா கூச்சல்போட்டதே...… இப்போது பிரதமரே அதே தவறைச் செய்திருக்கிறாரே… அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா''’என கேள்வியெழுப்பி மூக்குடைத்திருக்கிறார்.
தேஜஸ்விக்கு இது வாழ்வா- சாவா போராட்டம். கட்சி, முதல்வர் பதவியைக் கைப்பற்றி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆயுதங்களை யெல்லாம் எடுத்து கூர்தீட்டிக்கொண்டிருக்கிறது ஆர்.ஜே.டி.கட்சி.
பார்க்கலாம் யார் வெல்கிறார் என்று…
-க.சுப்பிரமணியன்