68 தொகுதிகள் கொண்ட இமாச்சலப் பிரேதசத்துக்கு நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களாகவே இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் இது காங்கிரஸின் முறை. சாதிக்குமா காங்கிரஸ்?

f

2017 தேர்தலில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் போட்டியிட,… நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என ஆம் ஆத்மி சில தொகுதிகளில் போட்டி யிட்டது. இதில் பா.ஜ.க. 2012 தேர்தலைவிட 18 தொகுதிகள் அதிகமாக 44 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 2012 தேர்தலைவிட 15 இடங்கள் குறைவாக 21 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியைப் பறிகொடுத்தது.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின் பா.ஜ.க.வும் காங்கிரஸும் மீண்டும் களம்காண் கின்றன. பஞ்சாப் தேர்தல் வெற்றிகொடுத்த உத்வேகத்தால் இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட ஆயத்தமாகியுள்ளது ஆம் ஆத்மி. கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற சி.பி.ஐ.(எம்), கடந்த முறை போட்டியிட்ட பதிமூன்று தொகுதிகளிலும் இம்முறையும் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?

2017 தேர்தலில், பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வரான பிரேம்குமார் தூவலை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியது. மற்றவர்கள் அனைவரும் ஜெயித்துக் கரையேற, தூவல், தான் நின்ற தொகுதியில் தோல்வியடைந்தார். இதனால் அவரைக் கைகழுவிவிட்டு ஜெய்ராம் தாக்கூரை முதல்வராக நியமித்தது பா.ஜ.க.

இந்தமுறை தூவலுக்கு ஏற்கெனவே 78 வயதாவதால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் தூவலின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். சிலர், தூவலின் மகன் அனுராக் தாக்கூரை இமாச்ச லின் முதல்வராக்கும் பா.ஜ.க. என கிசுகிசுக்கிறார்கள். அதில் நம்பிக்கையில்லாத பலர், கட்சிக் கட்டுப் பாட்டையும் மீறி பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸிலிருந்து வலைவீசிப் பிடித்த வேட்பாளர்களுக்காக கொடுக்கப்பட்ட இடங் களாலும், பா.ஜ.க.வில் செயல்பாடு சரியில்லாத வேட்பாளர்களுக்கு மறுக்கப் பட்ட இடங்களாலும் பல முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு நோ சொல்லியிருக்கிறது பா.ஜ.க. இவர்களில் பலர் பா.ஜ.க.வுக்கு பள்ளம் வெட்டும் வேலையில் மும்முரமாயிருக்கிறார்கள்.

தவிரவும், ஆப்பிளுக்குப் பேர்போன இமாச்சலில், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, ஆப்பிளை அடுக்கும் பெட்டிக்கு ஜி.எஸ்.டி. என ஆப்பிள் விவசாயம் கட்டுப்படி யாகாமல் போனதால் உள்ளூர் விவசாயிகள் ஆளும்கட்சி மேல் கடுப்பில்d இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, ஆளும்கட்சியின் ஊழல் போன்ற விவகாரங்களும் பா.ஜ.க.வின் வெற்றிவாய்ப்பை நந்தியாக மறித்துக்கொண்டி ருக்கின்றன.

மிஷன் ரிப்பீட் -அதாவது, கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் நிகழ்த்திக்காட்டுவது. இதுதான் பா.ஜ.க.வின் திட்டம். அதற்கேற்ப பா.ஜ.க. பெருந்தலைகளை இமாச்சலபிரதேச தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆயத்தமாக்கிவருகிறது கட்சித் தலைமை. காங்கிரஸின் வீர்பத்ர சிங் மறைந்த நிலையில், பெரிய உள்ளூர் தலைகள் இல்லாதது பா.ஜ.க.வை குஷிப்படுத்தியிருக்கிறது. தவிரவும், பா.ஜ.க. ஆதரவு கருத்துக் கணிப்பு ஊடகங்கள் பா.ஜ.க.வுக்கே முன்னணி என்ற கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து வெளியிட ஆரம்பித்துவிட்டன.

இந்த முறை ஆட்சிக் கட்டில் தங்களது முறை என்ற நம்பிக்கை, பா.ஜ.க.வுக்குள் நிலவும் அதிருப்தி யாளர்களின் உள்ளடி வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதி, ராகுலின் நடைபயணம் அளிக்கும் புத்துணர்ச்சி, ஐந்து வருட காத்திருப்பு அளித்த பதவிக்கான தாகத்தோடு தேர்தலை அணுகுகிறது காங்கிரஸ்.

யார் முதல்வர் வேட்பாளர் என்று அறுதியிட்டுச் சொல்லப்படாததால் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரான சுக்விந்தர் சிங் சுக், முகேஷ் அக்னிகோத்ரி, தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் ஆகிய மூவருக்கும் முதல்வர் கனவு இருக்கிறது.

தவிரவும், ஆட்சிக் கனவில் இமாச்சலில் இறங்கும் ஆம் ஆத்மி அனைத்துத் தொகுதிகளி லும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலிலேயே 1000 முதல் 1500 வாக்கு வித்தியாசத்தில் 15 தொகுதிகள் வரை பறிகொடுத்த காங்கிரஸ், இந்த முறை தங்கள் வெற்றிவாய்ப்பில் எத்தனைக்கு ஆம் ஆத்மி வேட்டு வைக்கப்போகிறதோ என உள்ளூரக் கலக்கத்தில் இருக்கிறது.

கல்வி, சுகாதாரம் தொடர் பான மாநிலத்தின் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் கலக்கி வருகிறது ஆம் ஆத்மி. ஆனால் பஞ்சாப் வாக்காளர்களைப் போல் இமாச்சல் வாக்காளர்கள் தாராள மாக இருப்பார்களா என இப்போது சொல்லமுடியவில்லை. ஆம் ஆத்மி யின் வேட்பாளர் பட்டியலில் செல்வாக்குடைய முகங்கள் தட்டுப்படவில்லை யென்று தேர்தல் கணிப்பாளர்கள் உதட்டைப் பிதுக்குகிறார்கள். கட்சியின் செய்தித் தொடர் பாளரான கவுரவ் சர்மா, தனக்கு சீட்டுக் கிடைக்காத வருத்தத்தில் கட்சியைவிட்டு விலகியிருப்பது பின்னடைவாகும்.

"காங்கிரஸுக்கு 30 வருடம், பா.ஜ.க.வுக்கு 17 வருடம் வாய்ப்பளித்தீர்கள். எனக்கு ஐந்தே ஐந்து வருடம் வாய்ப்பளியுங்கள்''’என பிரச்சாரம் செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். வாக்காளர்கள் மனதில் என்ன வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நவம்பர் குளிரையும் மீறி, தேர்தல் கதகதப்பு நிலவும் இமாச்சலில், ஆளும் கட்சியே ஓரடி முன் னால் நிற்கிறது என்பதே தற்போதைய நிலவரம்!

-க.சுப்பிரமணியன்