விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கக் கட்டடம் 2007ல் கட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் களிடம் வசூலித்தும், வி.ஐ.பி.க் களிடம் நன்கொடைகள் பெற்றும் கட்டப்பட்ட இச்சங்கக் கட்டடத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திலிருந்து 1984ல் பிரிந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டது. சங்கத்தின் பதிவு எண் 237/1985. சி.ஐ.டி.யு. மற்றும் சி.பி.எம். அரசியல் சார்ந்து இயங்கிவரும் இச்சங்கத்திற்கு சென்னை பார்த்தசாரதி கோவில் அருகே பல கோடிகள் மதிப்புள்ள மாநில சங்கக் கட்டடம் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாநில சங்கக் கட்டடத்தை 2002ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சமரசம் என்பதே இல்லாமல் ஊழியர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பாக மாநில நிர்வாகிகளால் வழிநடத்தப்பட்டது இச் சங்கம். ஆனால், பொதுச் செயலாளர் அன்பரசு பொறுப்பேற்றதும் போராட்ட குணத்திலிருந்து விலகிச் சென்றது. இதனை விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்ந்து அம்பலப் படுத்தினர். இம்மாவட்டத்தோடு மேலும் சில மாவட்டங்களும் கைகோர்த்தன.
இந்நிலையில், 2021ல் விருதுநகர் மாவட்ட மையத்தை மாநில மையம் கலைத்தது. இதை எதிர்த்து ச.இ.கண்ண னின் வழிகாட்டுதல் மூலம் நீதிமன்றம் சென்று, மாவட்ட மையத்தைக் கலைத்த தற்கு தடையுத்தரவு பெறப்பட்டது. அதனால், 2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் மாநில மையத்தால் தலையிடமுடியவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அன்பரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தவர்கள் ஒன்றுசேர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பைப் புதிதாகத் துவங்கினர்.
இரண்டுக்கும் உள்ள பெயர் வேறுபாடு, ஊழியர் என்பதில் "கள்'’ சேர்த்து ஊழியர்கள் ஆனதுதான். மாநில பொறுப்பு வகித்துவந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிர மணி, சுப்பிரமணி, கண்ணன் போன்ற அனை வரும் தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்டனர்.
பொதுவாக ஒரு சங்கம் பதிவாகி பதிவு எண் பெற்று விட்டால், ஒவ்வொரு வருடமும் நான்கு முறை நிர்வாகிகள் கூட்டமும் ஒருமுறை மாநில பொதுக்குழு கூட்டமும் நடத்தி, வரவு-செலவு, உறுப்பினர் சேர்க்கை-நீக்கம் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனைச் சங்கப் பதிவு உள்ள மாவட்டத்தில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். பல வருடங்களாக இதைப் பண்ணவில்லை என்பதை மாநிலப் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் தாமதமாகவே அறிந்தனர். சரிபண்ண முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை. அதனால், விதிகளின்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கலைக்கப்பட்ட சங்கம் ஆனது.
இச்சங்கத்திற்கு சென்னையில் பலகோடி மதிப் புள்ள மாநில கட்டடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலகோடி மதிப்புள்ள காலிமனை எனப் பல மாவட்டங்களிலும் சொந்தக் கட்டிடங்கள் உள்ளன. மதுரை, சென்னை சில்க்ஸ் அருகே இரண்டு மாடிக் கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது.
இவ்வனைத்துச் சொத்துகளின் இன் றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.500 கோடி ஆகும். எனவே, இந்த விஷயத்தில் சி.பி.எம். கட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு, சங்கத்தின் பழைய பதிவு எண்ணைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இச்சங்கத்திற்கு மாநிலத் தலைவராக இருந்த கங்காதரன், ஓய்வுக்குப் பிறகு புரட்சிகர தமிழ்நாடு மார்க் சிஸ்ட் கட்சியில் இணைந்து, அதிருப்தியாளர்களை ஒருங் கிணைத்தார். இவருடைய வழி காட்டுதல்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஒவ்வொரு துறை வாரியாக தங்களது ஆதரவுச் சங்கத்தை உருவாக்கிக்கொண்டனர். ஆனாலும், சி.பி.எம். ஆதரவு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை இவர்களால் பின்னுக்குத் தள்ளமுடியவில்லை
விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம், சொத்து விதிகளின்படி மாநில பொதுச் செயலாளர் பெயரில் இருப்பதால், புதிய அமைப்பை உருவாக்கிய கண்ணன் அணியை சட்டப்படி வெளியேற்றாமல், 12-7-2025 அன்று சங்கக் கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனைத் தொடர்ந்து கண்ணன் அணியினரும் கூட்டமாக வந்தனர். இருதரப் பினரும் மோதிக்கொண்டார்கள். காவல்துறை யும் சங்கக் கட்டடத்துக்குள் நுழைந்து கைது நடவடிக்கை மேற்கொண்டது.
2007ல் இச்சங்கத்தினை விருதுநகர் முத்துராமலிங்கநகரில் தொடங்கியதும் அங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால், இலவசப் போட்டித் தேர்வு நடத்தினார்கள். அதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசுப் பணி கிடைத்தது. தற்போது, இரண்டு பிரிவுகளாக மோதிக் கொண்டு தரம் தாழ்ந்து தகாத வார்த்தைகளைப் பேசியதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்தச் சங்கம் நமது பகுதியில் ஏன் இருக்கவேண்டும்? என்று அப்பகுதியில் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே இணக்கமான சூழல் ஏற்படாததால், சட்டம் ஒழுங்கினைப் பராமரித்திடும் வண்ணம் சங்கக் கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் உரிமைக்காகப் போராட வேண்டிய சங்கத்தினர், பதவிக்காகவும் சங்கச் சொத்துக்காகவும் அடித்துகொள்வது வேதனையளிக்கிறது.
-அதிதேஜா