எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கைது, படகுகள் பறிமுதல், நடுக்கடலில் கடற்கொள்ளையர்களின் அடாவடி, உழைப்புக் கேற்ற மீன்கள் இல்லாமல் போவது என மீனவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். மறுபுறம் தங்களுக்குள் மீன் விற்பனை செய்வதில் பிரச்சனை, துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் பிரச்சனை, வலைகளைப் பயன்படுத்துவதில் பிரச்சனை, படகுகளை நிறுத்துவதில் பிரச்சனை என கோஷ்டிகளாகப் பிரிந்து மோதலில் ஈடுபடுவதும், வீடுகளையும் உடைமைகளையும் சேதப்படுத்திக் கொள்வதும் சமீபகாலமாக அதிகரித்தபடியே இருக்கிறது.
நாகை மாவட்டம் நாகூர் அருகேயுள்ள பட்டினச்சேரியில் பொதுவான மீன்பிடி துறைமுகம் இருக்கிறது, அங்கு மீன் விற்பனை செய்வதில் மேலப்பட்டினச்சேரி, கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கிடையே அவ்வப்போது பிரச்சனை இருந்துவருகிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி மேலப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு துறைமுகத்தில் உரிமையில்லை. இங்கு அவர்கள் மீன்விற்கக்கூடாது என கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் தடுத்துநிறுத்த, மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் கடலில் பிடித்து வந்த மீன்களை சாலையில் கொட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப்பேச்சு வார்த்தை நடந்து, இரண்டு பகுதி மீனவர்களுக்கும் இடையே உள்ள பிரச் சனைகள் பேசப்பட்டு, மேலபட்டினச்சேரி மீனவர்களுக்கும் துறை முகத்தில் சமஉரிமை உண்டு, மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு அவர்களுக்கும் சமஉரிமை வழங்கவேண்டும், மேலாண்மைக் குழுவினரின் கண்காணிப்போடு விற்பனை நடைபெறும் என்று பேசி முடிக்கப்பட்டது.
அதன்பிறகு இரு பகுதி மீனவர்களும் கடலுக்குச் சென்றுவந்த சூழலில்... திடீரென ஜூன் 18-ஆம் தேதி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மேலப்பட்டினச்சேரி மீனவர்களின் ஏழு படகுகளில் இருந்த இன்ஜின்களை மர்ம நபர்கள் வெட்டாற்றில் தூக்கி வீசியதோடு, பல படகுகளின் இன்ஜின்களில் சீனியை அள்ளிக்கொட்டி பெருத்த நஷ்டத்தை உண்டாக்கினர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பட்டினச்சேரி துறைமுகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிட்டார்.
கடந்த 5-ஆம் தேதி இரவு மேலப்பட்டினச் சேரி கிராம நிர்வாகிகள் இருவர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் நாகூர் வெட் டாற்றுப்பாலம் அருகே நாகை, காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் நாகூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அந்தசமயத்தில் கிராமத்தில் யாருமில்லாததை அறிந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மேலப்பட்டினச்சேரி பகுதிக்குள் நுழைந்து வீடுகள், பைக்குகள், உடைமைகளை சேதப்படுத்தினர். கையில் கொடூர ஆயுதங்களோடு 50 பேர்கொண்ட கும்பல் ரகளை யில் ஈடுபடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி ஒட்டுமொத்த மீனவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக் கியது. பிறகு இரண்டு மீனவப் பகுதிகளிலும் அதி விரைவுப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் நாகூர் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழப்பட்டினச்சேரியை சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். படகிலிருந்த மீன்பிடி வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மொத்தமும் எரிந்து சேதமானது.
போராட்டத்திலிருந்த மேலப்பட்டினச்சேரி மீனவர் இந்திராணி, லெட்சுமி, அஜித் ரவி கூறுகையில், "நாங்க அவங்க சொத்துல பங்கு கேட்கல, உழைச்சுத்தான் கால் வயித்து கஞ்சி குடிக்கிறோம். நாங்க சின்ன கிராமம் என்கிறதால் அடிச்சிக்கிட்டே யிருக்காங்க. நாங்களும் மீனவர்கள்தானே. இதுல சாதியா பிரிச்சுப் பேசுறாங்க. ஸ்கூலுக்குப் போகிற புள்ளைங்கள அடிக்கிறதும், கடைக்குப் போகிற ஆம்பளைங்கள அடிக்கிறதும் என்ன நியாயம்? மீன ஹார்பர்ல விற்க விடமாட்டேங்குறாங்க. போட்ல கட்டியிருந்த இஞ்சினைத் தூக்கி கடலில் வீசியிருக்காங்க. ஹார்பர் பொதுவானது, அவங்க மட்டும் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்?''” என்கிறார்கள் கலக்கத்துடன்.
எரிந்த படகைக் கண்டு கதறித் துடித்த கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் முருகன், பார்வதி, விஜயலெட்சுமியோ, "ஊர் ஒற்றுமைய குலைக் கிறாங்க, நாங்களும் மீனவர்கள்தான். இப்படி படகை எரிக்கிறது என்ன நியாயம், அவர்களை கைது செய்யணும்''’என்கிறார்கள்.
இரண்டு தரப்பு விவகாரங்களையும் தெரிந்த மீனவப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "இது மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் குடிப்படையில் குறைவு, கீழப்பட்டினச்சேரியில் அதிகம். காலம்கால மாக கீழப்பட்டினச்சேரி மீனவர் கிராமத்தின் கட்டுப் பாட்டில்தான் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் இருந்தனர். மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை கீழப்பட்டினச்சேரி மீனவர்களின் மூலமாகத்தான் விற்கும் நிலை. அதில் அதிக லாபம் கீழப்பட்டினச்சேரி மீனவ கிராமத்திற் குப் போனது. கடந்த ஆண்டு மத்தி மீன் விற்பனையில் கோடிக்கணக்கில் லாபமடைந் தனர். ஆனால் மேலப்பட்டி னச்சேரி மீனவர்களுக்கு சிறு தொகையைக் கொடுத் துள்ளனர். நாம பிடிச்சி வர்ற மீனை அவங்க விற்று கோடிக்கணக்குல சம்பாதிக்கிறாங்க, நாமே தனியா விற்பனை செய்து அந்த பணத்தை ஊர் நலனுக்கு வச்சிக்கலாம்னு முடிவெடுத்த மேலபட்டினச்சேரி மீனவர், தனியாக மீன் விற்பனை செய்ய ஆரம்பித்ததனால் வந்ததுதான் இந்தப் பிரச்சினை.
சாதாரணமாக பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சினையில் சேதப்படுத்திக்கொள்வது மிகுந்த வேதனையளிக்கிறது. மீனவர்களின் பலமே ஒற்றுமைதான். சிலரது சுயநலத்தால் அது சிதைகிறது''” என்கிறார்.