தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
பார்வையாளர்களாக கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற இவ்விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ்குமார், ஆம் ஆத்மியின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, கேரள தொழில், சட்டத்துறை அமைச்சர் ராஜீவ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜீ.எம். அக்பர் அலி, மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் மற்றும் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டனர்.
கேரள தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராஜீவ் தன்னுடைய பேச்சில், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை விரிவாக விளக்கினார்.
"இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வர்களில் சிலர் நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் மலையாளம் பேசுபவர்கள். இன்னும் சிலர் உருது, பெங்காலி, ஹிந்தி, மராத்தி பேசுபவர்கள். வேறுபட்ட உணவு உண்பவர்கள். வேறுபட்ட ஆடை அணிபவர் கள். வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட வர்கள். பல்வேறு மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள். இந்த மேடை இந்திய நாட்டை ஒத்திருக்கிறது.
கல்வி, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் குறித்த இந்த தலைப்பு மிக முக்கியமானது. நமது நாட்டின் அரசியல் சூழலில் முன்னேற்றம் வேண்டும். மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி மாநில அரசை பலவீனப்படுத்த முயல்கிறது.
ஆளுநரின் செயல்பாடுகள் சர்ச்சைக் குரியது. தமிழ்நாடு ஆளுநர் மட்டுமல்ல. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் நிய மிக்கப்பட்ட ஆளுநர் களின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச் சைக்குரியதாகவே உள்ளது.
ஒரு ஆளுநர் எப்படி மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை நிறுத்திவைக்க முடியும்? அரசியலமைப்புச் சட்டம், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களின் ஆளுநர்களுக்கு சிறப்பு அதிகாரம் எதையாவது கொடுத்திருக்கிறதா? ஆளுநர் யார்? ஆளுநரின் அதிகாரங்கள் என்ன? அவர் மாநிலத்தின் நிர்வாகியா என்ன? இவையெல்லாம் பழைய கேள்விகள்.
1949, மே 31-ல் அம்பேத்கர் சொன்னதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ‘இந்த வரைவுக் குழுவின் தீர்மானத்தின்படி ஆளுநருக்கு எந்தவிதமான செயல்பாடும் கிடையாது. புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநரின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது. அவை பெயரளவிலானவை. ஆளுநரின் நியமனம் அலங்காரத்துக்குரியது.’ நான் தமிழ்நாடு ஆளுநரை, கொஞ்சம் நேரமெடுத்துக்கொண்டு, ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியலமைப்புச் சட்டசபை நடத்திய விவாதத்தையும் அதன் முடிவையும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையில், அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை, ஆளுநராகிய நான் என்றோ… அல்லது இந்திய குடியரசுத் தலைவராகிய நான் என்றோ தொடங்கவில்லை. இந்திய மக்களாகிய நாம் என்றே தொடங்குகிறது. இந்திய மக்கள், தாங்கள் தேர்வுசெய்த பிரதிநிதிகளால் இந்த நாட்டை ஆள்கிறார்கள். இந்த நாடு பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தேர்வுசெய்திருக்கிறது.
சிலர் அரசியலமைப்பின் முன்னுரை கடவுள் நாமத்துடன் தொடங்கவேண்டும் என்றார்கள். அதற்கும் ஒரு விவாதம் நடந்தது. இந்த விவாதம் வாக்கெடுப்பால் முடிவுசெய்யப்பட்டது. அதில் கடவுள் தோற்கடிக்கப்பட்டார். அதில் 68 வாக்குகள் "வீ த பிப்பீள் ஆப் இந்தியா' என்பதற் கும் 41 வாக்குகள் "இன் தி நேம் ஆப் காட்' என்பதற்கும் விழுந்தது.
தமிழக மாணவர்களுக்கு நீட்டிலிருந்து விதிவிலக்கு வேண்டுமா… வேண்டாமா என்பதற்கு ஒரு சட்டத்தை நிறைவேற்றி அனுப்பும்போது, அதைத் தடுக்க ஆளுநர் யார்? அதை அனுப்பி வைப்பது மட்டுமே அவர் வேலை. அதன்மீது முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை.
சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது, அரசியலமைப்பின்படி ஆளுநருக்கு எந்த ஒரு தனிப்பட்ட பாத்திரமும் கிடையாது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதியும் தெளிவுபடுத்தினார்.
கல்வி- மாநிலத்தின் அதிகார வரம்பில் வருவது. சுதந்திர இந்தியாவிலும், சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவிலும்கூட அப்படித்தான். அவசர நிலை காலத்தின்போதுதான் அது இரண்டுக்கும் பொதுவான பிரிவில் வந்தது. ஆனால் மத்திய அரசு எதையாவது செயல்படுத்த முனைந்தால், மாநில அரசின் சம்மதம் இல்லாமல் செயல்படுத்த முடியாது. அதுதான் யதார்த்தம்.
ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டி ருக்கிறது? மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொள்கிறது. அவர்கள் ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க முயல் கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தேசிய மொழியென்று எதுவும் கிடையாது.
கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை இவையே நமது அரசியலமைப்பின் அடிப்படை. அதை யாரும் மாற்றமுடியாது. பாராளுமன்றத் துக்குக்கூட இதனை மாற்ற அதிகாரம் இல்லை. நாம் ஒன்றிணைந்து அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைப் பாதுகாக்க வேண்டும்'' என ஓங்கி ஒலித்தது அவரது குரல்.