ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக, தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களிலுள்ள மாவட்ட, ஒன்றிய, கிராம கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்களுக்கென 27002 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 78 மாவட்ட கவுன்சிலர், 755 ஒன்றியக்குழு கவுன்சிலர், 1577 ஊராட்சி மன்ற தலைவர், 12252 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்றது.
இரண்டாம்கட்ட தேர்தல் 9-ஆம் தேதி அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களில் நடந்தது.
ஆளும்கட்சி என்கிற கோதாவில் தி.மு.க. தேர்தலைச் சந்தித்தாலும் கூட்டணிக் கட்சியினரிடம் அரவணைப்பில்லை. இராணிப்பேட்டை மாவட்டத்தில் இடதுசாரிகளுடன் தி.மு.க. மா.செவும், அமைச்சருமான காந்தி பேச்சுவார்த்தை நடத்தியபோது, நெமிலி, திமிறி, வாலாஜா, ஆற்காடு ஒன்றியங்களில் தங்களுக்குள்ள பலத்தைக்கூறி அந்த ஒன்றியங்களில் சீட் கேட்ட தோழர்களிடம், உங்களுக்கெல்லாம் ஒருபலமுமில்ல, நாங்க தர்ற இடத்தில் நில்லுங்க. காங்கிரஸ் நிர்வாகிகளே நாங்க தர்றதை வாங்கிக்கிட்டு கையெழுத்து போட்டுட்டுப் போனாங்க, உங்களுக்கென்ன என கேட்டதால், கூட்டணியிலிருந்து சி.பி.எம். வெளியேறியது.
திமிறி, வாலாஜா, ஆற்காடு ஒன்றியங்களில் சில வார்டுகளில் மாவட்டம், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தி.மு.க.வுக்கு வி.சி.க., காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவும் குறைவாக இருப்பது, உட்கட்சியினரின் உள்ளடியால் ஆளும்கட்சிக்கு கவலை. அதேநேரத்தில் அ.தி.மு.க.வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சோர்ந்துபோயிருப்பதும், பா.ம.க., தே.மு.தி.க. தனித்து நிற்பதும், தி.மு.க. வேட்பாளர்களை தெம்பாக்கியுள்ளது. சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு ஒன்றியங்களில் தி.மு.க.வுக்கு பா.ம.க. வேட்பாளர்கள் கடும் சவாலாக உள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடவே பலரும் முன்வரவில்லை. கணியம்பாடி ஒன்றியத்தில் தே.மு.தி.க.விலிருந்து சிலஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த விஸ்வநாதன் கவுன்சிலர் சீட் தரவில்லையென அதிருப்தியில் இருந்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளன்று காலை 9 மணிக்கு அ.தி.மு.க.வில் இணைந்து 11 மணிக்கு ஒன்றிய கவுன்சிலர் சீட் தரப்பட்டு அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இப்படி ஆட்களை கெஞ்சிக் கூத்தாடி இழுத்துவந்து, சீட் தந்து நிறுத்தியுள்ளது அ.தி.மு.க.
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலில் நிற்க முன்வரவில்லை. இதனால் கூட்டணியிலுள்ள பா.ஜ.க., புரட்சி பாரதம் கட்சிக்கு சீட்களை தள்ளிவிட்டனர். நிர்வாகிகளே தேர்தலில் நிற்க முன்வரவில்லையென தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சேவூர்.ராமச்சந்திரன், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் பிரச்சாரத்துக்கு வந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.சிடம் முறையிட்டனர்.
ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு சில ஊராட்சிகளில் ஓட்டுக்கு இரண்டாயிரம் வரை தந்துள்ளார்கள் ஆளும்கட்சி வேட்பாளர்கள். புடவை, காமாட்சியம்மன் விளக்கு, கிரைண்டர், மிக்ஸியும் தந்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுபவர்கள் மட்டுமே செலவுசெய்தனர். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்களுக்கு போட்டியிடுபவர்கள் செலவு செய்யவில்லை.
பிரச்சாரத்தின்போதே ஒவ்வொரு கட்சியிலும் ஒன்றிய, மாவட்ட சேர்மன், துணை சேர்மன் யார் என்பதை முடிவுசெய்து அவர்களிடமிருந்து பணம் வாங்கி கவுன்சிலர் வேட்பாளருக்கு தருவார்கள். இதில் ஆளும்கட்சியான தி.மு.க.வில் சேர்மன் பதவிகளைக்கேட்டு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ, இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் காந்தி, திருப்பத்தூர் மா.செ. தேவராஜிடம் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார் என்றனர்.
அடித்துப்பிடித்து செலவு பண்ணி தேர்தலை எதிர்கொண்டு, திக்... திக்... மனதுடன் ரிசல்ட்டுக்காக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள் போட்டியிட்டவர்கள்.