தருமபுரி மாவட்டத்தில் வாழும் குரும்பர் இன மக்கள் படிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக பழங்குடியினர் என சான்றிதழ் பெறுவதில் ஆண்டாண்டுகாலமாக சிக்கல் நிலவிவருகிறது.
இந்த குரும்பர் இன மக்கள் ஆடு மேய்ப்பதையும், மலை, வனப் பகுதிகளில் கிடைக்கும் விறகு, கனிகள், மூலிகைகள், புல் போன்றவற்றை சேகரித்துப் பயன்படுத்து வதையும் தவிர வேறு வேலைவாய்ப்பை அறியாதவர்கள். காலத்தின் போக்கால் வாழ்வாதாரத்தை இழந்த இம்மக்கள் நிலம் வைத்திருப்பவர்களிடம் பண்ணையாட்களாக வேலைக்குச் சேர்ந்து தற்போது காலம்தள்ளி வருகின்றனர்.
படிப்பு வாசனையே அறியாத இம்மக்களில் ஒருசிலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். பிறகு பள்ளிகளில் சாதிச்சான்றிதழ் கேட்க ஆரம்பித்தனர். வட்டாட்சியர்களும் கோட்டாட்சியர்களும், குரும்பர் மக்களுக்கு பழங்குடியின (எஸ்.டி.) சான்றிதழ் வழங்கினர்.
கோட்டாட்சியர் விசாரணை, மானுடவியல் ஆய்வுகள், பல்வேறு வகையான ஆவணங்கள், நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 17-க்கும் மேற்பட்ட கோட்டாட்சியர்கள் 1300-க்கும் மேற்பட்டவர்களுக்கு எஸ்.டி. பழங்குடி சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதில் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் மத்திய- மாநில அரசுப் பணிகளில் உள்ள னர். ஆனால் சமீபகாலமாக இவர்களுக்கு பழங்குடியின சான்று தருவதில் கோட்டாட்சியர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் குரும்பர் இன மக்களில் எஸ்.டி. சாதி சான்றிதழ் கேட்டு நூற்றுக்கணக்கானோர் விண்ணப் பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஏறெடுத்துப்பார்க்காத சில கோட்டாட்சியர்கள் விசாரணை என்ற பெயரில் மனுவை ஆண்டுக்கணக்கில் கிடப்பில்போடுவதும் அலைக் கழிப்பதும் இம்மக்கள் படும் வேதனையாகும்.
அரசு சமூகநலத் துறையின் மூலம் 1984-ம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 1773-ல் பட்டியல் இனத்தில் 18-வது இடத்தில் குரும்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக மனுடவியல்துறையின் முதுநிலை விரிவுரையாளர் சுமதியும் 2008 அக்டோபர் 10-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு, குரும்பர்கள் பழங்குடி மக்கள்தான். எஸ்.டி.சான்றிதழ் பெற தகுதியுடையவர்கள்தான் என அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
முக்காரெட்டிப்பட்டி மாணவியான கீர்த்திகா, ""நான் தற்போது பி.எட்.படித்துவருகிறேன். தேர்வெழுதி தேர்ச்சிபெற்றாலும் யூனிவர்சிட்டிக்கு என்னுடைய சான்றிதழ் போகும்போது அச்சான்றிதழ் நிராகரிக்கப்படு மென்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்து தினமும் சாதிச்சான்றிதழ் கேட்பார்கள். நானும் என் அப்பாவும் சாதிச் சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியரிடம் சண்டை போட்டு திரும்புவதே எங்கள் வேலையாக உள்ளது.
பள்ளிப்பருவத்திலிருந்து நான் கல்வி ஊக்கத்தொகை பெற்றதே இல்லை, சாதிச் சான்றிதழ் இல்லாமல் அரசு கல்லூரியில் சேரமுடியவில்லை, தனியார் கல்லூரியில்தான் படித்துவந்தேன். இன்று அந்த படிப்பை வைத்து அரசுத் தேர்வு எழுத வேண்டுமென்றாலும் சாதிச் சான்றிதழ் வேண்டும். என் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. என்னுடைய பெரியப்பாவுக்கு எஸ்.டி. சான்றிதழ் இருக்கு. ஆனா எனக்கு கொடுக்க மறுக்குறாங்க'' என வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த சிவா, ""நான் சிறுவயசுல இருந்து நல்லா படிப்பேன். நல்ல மார்க் எடுத்ததால எனக்கு காலேஜ்ல மெரிட்ல சீட்கிடைச்சது. என்கிட்ட சாதிச் சான்றிதழ் கேட்கல. நான் எம்.எஸ்.சி. பி.எட். படிச்சிருக்கேன். சாதிச் சான்றிதழ் கிடைக்காததுனால ஆடு மேய்ச்சு குடும்பம் நடத்துறேன். என் கூடப்பிறந்த அண்ணனுக்கு எஸ்.டி. சான்றிதழ் இருக்கு. எனக்கு அதிகாரிங்க கொடுக்கமாட்டேங்குறாங்க'' என பரிதாபமாகக் கூறினார்.
இரத்த சொந்தத்தின் சான்றிதழை ஆதாரமாகக் கொடுத்தால்கூட சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர்கள் மறுத்து வருகின்றனர். ஒருசிலர் நீதிமன்றத்துக்கு சென்று வழக்காடி வெற்றிபெற்று சான்றிதழ் பெறுகின்றனர். வறுமையில் வாடும் இங்குள்ள பெரும்பகுதி மக்கள் பொருளாதாரம் கருதி நீதிமன்றத்துக்குச் செல்வதில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலகுழு உறுப்பினரும், பாப்பிரெட்டிபட்டி அரூர், குரும்பர் பழங்குடி மக்கள் சங்க மாவட்ட தலைவருமான சொக்கலிங்கம் கூறுகையில், ""தருமபுரி மாவட்டத்தில் கணிசமான கிராமங்களில் குரும்பர் இனமக்கள் உள்ளனர். வறுமையிலுள்ள மக்கள் படிப்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டுள்ளனர். படித்து முடித்த சில இளைஞர்கள் எஸ்.டி. சாதிச்சான்று இல்லாததால் மீண்டும் ஆடுமேய்க்கச் செல்லும் அவலநிலை உள்ளது .குரும்பர்கள் பழங்குடியினர்தான் என அரசாணையிருந்தும், மானுடவியல் வல்லுனர்கள் அறிக்கையில் குரும்பர்கள் பழங்குடியினர் என குறிப்பிட்டிருந்தும், மாநிலகூர்நோக்கு குழுவில் குரும்பர்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கலாமென குறிப்பிட்டிருந்தும் யதார்த்தத்தில் இதற்கெதிரான சூழலே நிலவுகிறது. பழங்குடிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தோருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டவிரோதமாகும்.சான்றிதழ் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்'' என்றார்.
இதுதொடர்பாக சப்-கலெக்டர் பிரதாப்பிடம் கேட்டபோது, ""குரும்பர்களுக்கு பி.சி. சான்றிதழ் கொடுக் கிறோம். எஸ்.டி. சான்றிதழ் தருவதில் சிக்கலிருப்பதால் நீதிமன்றம் சென்று பெற்றுக்கொள்ளவேண்டியதுதான்'' என்றார் ரொம்பவும் சாதாரணமாக.
குரும்பர்களின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னும் எத்தனை காலம் நீடிக்குமோ!
-அ.அருண்பாண்டியன்