மிழக சட்டமன்றத்தின் நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பா.ஜ.க. வானதி சீனிவாசன்.

"முதன்முறையாக சபைக்கு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அதனாலேயே சபையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிப்பது இயல்பாக மாறிப்போனது எனக்கு.

இந்து அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் தமிழகம் முழுவதும் நிறைய கோவில்களுக்கும் கோவில் சார்ந்த கல்விக்கூடங்களுக்கும் நேரடியாக சென்று வந்தது பற்றி அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு தனது பதிலுரையில் வெளிப்படுத்தினார். இதனை பா.ஜ.க. சார்பில் வரவேற்றேன்.

assembly

Advertisment

அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, புதிய பணியாளர்களை கோவில்களில் நியமித்திருப்பதாகச் சொன்னார். ஆனால், கோவில்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிற பாரம்பரியமிக்க பணியாளர்களை வயதை காரணம் காட்டி மறுதலிக் காமல், அவர்களையும் உள்ளடக்கிய பணி நியமனங்களை செய் தால்தான் இறை பணி யில் ஈடுபட்டிருப் பவர்களுக்கு மனவருத்தமிருக்காது. அதை இந்த அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.

அதேபோல, தொல்லியியல் துறையின் மானியக் கோரிக்கை யில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சில், தமிழ் மொழியின் மீது தனக்கிருக்கும் ஆர்வம், மொழியின் வளர்ச்சியில் இருக்கிற அக்கறை ஆகியவை அதிகம் தெறித்தன. "தொல்லி யல் சார்ந்த பட்டயப் படிப்புகள் கொண்டுவரப்படும்' என்று சொன்னது தொல்லியல் சார்ந்த தமிழாய்வில் மாணவர் களை உட்புகுத்த வேண்டும் என்ற தொலைதூர சிந்தனை அவருக்கு இருப்பதை உணர முடிந்தது. ஆனால், நம்முடைய வரலாற்று இடங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதிகள் அந்த இடங்களில் இருப்பதில்லை. இதனை துறையின் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது துறை சார்ந்த மானியக் கோரிக்கையில் பேசியபோது, கொரோனா நெருக்கடி காலத்தில் முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளையும், அதனை தி.மு.க. ஆட்சியில் எப்படி சரி செய்திருக்கிறோம் என்பதையும் தனக்கேயுரிய பாணியில் விவரித்தார். தடையின்றி, பிசிறு தட்டாமல் அவராற்றிய உரை சிறப்பு. கொரோனா நெருக்கடியில் தமிழகம் முழுவதும் சென்று அவர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவைதான்.

Advertisment

assembly

மாவட்ட மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவதற்கு காரணம், சாதாரண நோய்கள் தாக்கிய நோயாளிகள் அதிகளவில் திரள்வதுதான். சாதாரண நோய்களுக்கான சிகிச்சைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வலிமையாக இருந்தால் மாவட்ட மருத்துவமனையை நோக்கி மக்கள் வருவது தடுக்கப்படும். அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்புக்கு அதிக கூடுதல் நிதி ஒதுக்குவதுதான் ஆரோக்கியமானது. அதுமட்டு மல்லாமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதிலும், புதிய நியமனங்களிலும் தொய்வு இருப்பதாக எனக்குத் தெரிகிறது. அதேசமயம், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவையில் இல்லை. இருந்திருந்தால் மா.சுப்பிரமணியன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைத்திருக்கும். அப்போது சபை இன்னும் கூடுதல் விவாதங்களை எதிர்கொண்டிருக்கும். நீட் தேர்வு குறித்த விவாதங்கள் சூடாக இருந்தன. யார் கொண்டுவந்தார்கள் என்பதில் தொடங்கி பல கருத்துகள் எதிரொலித்தன.

வீட்டுவசதித் துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறை ஆகியவை குறித்துப் பேசிய அமைச்சர்கள் முத்துச்சாமி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அமைச்சரவையில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால் சபையில் அவர்களின் பேச்சும், துறை சார்ந்த அறிவிப்புகளும் ஆட்சிக்கு நல்லபெயரை கொடுத்திருப்பதாக உணர்கிறேன்.

அதேபோல முதல்முறை உறுப்பினர்கள் பலரும் பேசும்போது, தங்களின் உரையை கன்னிப் பேச்சு என்று சொன்னார்கள். கன்னிப் பேச்சு என சொல்வதை தவிர்த்து, முதல் உரை அல்லது அறிமுக உரை என்று சொல்லலாம் என ஏற்கனவே இந்த சபையில் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் சொன்னதன் பொருளை புதியவர்கள் உணர்ந்துகொள்ளவில்லையோ என்று எனக்குத் தோன்றியது.

கடந்த 3 நாட்களில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை செய்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளையொட்டி 14 அறிவிப்புகள், வன்னியர் சமூகத்திற்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணி மண்டபம் மற்றும் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் முக்கியமானவை.

vv

இடஒதுக்கீடு தியாகிகளுக்கான மணி மண்டப அறிவிப்பின் மீது நான் பேசும் போது, சமூகநீதிக்கும் பா.ஜ.க.வுக்குமான உறவுகளைச் சுட்டிக் காட்டிவிட்டு, சமூகநீதியின் வரலாற்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை பிரதமராக அமரவைத்து அழகுப் பார்ப்பது பா.ஜ.க. கட்சி என பதிவு செய்தேன். வ.உ.சி. பிறந்தநாளில் 14 அறிவிப்புகளை முதல்வர் அறிவித்திருந்தாலும், வ.உ.சி.யின் ஆத்ம நண்பரான பாரதியார் மறைந்து நூறாண்டுகள் ஆகிறது. பாரதியாரை பற்றி அவரது நினைவு நூற்றாண்டில் எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல, வ.உ.சி. சென்னை பெரம்பூரில் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அறிவிப்பு செய்யவில்லை. இந்த இரண்டையும் குறைகளாகப் பார்க்கிறேன்.

மானியக் கோரிக்கைகளில் பேசிய கூடலூர் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. ஜெயசீலனின் பேச்சு அற்புதமாக இருந்தது. மலைவாழ் மக்களின் துயரங்களையும், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தெளிவாக முன்வைத்தார். கூடலூர் என்பது புவியியல் ரீதியாக சுற்றுச்சூழல் நிரம்பிய பகுதி என்பதால், விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்; மனிதர்களின் வாழ்விடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் எச்சரிகையாக செயல்பட வேண்டியதிருக்கிறது. அதேபோல, மின்சார வசதியில்லாமல் இப்போதும் ஆயிரக்கணக்கில் மக்கள் இருப்பதையும் விவரித்தார் அவர்.

vv

பேரவையின் அலுவல் முடிந்து வெளியே வந்தபோது ஜெயசீலனிடம், மலைவாழ்விடங் களில் எல்லா இடத்திற்கும் கம்பிவழித் தடத்தில் மின்சாரம் கொண்டு செல்வது சாத்திய மில்லை. அதனால், மின்சாரம் தேவைப்படுகிற இடத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தைப் போல சோலார் மின் சாரத்தை உருவாக்கும் திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்துங்கள் என சொன்னேன்.

அதேபோல, கனிமவளத்துறை குறித்து பேசிய அவை முன்னவரும் துறையின் அமைச்சருமான துரைமுருகன், அவரது துறை நட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்திவிட்டு, கனிமவளங்கள் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வகையில் அந்த துறையை லாபமுள்ளதாக உருவாக்கி யுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் தி.மு.க. அரசு யோசிக்க வேண்டும். ஒரு கொள்கை அளவில் அதனை முறைப்படுத்தி இடைத் தரகர்கள் இல்லாமல் அரசுக்கு நேரடியாக வருவாய் வரும்வகையில் கனிமவளத்தை பயன்படுத்த அரசாங்கம் யோசிக்கவேண்டும்.

துரைமுருகனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனாலேயே சபையை லாவகமாக அவர் கையாளும் முறையை பலமுறை ரசித்திருக்கிறேன். அவருடைய சட்டமன்ற அனு பவமும், இயல்பும் அவருக்கு கைகொடுக்கிறது. இதனால், பல நேரங்களில் சபை கலகலப்பாக இருக்கிறது.

திருவக்கரை பகுதியில் கனிமவள புவியியல் பூங்கா அமைக்கப்படும்னு சொல்லியிருக்கீங்க. அந்த பகுதி, சோழர் காலத்திலேயே, இறைவன் திருமேனிக்கு கல் எடுத்த இடம் அது. அந்தளவுக்கு அப்பகுதியின் கல் சிறந்தவை. அதனால் அங்கு கல்குவாரி வைத்து வீணாக்கிடாமல், மாமல்லபுரத்து சிற்பிகளுக்கு அந்த கல்லை கொடுத்து உதவலாம் என்றேன்.

அப்போது பேசிய துரைமுருகன், "என் துறையை பற்றி யாருமே கேள்வி கேட்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதனை வானதி சீனிவாசன் போக்கிவிட்டார். வானதி, எங்க ஊரு மாட்டுப்பெண் அல்லவா! அதான் என் துறையில் கேள்வி கேட்டிருக்கிறார்' என்றார் நகைச்சுவவையாக. வேலூர் மாவட்ட மருமகள் நான் என்பதால் துரைமுருகன் அப்படி கமெண்ட் பண்ணியதை சபையே ரசித்தது. அதேபோல, சபை உறுப்பினர்கள் பேசும் விசயங்களில் ஆக்கப்பூர்வ மாக இருப்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்புகள் எடுத்துக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.

aa

சபையை கண்ணியமாகவும் ஆரோக்கிய மாகவும் அதேசமயம் கலகலப்பாகவும் கொண்டு செல்வதில் சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி இருவரும் சாமர்த்திய சாலிகளாக இருக்கிறார்கள். ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தபோது, எங்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந் திரன் எழுந்து பேச முற்பட்டபோது, "இது அவங்க பிரச்சனைதானே! உங்க பிரச்சினை இல்லையே' என சபாநாயகர் கமெண்ட் பண்ண நயினார் நாகேந்திரனே சிரித்துவிட்டார்.

சபையை ஜனநாயகரீதியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தி.மு.க. அரசு, சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவோம் என சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியையும் அக்கறையையும் காட்டாதது துரதிர்ஷ்டம்தான். அதனாலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் வாதங்கள், பேசும் பேச்சுகள் எதுவுமே மக்களுக்கு தெரிவதில்லை. எங்களுடைய பேச்சுகளுக்கு பதில் சொல்லும் அமைச்சர்களின் விளக்கத்தை மட்டும் எடிட் செய்து செய்தி சேனல்களுக்கு கொடுத்து விடு கிறார்கள். எங்களின் சட்டமன்ற செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் பேசுவதற்குத்தான் அதிக நேரம் ஒதுக்குவதாக சொல்கிற முதல்வர், எங்களின் பேச்சும் மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் பேசும்போது 5 அமைச்சர்கள் குறுக்கிடுகிறார்கள். இதனால் எனக்கான நேரம் முடிந்துவிட்டது எனச் சொல்கிறார் சபாநாயகர். எனது நேரத்தை அமைச்சர்கள் எடுத்துக் கொண் டனர் என சொன்னதும், அ.தி.மு.க. ஆட்சியிலும் இப்படித்தான் நடந்தது என்றார் ஒரு அமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது இனி நடக்கக் கூடாது என்பதற்காகத்தானே மக்கள் தி.மு.க.வை தேர்ந்தெடுத்தனர்? அப்போ, தி.மு.க.வும் அப்படியே நடந்துகொண்டால் எப்படி?

சபை நடந்துகொண்டிருக்கும்போதே கேண்டீனுக்கு உறுப்பினர்கள் சென்று வருவது வழக்கம். நானும் சென்று வருவேன். கேண்டீனில் கட்சி வித்தியாசம் பாராமல் எல்லோருமே சகஜமாக பழகுகின்றனர். தி.மு.க. உறுப்பினர்கள் பலர், என்னிடம் வந்து, மேடம் உங்கள் பேச்சு சூப்பராக இருந்தது என பாராட்டுகின்றனர். சபையில் நான் பேசி முடித்ததும், தி.மு.க. பக்கத்திலிருந்து அமைச்சர்கள் பலர் நன்றாக பேசியதாக சைகை செய்ததுண்டு.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலம் திரும்ப கிடைக்க வேண்டுமாயின் தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென நான் பேசி யிருந்தேன். அதற்கு சில எம்.எல்.ஏ.க்கள். பொது தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சமூகமல்லாத நீங்கள், பஞ்சமி நிலம் குறித்து ஆதரவு தெரிவித்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது மேடம் என்று பாராட்டியபோது உண்மையிலேயே மெய்ச்சிலிர்த்துப் போனேன்.

அனைத்து துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் என நிறைய அறிவிக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், அவைக ளெல்லாம் நடைமுறைப்படுத்த எவ்வளவு வேகம் காட்டுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள். பொறுத்திருந்து பார்ப்போம்!