40 ஆண்டு காலத்துக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சியிலும், வன்னியர் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், தற்போது வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரிடம் நமது நக்கீரனுக்காக எடுத்த நேர்காணல்...
பாட்டாளி மக்கள் கட்சியில் சீனியராக இருந்த நீங்கள் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் துவங்க காரணம் என்ன..?
என் 18 வயதில் வன்னிய சங்கத்தின் "கனல்' பத்திரிக்கையில், டாக்டர் ராமதாஸ் அய்யாவின் "ஊருக்கு 25 பேர் தாருங்கள். தமிழக அரசியலையே நான் மாற்றிக்காட்டுகிறேன்' என்ற கட்டுரையும், இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மத்தியில் 2% மாநிலத்தில் 20% என்ற முழக்கமும் என்னை வன்னியர் சங்கத்தில் இணைத்தது. 41 வருடங்கள் பாடுபட்டுள் ளேன். தற்போதுள்ள சூழ்நிலையில் ஐயாவின் பேச்சுக்கு மதிப்பில்லாததாலும், எனக்கும் அன்புமணிக் கும் ஏற்பட்ட மோதலாலும், என் சமூகத்திற்கு அங்கிருந்து பணியாற்ற முடியாத சூழலாலும் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் உதயமாகியுள்ளது.
அன்புமணிக்கும் உங்களுக்கும் நடந்த மோதல் என்ன..?
1997, 98-ஆம் ஆண்டு நான் பா.ம.க. திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, திருவள்ளூரை அடுத்த மணவாளன் நகரில் இந்துஸ்தான் கம்பெனி இயங்கிவந்தது. அந்த கம்பெனியில் பாட்டாளி தொழிற் சங்கத்திற்கு கொடியேற்ற தீவிர எதிர்ப்புகள் இருந்தது. என் தலைமையில் பாட்டாளி தொழிற்சங்க கொடியை ஏற்ற முயன்றோம். அன்புமணிக்கு அப்போது வேறு டீல் இருந்ததால் அவரே மாருதி 800 காரை தனியாக ஓட்டிவந்து, கொடியேற்றுவதைத் தடுத்தார். மறுநாள் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அந்த கம்பெனி முற்றுகைப் போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றோம். பின்னர் பாட்டாளி தொழிற்சங்க கொடியை ஏற்றினோம். அப்போ திருந்தே அன்புமணிக்கும் எனக்கும் பனிப்போர் துவங்கியது.
அன்புமணிக்கும் உங்களுக்கும் நேரடி மோதல் எப்போது ஏற்பட்டது?
எனக்கும் அன்புமணிக்கும் பலமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், 2014 தேர்தல் கூட்டணி குறித்து அன்புமணிக்கும் ஐயாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. அன்புமணி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்றார். ஐயாவுக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தது. வட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 முக்கிய மாவட்ட செயலாளர்களை தைலாபுரம் அழைத்திருந்தார் ஐயா. “பா.ஜ.க.விடம் கூட்டணி வைத்து, நம் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடம் வாக்கு கேட்டுப் போனால் கல்லால் அடிப்பார்கள்” என அப்போது கருத்துத் தெரிவித்தேன். அதுமுதலே மோதல் முற்றியது.
உங்களை ஏன் கட்சியைவிட்டு நீக்கினார்கள்?
அன்புமணிக்கும் எனக்கும் தொடர்ந்து நேரடி மோதல் இருந்துவந்தது. கடந்த 2017-ல் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமாரை ஒரு வேலையாக சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் அங்குவந்த அமைச்சர் சி.வி. சண்முகம் என்னிடம் பேசினார். இதை என்னுடனிருந்த ஒருவர் புகைப்படமெடுத்து அன்புமணிக்கு அனுப்ப, ஒரு தீங்கும் செய்யாத என்னை நீ அ.தி.மு.க.வுக்கு செல்லப்போகிறாய் என்று பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்கினார்.
நீங்கள் மீண்டும் பா.ம.க.விற்கு செல்ல காரணம் என்ன..?
பா.ம.க.வில் விரிசல் ஏற்பட்டு கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டி ருந்ததால் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தூதராக வந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐயாவே என்னை அழைத்ததால் மீண்டும் கட்சியில் சேர்ந்தேன். எனக்கு வன்னியர் சங்க துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. சமுதாயத்திற்காக உழைக்க வன்னிய சங்கத்தில் பதவி பெற்றிருந்த நிலையில், ஐயா பழைய வன்னியர் சங்கம்போல் நம் கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்று கூறினார். பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அன்புமணியை முதல்வராக்க பரப்புரை செய்துவந்தேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே. ராஜா கூட்டத்திற்கு சென்றபோது 100-க்கும் மேற்பட்ட காரில் சென்று கூட்டத்தை நடத்தியது அன்புமணிக்கு தெரியவந்தது. ஒரு குருவாக நான் உருவெடுப்பேன் என்ற அச்சமும் அவரிடம் இருந்தது. இதனால் காழ்ப்புணர்ச்சியால் என்னை கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நீக்கினார்கள்.
வன்னியர் வாழ்வுரிமை சங்கம் துவங்க காரணம் என்ன?
பா.ம.க.வில் வாரிசு அரசியல் இருக்காது என்ற அய்யாவின் சொல் மாறிவிட்டது. அதேபோல டாக்டர் அன்புமணி, ஏ.கே. மூர்த்தி, அரக்கோணம் வேலு ஆகியோர் மத்திய மந்திரியாக இருந்தபோது வன்னிய சமூகத்தை சார்ந்த எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பார்கள்? வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 தியாகிகளின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்குக்கூட ஒரு வேலைவாய்ப்பையும் இவர்கள் ஏற்படுத் தித் தரவில்லை. முதற்கட்டமாக தற்போது ஏற்படுத்தியுள்ள வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், சமூகத்துக்காக சுதந்திரமாக பாடுபடவுமே இந்த சங்கம்.
தற்போது நீங்கள் கொலை மிரட்டல் விட்டதாக ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் வந்துள்ளதே?
இது முழுக்க முழுக்க அன்புமணியின் அழுத்தத்தின் காரணமாக கொடுத்த புகார். அதை சட்டரீதியாக நான் சந்திப்பேன். வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தில் சேர பல முன்னாள் பா.ம.க., வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் பேசிவருகிறார்கள். இதைத் தடுக்க நடக்கும் அன்புமணியின் சூழ்ச்சியே இந்தப் புகாருக்குக் காரணம்.