கடந்த நான்காண்டு காலமாகவே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு படிப்பவர்களின் தலைவலியாகவும் தலைவிதியாகவும் உருவெடுத்திருக்கிறது நீட் தேர்வு. தேர்வு அச்சம் மற்றும் விரக்தி காரணமாக அனிதா தொடங்கி இதுவரை 20 மாணவச் செல்வங்களை தமிழகம் இழந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த வேகத்தில், மாணவர்களைத் தேர்வுசெய்ய நீட் தேர்வு சமத்துவமான வழிமுறைதானா என ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில், சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்தார்.
அக்குழு, கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிலையில் மக்கள் பார்வைக்கு ஆய்வறிக் கையின் பக்கங்கள் வெளியிடப்பட் டுள்ளது. நீட் தேர்வுக்கு ஆதர வான, எதிரான கருத்துகள், நீட் தேர்வால் தமிழகத் தின் மருத்துவப் படிப்பில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், அதைத் தவிர்க்க அரசு செய்யவேண்டியவை என 165 பக்கங்களுக்கு விரிவாக நீள்கிறது இந்த அறிக்கை.
ஏ.கே. ராஜன் குழுவின் ஆய் வறிக்கை நீட் தேர்வின் பிரச்சனை களாக சில அம்சங்களைச் சுட்டிக் காட்டுகிறது. அவை:
* நீட் தேர்வு ஒரு மாணவரிடம் படிப்படியாக மேம்படும் கல்வித் திறமையைக் கணக்கில் கொள்வ தில்லை.
* நீட் தேர்வில் தேர்ச்சி யென்பது கணிப்பிற்கு அப்பாற் பட்டதாக இருக்கிறது.
* இத்தேர்வு கலாச்சார, பிராந்திய, மொழி மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது.
* கற்றுக்கொள்வதை விடவும், தேர்வில் வெற்றி பெறுவதையே நீட் தேர்வு முதன்மைப்படுத்துகிறது.
இந்த ஆய்வறிக்கை தயாரிப்பின்போது நீட் தேர்வுக்கு ஆதரவான, எதிரான இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு ஆராய்ந்தது ராஜன் குழு. நீட் தேர்வை ஆதரிப்போர், இத் தேர்வை எழுதினால் தேசிய அளவிலான கல்வி நிறுவனங் களில் சேரலாம். நீட் தேர்வை மூன்று முறை எழுத முடியும். மாநில கல்வி முறையைச் சேர்ந்தவர்களும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்விமுறையைச் சேர்ந்தவர்களும் ஒரேமாதிரியாக மதிப்பிடப்படு கிறார்கள். உச்சநீதிமன்றமே நீட் தேர்வு தேவை யெனச் சொல்லிவிட்டது. புரிந்துபடிப்பதை வலி யுறுத்துகிறது போன்ற கருத்துகளை முன்வைத்தனர்.
மாறாக நீட் தேர்வை எதிர்த்தவர்கள், நீட் தேர்வு மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது. நீட் தேர்வு வந்தபிறகு மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது குறைந்திருக்கிறது.
மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் இனியொரு வாய்ப்பில்லை என்பதால் நம்பிக்கை யிழந்து தற்கொலை செய்துகொள்ளக் காரணமாகிறது.
பயிற்சியில்லாமல் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மிக மிகக் குறைவு. நீட் பயிற்சி மையங்களில் சேர லட்சக்கணக்கில் பணம் தேவை. அப்படி இரண்டாண்டு, மூன்றாண்டு பயிற்சி பெற்றவர்களே நீட் தேர்வில் வெற்றிபெறுகிறார்கள். இதனால் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் மருத்துவக் கல்வி படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் 11-ஆம் வகுப்பிலேயே நீட் கோச்சிங் வகுப்பைத் தொடங்கிவிடுகிறார்கள்.
பழங்குடியினர், மிகவும் பின்தங்கியவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், கிராமத்தவர்கள் மருத்துவக் கல்வி பயிலாமல் போவதற்கு நீட் தேர்வு காரணமாகிவிடுகிறது.
நீட் தேர்வுக்குப் பிறகு, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் போல போலியான சான்றிதழ்களைப் பெற்று தமி ழக மாணவர்களின் இடங்களைப் பறிக்கிறார்கள்.
நீட் தேர்வில் 180 கேள்விகளுக்கு மூன்று மணி நேரத்தில் பதிலளித்தாக வேண்டும். இத்தனை கேள்விகளைப் படித்துப் புரிந்துகொள்ளவே கணிசமான நேரம் தேவை. பயிற்சியில்லாமல் இது சாத்தியப்படாது என சுட்டிக்காட்டுகிறது.
நீட் தேர்வு காரணமாக மாநில கல்வி வாரியத்தில் படிப்பவர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு, சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தேடிச்செல்லும் நிலை அதிகரித்துள்ளது. 2017-ல் மாநில கல்வி வாரியத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை 8,93,262 ஆக இருந்தது, அடுத்தடுத்த வருடங்களில் சரிந்து 2020-ல் 7,79,940-ஐ தொட்டிருக்கிறது. அதாவது தமிழ்வழிக் கல்வியை விட்டு கடந்த நான்காண்டுகளில் 1,13,322 பேர் வெளியேறியிருக்கிறார்கள்.
அதேபோல மருத்துவப் படிப்பு எளிதில் கிட்டாதது என ஆகிவிட்டதால், தமிழ்வழிக் கல்வி பயிலுபவர்களில் அறிவியல் பிரிவைத் தேர்ந் தெடுப்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறார்கள். அதாவது முந்தைய ஆண்டுகளில் நான்கு லட்சத்துக்கு நெருக்கமான வர்கள் அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும் நிலை, தற்போது மூன்று லட்சத்துக்கும் நெருக்கமான வர்களே தேர்ந்தெடுக்கும் நிலைக்குச் சரிந்துள்ளது.
அதேபோல மருத்துவக் கல்வி இடம் கிடைத்தவர்களின் விவரங்களை ஒப்பிட்டபோது, நீட் தேர்வுக்கு முன்பாக மாநிலக் கல்வி வழியில் படித்தவர்கள் 2000-க்கும் அதிகமானோருக்கு இடம் கிடைத்த நிலை தற்போது மாறி, மத்திய கல்விவழியில் படித்தவர்களுக்கே அதிகமாக இடம் கிடைப்பதாக மாறியுள்ளது. மாநில கல்வி வழியில் படித்தவர்களுக்கு அபூர்வமாகவே இடம் கிடைக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் விகிதமும் சரிந்துள்ளது.
நீட் தேர்வு வருகைக்குப்பின் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு தயாராகுவோரின் எண் ணிக்கை வருடந்தோறும் சரிந்துவருகிறது. 2020-ல் மட்டும் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையில் 13 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 1,10,971 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதாவது கடந்த ஆண்டைவிட இம்முறை 7000 பேர் குறைவாக தேர்வெழுதியுள்ளனர்.
பலதரப்பட்ட சமூகத்தினருக்கும் மருத்துவக் கல்வியில் உள்ள பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குலைத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியலினத்தினர் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர்.
நீட் தேர்வும் அதில் நடக்கும் முறைகேடு களும் மாணவர்களிடம் பெருமளவு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
குறைவான திறனுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம்பெறுவதையும், தரமான மாணவர்கள் இடம் கிடைக்காமல் போவதையும் கண்கூடாகக் காணமுடிகிறது.
முதுநிலை படிப்பில் 50 சதவிகித இடங்களையும், அதிசிறப்பு மருத்துவப் படிப்பில் 100 சதவிகிதத்தையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிப்பதால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பணியாற்ற மருத்துவரே இல்லாமல் சுகாதாரத்துறை கட்டமைப்பே பாதிக்கப்படும் நிலை எழுகிறது.
மாநிலக் கல்வி வாரியத்தின் மேலே நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தொடக்கத்திலே சரி செய்யாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே நீட் எனும் முட்டுக்கட்டையை அகற்ற தனிச் சட்டம் இயற்றி ரத்து செய்ய குடியரசுத்தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்கிற தீர்வை ஏ.கே.ராஜன் குழு அறிக்கை முன்வைக்கிறது.
அறிக்கை சமர்ப்பித்தாகிவிட்டது, சட்ட மன்றக் கூட்டத் தொடரின் கடைசிநாளில் நீட்டுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றாகியாகி விட்டது. முதல்வர் ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், நீட் எதிர்ப்பாளர்களும் தமிழக மாணவர்களும்.